Monday, December 29, 2008

கோபி கிருஷ்ணனின் "இடாகினி பேய்கள்"

கோபியின் "உள்ளே இருந்து சில குரல்கள்" படித்த பின்பு அவரின் எழுத்துக்களை தேடி படிக்கும் ஆர்வம் மிகுந்தது.மதுரை புத்தக சந்தையில் வாங்கிய "இடாகினி பேய்கள்" தந்த அனுபவம் அலாதியானது.இதை நாவல் என குறிப்பிடுவதை விட கோபியின் நாட்குறிப்புகள் என சொல்லலாம்.இத்தொகுப்பை குறித்து எழுத அதிகமாய் எதுவும் இல்லை.இருப்பினும் கோபியை குறித்து தனிப்பட்ட முறையில் வெகுவாய் அறிந்து கொள்ள முடிந்தது.வெளிநாட்டு நிறுவனங்களில் மூலம் உதவி பெற்று சமூக பணிகள் செய்து வரும் சமூக நல அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய கோபியின் அனுபவங்களின் கோர்வையே இந்நாவல்.



அலுவலக சூழல்,உடன் பணிபுரிந்த நபர்கள்,விருப்பத்திற்குரிய நட்பு,கோபங்கள்,சங்கடங்கள்,எரிச்சல்கள் என யாவற்றையும் வெளிப்படையாய் பகிர்ந்துள்ளார் கோபி.நாவலின் தலைப்பு குறிப்பிடுவது உதவி நாடி வரும் ஏழைகளுக்கு உரிய பணத்தை அளிக்காமல் அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் சில உயர் அதிகாரிகளை.இதற்க்கு முன்னர் இதுபோல எந்த ஒரு எழுத்தாளனையும் இவ்வளவு நெருக்கமாய் உணர்ததில்லை.வாசகனோடு நேரடி உரையாடலாய் அமைந்த இந்நாவல் மிக விருப்பமானவரோடு கை கோர்த்து செல்வது போன்ற பிரேமை தர கூடியது.

கோபி மற்றும் ஆதவனின் எழுத்துலகம் பொதுவாய் கொண்டிருப்பது சமூக கட்டமைப்பின் மீதான கோபம்.கோபி இந்நாவலின் ஒரு இடத்தில் ஆதவனின் கதைகள் தனக்கு பிடித்தமானவை என சொல்லி இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.மிகுந்த அன்பாளனாக,நல்ல நண்பனாக,சிறந்த ஊழியனாக,தேர்ந்த சிந்தனையாளனாக,நகைச்சுவை உணர்வு மிகுந்த சகாவாக தனது ஒவ்வொரு நிலையையும் சமரசம் ஏதுமின்றி விவரித்துள்ளார்.இந்நாவல் படித்து முடித்த பின் மனதை உறுத்திய ஒரு விஷயம்,இத்தகைய எழுத்தாளன்,வாழ்வின் கடைசி நாட்களில் வறுமையில் உழன்று,உதவ யாருமின்றி பரிதாபமாய் இறந்தது.மரணம் கோபியை இவ்வளவு சீக்கிரம் தனதாக்கிகொண்டிருக்க வேண்டாம்.

வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை - 40 ரூபாய்

Monday, December 22, 2008

அ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் "நுகம்" - சிறுகதை தொகுப்பு

அ.எக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை இவரின் படைப்புகளை படிக்கும் ஆவலை தூண்டியது. இச்சிறுகதை தொகுப்பை மதுரை புத்தக சந்தையில் தேடி வாங்கினேன்.அனேகமாக எல்லா கதைகளும் விளிம்பு நிலை கிறித்துவ மக்களை பற்றியது.கடவுள் பக்தி,பிராத்தனைகள்,நம்பிக்கை இவைதாண்டி கிறிஸ்துவ தேவாலய மடங்களில் நிலவும் அதிகாரம்,போலித்தனம்,சுயநலம்,கருணையின்மை போன்றவற்றை தம் கதைகளின் மூலம் மிகக்கடுமையாய் சாடி உள்ளார்.

பெரும்பாலான கதைகள் நாயகனின் பார்வையில் சொல்லப்பட்டவை."பார்வை" சிறுகதை பள்ளி ஒன்றின் கடைநிலை ஊழியனான நேசபாண்டியனின் மனைவி தற்கொலை செய்து கொண்ட பின்,அந்த மரணத்தை குறித்த சமூகத்தின் பார்வையை சொல்லும் கதை."பிலிப்பு" மருத்துவமனை பணியாளர் பிலிப்பு மரணத்தின் தருவாயில் இருக்கும் வேளையில் அவரது கடந்த காலத்திற்கு அழைத்து செல்கிறார் ஆசிரியர்.எல்லோருக்கும் பிரியமானவனாய்,குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவனாய்,நேர்மை தவறாது வாழ்ந்த பிலிப்பு கணவனால் கைவிட பட்ட பெண்ணொருத்தியை மணந்து
அவளின் இரு குழந்தைகளை பட்ட படிப்பு படிக்க வைக்கின்றான்.மரண படுக்கையில் கவனிப்பாரற்று இருக்கும் பிலிப்பின் மனைவி வேறொருவனுடன் சைக்கிளில் இறங்கும் காட்சியோடு கதை முடிகின்றது.




இத்தொகுப்பில் எனக்கு பிடித்த இரு சிறுகதைகள் "மரணத்தின் கூர்' மற்றும் "நுகம்"."மரணத்தின் கூர்" - கல்லறை திட்டது தொழிலாளியின் மகன் இறந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களே இச்சிறுகதை.மகன் இறந்த சோகத்தை வெளிக்காட்டாது காலை முதல் அவன் உடலை அடக்கம் செய்யும் வேலைகளில்
முனைதிருக்கும் நாயகன்,சவபெட்டிக்கு பணம் வேண்டி ஆலய நிர்வாகத்தினரிடம் செல்ல,பணம் இல்லை என கூறி அவனை வெளியேற்றி பிஷம்பின் பொன் விழா கொண்டாட்டத்திற்கு பெரும்தொகை தருவது பற்றி பேசிகொள்கின்றனர்,கடன்சொல்லி உடலை அடக்கம்செய்து விட்டு தனியே அமர்ந்து அவன் கதறி அழுவதை கதை முடிகின்றது.ஆறுதல்,நம்பிக்கை,வேண்டுதல் என யாவும் வாய் வழியே சொல்லி விட்டு நலிந்த மக்களுக்கு செயலில் எதுவும் செய்ய முன்வராத மடத்தின் நிர்வாகம் குறித்த கண்டனங்கள் இத்தொகுப்பு முழுவதும் விரவி உள்ளது.


நுகம் - தேவாலைய தோட்டத்து ஊழியன் படித்த தம் மகளை ஆசிரியை பணியில் சேர்க்க நிர்வாகத்தினருக்கு விருந்து படைத்தது,ஒவ்வொருவராய் தேடி சென்று கெஞ்சி பார்த்து தோல்வியுறும் சோகத்தை சொல்லும் கதை.தலித் எழுத்தாளர் பாமாவின் "கருக்கு" நாவல் இவ்விடத்தில் நினைவிற்கு வந்தது.பாமா மேலோட்டமாய் குறிப்பிட்டு இருந்த கிறிஸ்துவ மடங்களில் பிற்படுத்தபட்டோருக்கு நடக்கும் சில அட்டூழியங்கள் இத்தொகுப்பில் விரிவாய் சொல்லப்பட்டுள்ளது.

இக்கதைகள் தவிர்த்து "கடன்" ,"இருகடித நகல்களும் ஒரு கடிதமும்","மலம்","பேரன்"சிறுகதைகளும் வித்யாசமானவை.கடன் மற்றும் பேரன் சிறுகதைகள் வண்ணதாசனின் எழுத்து சூழலை ஒத்திருந்தது.அதிகம் அறிய படாத இந்த எழுத்தாளர் குறித்து அறிமுகம் செய்த எஸ்.ரா விற்கு நன்றிகள்.எஸ்.ரா தொடர்ந்து சிறந்த புத்தகங்கள்,உலக சினிமா,எழுத்தாளர்கள் குறித்த அனுபவ கட்டுரைகள்(இதற்கு முன்னர் வண்ணநிலவன்,கோபி கிருஷ்ணன்..) என அறிமுகம் செய்து வருவது பெரிதும் உவகை தரக்கூடியது.மேலும் வலைப்பதிவாளர் சுரேஷ் கண்ணனின் (பிச்சை பாத்திரம்) சமீபத்திய கட்டுரை ஒன்றில் சச்சிதானந்தனின் கதையுலகம் குறித்து எழுதி உள்ளார்.



எக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த எஸ்.ரா வின் கட்டுரை


எக்பர்ட் சச்சிதானந்தம் கதையுலகம் குறித்த சுரேஷ் கண்ணனின் பதிவு

வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை - 60 ரூபாய்

Friday, December 19, 2008

இந்திய திரைப்படம் "PAGE 3" - ஓர் நிதர்சன பதிவு!!

இந்தியில் அரிதாய் வெளிவரும் நல்ல படங்களுள் ஒன்று.2005 இல் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர்.இவரின் முந்தைய படம் தபு நடிப்பில் வெளிவந்த "சாந்தினி பார்' வெகுவாய் பாராட்ட பெற்று விருதுகள் பெற்றது.முதல் முறை இப்படம் பார்க்க ஒரே காரணம் கொங்கனா சென்.Mr & Mrs ஐயர் திரைப்படத்தில் வெளிப்பட்ட அவரின் ஆபார நடிப்பே அதற்கு காரணம்.படம் தொடங்கிய பிறகு கொங்கனாவை மறந்து காட்சிகளுக்குள் மூழ்கினேன்.திரை துறை ஜிகினா நிகழ்வுகளை இதற்கு முன் எந்த திரைப்படமும் இது போல பகடி செய்திருக்காது.



மும்பை நகருக்கு வரும் மாதவி(கொங்கனா) பத்திரிக்கை அலுவலகம் ஒன்றில் பணியில் சேர்கிறாள்.திரைத்துறை சார்ந்த செய்திகளை வெளியிடும் பிரிவில் இணைகிறாள்.அதையடுத்து சினி பிரபலங்கள் உடன் நட்பு,இரவு நேர கேளிக்கை விருந்துகள்,விளம்பர படங்களில் நடிக்கும் ஆண் நண்பன் என புது உலகினுள் அவள் நாட்கள் நகர்கின்றது.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பாத்திரம் மாதவியின் தோழியாய் வரும் பேர்ல்,விமான பணிப்பெண்ணான இவர் நவீன,புத்திசாலி பெண்களின் குறியீடு.காதல்,நட்பு,சமூகம்,சினிமா,பெருத்து வரும் போலித்தனங்கள் குறித்த இவளின் பகடி நிறைந்த கருத்துக்கள் ஒத்துகொள்ள வேண்டிய உண்மைகள்.

மெல்ல திரைத்துறை தரும் ஆரவாரங்கள் மாதவிக்கு சலிப்பை தர தொடங்குகிறது,அதற்கு முக்கியமாய் அமைந்த இரு நிகழ்ச்சிகள்.திரைத்துறை சார்ந்த சமூகசேவகி ஒருவரின் மரணத்திற்கு வரும் யாவரும் செயற்கையாய் சோகம் கொண்டு,கூட்டம் கூட்டமாய் தமது சொந்த காரியங்களை பேசி சிரிப்பதை காண்கிறாள்.மாதவியின் மற்றொரு அறை தோழியான பெண் திரைப்பட வாய்ப்பு பெற மிகப்பெரிய நடிகன் ஒருவனால் ஏமாற்ற பெற்று தற்கொலைக்கு முயல்கிறாள்.நடிகனின் போக்கை தனது பாதிரிக்கையில் வெளியிட்ட காரணத்திற்காக மாதவி கிரிமினல் செய்திகள் சேகரிப்பு பிரிவிற்கு மாற்றபடுகிறாள்.

தீவிரவாதம்,குண்டு வெடிப்பு,பாலியல் வன்முறைகள் என நகரில் நடப்பவைகளை சக பத்திரிக்கையாளனான அதுல் குல்கர்னியுடன் சேர்ந்து நேரடியாய் காணும் பொழுது நிஜ உலகம் குறித்த புரிதல் மிகுந்து திரை துறை தந்துவந்த மாயை முற்றிலும் மாற பெறுகிறாள்.படம் முழுதும் நிறைத்து இருப்பவர் கொங்கனா சென்.சமூக அக்கறை உள்ள மாற்று திரைப்படங்கள் ஹிந்தியில் வருவது மிகக்குறைவே,கான்களின் ஆதிக்கத்தில் உழன்று கொண்டிருக்கும் அதன் நிலையை சீர் செய்ய மதூர் போன்ற இயக்குனர்களின் வரவு மிகத்தேவை.இவரின் மூன்றாவது திரைப்படமான 'ட்ராபிக் சிக்னல்" -நெருக்கடி மிகுந்த மும்பை சாலை சிக்னல்களில் சிறு வியாபாரம் செய்யும் இளைஞர்கள் பற்றியது.மும்பை நகரின் பணக்கார பிம்பம் அது தோற்றுவித்துள்ள ஆளுமை இவற்றிற்கு பின்னால் மறைந்து நிற்கும் உண்மை நிலையை தவறாது தன் படங்களில் சுட்டிகாட்டி வருகிறார் மதூர் பண்டார்கர்.

Tuesday, December 16, 2008

ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" - குறுநாவல் தொகுப்பு

ஆதவனின் படைப்புகள் ஆச்சர்யம் கூட்டுபவை.இவரின் "என் பெயர் ராமசேஷன்" மற்றும் "காகித மலர்கள்" தந்த அனுபவம் அலாதியானது,பல விஷயங்கள் குறித்த மாற்று பார்வையை தந்தவை. புதுமைபித்தனின் எழுத்துக்களை போலவே இவரின் எழுத்துகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தி வருது.1977 வெளிவந்த இத்தொகுப்பின் கதைகள் யாவும் கால இடைவெளியை நினைவுறுத்தாது இன்றைய தலைமுறைக்கென சொல்லப்பட்டது போல உள்ளது.ஆதவனின் கதை உலகம் பெரும்பாலும் நவநாகரீக இளைஞர்கள்,யுவதிகள், மேல்தட்டு வர்க்கத்தினர்,அரசு அலுவலகர்கள் - இவர்களின் அக,புற வாழ்வின் நிஜம் மற்றும் போலித்தனங்களை அலசுபவை.



"இரவுக்கு முன் வருவது மாலை" -அசல் ஆதவன் பாணி கதை.நெருக்கடி மிகுந்த மாலை வேளையில் சாலையில் முதன் முதலாய் சந்தித்து கொள்ளும் நாயகனும்,நாயகியும் தயக்கங்கள் ஏதும் இன்றி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அம்மாலை பொழுதை தில்லி வீதிகளில் பேசிக்கொண்டே கழிக்கின்றனர்.அஸ்தமிக்கும் சூரியனின் அழகை நம்மில் எத்தனை பேர் தினமும் ரசிக்கின்றோம்?வானத்தை நிமிர்ந்து பார்க்க நேரம் இன்றி ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திர வாழ்கையின் சோகம் முதற்கொண்டு இவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் சமூக அமைப்பின் மீது எழுத்தாளன் கொண்டிருக்கும் கோபத்தை எடுத்துரைப்பவை.


"சிறகுகள்",கல்லூரி படிப்பு முடிந்து திருமணம் ஆகும் வரை ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் கோர்வை.இத்தொகுப்பில் மிகுந்த ஹாசியம் நிறைந்த கதை இது. படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்லாதிருந்தால் ஏற்படும் குற்ற உணர்ச்சி,வேலை,ஆண்களின் சிநேகம் பொருட்டு சக தோழிகள் மீது ஏற்படும் பொறாமை,எதிர் காலம் குறித்து இயல்பாய் எழும் கேள்விகள் என சராசரி நிகழ்வுகள் யாவும் மிக நேர்த்தியாய் விவரிக்கப்பட்டுள்ளது.நாயகி தனது முந்தைய தலைமுறையோடு தன் காலத்து நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்த்து அதில் உள்ள பெருவாரியான முரனை எண்ணி வியப்பது நமக்கும் நேர்வதே.

"கணபதி ஒரு கீழ் மட்டத்து ஊழியன்" - தில்லி தலைமைசெயலக அலுவலகத்தில் பணிபுரியும் கணபதியின் ஒரு நாள் அலுவலக குறிப்பு.அரசு அலுவலங்களின் தினப்படி காட்சிகளை பகடி கலந்து விளாசுகிறது.அதிகாரம்,பதவி,போலித்தனம் நிறைந்த உயர்மட்டம்,சமயத்திற்கு ஏற்ப முகமூடி மாற்றும் சக ஊழியர்கள் இவர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் கணபதி,வாழ்க்கை சலித்து சொந்த கிராமம் திரும்பி சென்றிடுவோம் என்னும் இனிய நினைவோடு ஒவ்வொரு நாளையும் தொடர்கின்றான்."மலையும் நதியும்" -முற்றிலும் தி.ஜா பாணி கதையாடல்.மனைவியை இழந்த இசக்கியா பிள்ளை கணவனால் வஞ்சிக்கபட்ட தனது இளம் பருவத்து காதலியை ஆண்டுகள் பல கடந்தும் பிரிய மிகுதியால் அரவணைத்து கொள்வதை சொல்லும் கதை.

வெளியீடு - கிழக்கு பதிப்பகம்
விலை - 120 ரூபாய்

Friday, December 12, 2008

ஜே.பி.சாணக்யாவின் "கனவு புத்தகம்" - சிறுகதை தொகுப்பு

விளிம்பு நிலை மனிதர்களின் தின பொழுதை மிகை இன்றி விவரித்த சாணக்யாவின் முந்தைய சிறுகதை தொகுப்பான "என் வீட்டின் வரைபடம்" மிக பிடித்தமானதாய் போனதில் ஆச்சர்யம் இல்லை.இவரின் சமீபத்திய தொகுப்பான "கனவு புத்தகம்" சிறுகதை தொகுப்பும் கொண்டிருந்த எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை.

உடலை முதலீடாய் வைத்து வாழ்வை நகர்த்தும் விதவை தாயையும் ,தாயின் போக்கால் உள்ளுக்குள் மருகும் மகளையும் பற்றிய கதை "ஆண்களின் படித்துறை".இக்கதையின் சில விவரிப்புகள் நிஜத்தில் சாத்தியமா என கருதும்படி அதிர்ச்சி தருவதாய் உள்ளது.வேலையற்ற ஒருவனின் இயலாமையின் உச்சத்தை சொல்லும் கதை "கோடை வெயில்".திருமணமாகி வேலை இன்றி கஷ்டப்படும் நாயகன் வேலை நிமித்தமாய் உதவ வரும் தெரிந்த நபருடன் தன் மனைவி இருந்ததை அறிந்தும் அவனால் ஏதும் செய்ய இயலாது போகும் நிலையை சிறு வலியோடு சொல்லும் கதை.



இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகள் "கறுப்பு குதிரைகள்" மற்றும் "பதியம்". கோவில் திருவிழாக்களில் மேளம் வாசித்து விட்டு பின் வறுமையின் கொடுமையால் சாவுக்கு வாசிப்பவனாக மாறும் ஒரு கலைஞனின் கதை. இன்னயகனை போன்றவர்களை எங்கேனும் நாம் சந்தித்திருப்போம்,ஊருக்கு சேவை செய்து கொண்டு,குடும்பம் குழந்தைகளை வெறுத்து,தனக்கென தேவைகள் எதுவும் இன்றி அந்த நாளின் பொழுதை கழித்தால் போதும் என எண்ணமுடையவர்கள்.சிறுவயதில் தன் தந்தை செய்து அளித்த கறுப்பு குதிரைகளை தன் கற்பனைகளில் சுமந்தபடி நீளும் அவன் நாட்கள் நேர்த்தியாக சொல்லபட்டிருக்கின்றது. மற்றொரு சிறுகதையான 'பதியம்",ஒரு கிராமத்து பெண்ணின் மென்மையான காதலை,அதில் ஏற்படும் அதிர்வுகளை சொல்லுவது.இவை தவிர்த்து குறிப்பிட்டு சொல்லவேண்டிய சிறுகதைகள் "கடவுளின் நூலகம்",கண்ணாமூச்சி மற்றும் "கனவு புத்தகம்".

சாணக்யாவின் எழுத்துக்கள் சமூகத்தின் மீதான மாற்று பார்வையை தோற்றுவிர்ப்பவை,சில அடிப்படை நம்பிக்கைகளை தகர்ப்பவை. மேலும் இவர் கதைகளில் எடுத்தாலும் சில கசப்பான உண்மைகளை மறுப்பதற்கில்லை.நாம் காணாத மனிதர்கள்,சந்தித்திடா நிகழ்வுகள்,முரண் நிறைந்த வாழ்க்கை முறை என சாணக்யா பயணிக்கும் எழுத்துலகம் அவசியம் கவனிக்கபடவேண்டியது.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 90 ரூபாய்

Wednesday, December 10, 2008

எஸ்.ராவின் 'பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்" மற்றும் விசித்ரி

எஸ்.ராவின் சமீபத்திய சிறுகதை விசித்ரி ,ஏதோ ஒரு சம்பவத்தால் மன சிதைவு கண்ட பெண்ணை பற்றிய குறிப்புகளை அடுக்குவது.இந்த சிறுகதை சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்மெய்யில் படித்த எஸ்.ரா வின் "பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை நினைவூட்டியது.முதல் வாசிப்பின் பொழுது பெருத்த சோகத்தையும்,கனத்த மௌனத்தையும் தந்த அச்சிறுகதையை மீண்டும் தேடி படித்தேன்.



மழை கொட்டும் ஒரு இரவில் விஜயலட்சுமி மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு கதை தொடங்குகின்றது.கரிய இருளும்,பெரு மழையும் ஒரு குறியீடே. தோற்றம் சிதைந்து,நடக்க இயலாத நிலையில் மருத்துவ பெண்மணி விஜயலட்சுமியை அழைத்து செல்ல....அவளின் நோய் கூறுகள்,வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. இக்குறிப்புகள் மூலம் திருமண வாழ்வில் கண்ட கசப்பான நிகழ்வுகளால் உளவியல் ரீதியான மாற்றங்கள் கண்டு மன சிதைவிற்கு ஆளான காரணங்கள் மறைமுகமாய் தெரிவிக்கப்படுகின்றன.

தனது மாமனார்,மாமியாரால் மருத்துவமனையில் சேர்க்க படும் விஜயலட்சுமியை தேடி வரும் வயதான அவளின் தந்தை உருக்குலைந்து இருக்கும் தன் மகளின் நிலையை காண சகியாது அவளை அவ்விடத்தை விட்டு அழைத்து செல்கிறார்..இச்சிறுகதையின் கடைசி வரிகள் இவ்வாறாக வருகின்றது,

"உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள்"

பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்

எஸ்.ரா வின் சமீபத்திய சிறுகதையான விசித்ரியும் இதுபோலவே சிறு வயதில் மனநிலை பாதிக்க பெற்ற பெண்ணை சுற்றி நகர்கிறது.இதில் உளவியல் காரணங்களை ஒதுக்கி,சமூகமும், அப்பெண்ணின் குடும்பமும் தனது நிர்வாணத்தை மறைக்க எப்பொழுதும் 20 திற்கும் மேற்பட்ட துணிகளை சுற்றி கொண்டு திரியும் சித்ரலேகாவின் நிலைக்கு காரணம் அறிய முயன்று தோற்று போவதை மெல்லிய மர்ம முடிச்சோடு சொல்லி நகர்கிறது கதை.

விசித்ரி

மதுரை புத்தகக கண்காட்சி

பள்ளி,கல்லூரி காலங்களில் மதுரையில் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் செல்லும் ஒரே இடம் ரயில் நிலையம் அருகில் இருக்கும் மீனாட்சி புத்தக நிலையத்திற்கே.அங்கும் குறிப்பிட்ட எழுத்தாளர்களை தவிர்த்து வேறு நூல்கள் கிடைக்காது.ஆகா பெரும்பாலான நூல்கள் புத்தக கண்காட்சிகளில் அப்பா வாங்கியதாகவே இருக்கும்.சென்றமாதம் மதுரை சென்ற பொழுது ஒரு ஞாயிறு மாலை புத்தக கண்காட்சி(??!!) என்ற பெயரில் நகரில் நடைபெற்ற நாலைந்து இடங்களுக்கு சென்று ஏமாற்றம் அடைந்தது மறக்க முடியாது.

எனவே பெரும் எதிர்பார்ப்பு ஏதும் இன்றியே தமுக்கம் திடலில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு(நவம்பர் 27 - டிசம்பர் 08) சென்றிருந்தேன்.என் எண்ணத்திற்கு மாறாக பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு,உயிர்மெய்,தமிழினி,மீனாட்சி,நேசனல் புக் டிரஸ்ட் அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.வாங்க வேண்டிய புத்தகங்கள்,அதன் ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தின் பெயர்கள் என சின்னதொரு பட்டியலை தயார் செய்து எடுத்து சென்றது சுலுவாய் போனது.




ஏற்கனவே படித்திருந்த ஜே.பி.சாணக்கியாவின் "என் வீட்டின் வரைப்படம்" விளிம்பு நிலை வாழ்கை குறித்த நிதர்சன பதிவு,அய்யனார் பதிவிட்டிருந்த சாணக்கியாவின் சிறுகதை தொகுப்பான "கனவு புத்தகம்" (காலச்சுவடு) மற்றும் வேட்டி தொகுப்பில் கி.ரா ஸ்லாகித்து எழுதி இருந்த சு.ராவின் "அக்கரை சீமையிலே" (காலச்சுவடு) சிறுகதை தொகுப்பையும் வாங்கினேன்.சாருவின் சீடர் என அறியப்பட்ட வா.மு.கோ.மு வின் "கள்ளி" (உயிர்மெய்) மற்றும் ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" (கிழக்கு பதிப்பகம்) ஆகிய இரு நூல்களும் பெரும் தேடலுக்கு பின் கிடைத்தவை.

மிக சமீபத்தில் எட்வர்ட் சச்சிதானந்தத்தின் எழுத்துலகம் குறித்து எஸ்.ராவின் தளத்திலும்,சுரேஷ் கண்ணனின் பதிவிலும் படித்ததும் அவரின் எழுத்துக்களை படிக்கும் ஆர்வம் கூடியது.அவரின் "நுகம்" (தமிழினி) மற்றும் கோபி கிருஷ்ணனின் "இடாகினி பேய்களும்" (தமிழினி) தொகுப்புகள் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.கோபியின் "டேபிள் டென்னிஸ்" தொகுப்பு எங்கு கிடைக்கும் என யாரேனும் கூறினால் நலம்.

மனுஷ்யபுத்திரன்,காலச்சுவடு கண்ணன் தவிர்த்து இலக்கிய முகங்கள் எதுவும் தென்படவில்லை.காவ்யா மற்றும் அன்னம் பதிப்பகங்கள் இல்லாதிருந்தது ஏமாற்றமே.இருப்பினும் உருப்படியாய் ஒரு மாலையை செலவிட்ட திருப்தியோடு வெளியேறினேன்.என்னளவில் பெரும் நிறைவை தருவதாய் அமைந்தது மதுரை புத்தக சந்தை.

நன்றி அய்யனார் & சுரேஷ் கண்ணன்

Monday, December 1, 2008

இமயத்தின் "கோவேறு கழுதைகள்" மற்றும் பாமாவின் "கருக்கு"

சமீபத்தில் படித்த இவ்விரண்டு தலித் நாவல்களும் என்னை மிகவும் பாதித்தன.சில எழுத்துக்களின் மீது இதுவரை கொண்டிருந்த அபிமானம் நொடி பொழுதில் மறைந்தது.தமிழில் வெளிவந்த மிக சிறந்த தலித் இலக்கியமாக இவ்விரு நாவல்களும் கருதப்படுகின்றன.பொதுவாக எந்த நாவல் படித்தாலும் அதன் குறைகளை நீக்கி,பெற்று கொண்டதை எண்ணி நிறைவாய் உணர்வேன்.புனைவாய் சொல்லப்பட்ட சோக கதைகள் கூட அதிக ரணம் தந்ததில்லை.ஆனால் இந்நாவல்களை படித்த பொழுது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு குற்ற உணர்ச்சியே தோன்றியது.

இன்று எங்கள் கிராமத்தில் கூட சக்கிலியர்,பறையர்,வண்ணார் இன மக்கள் தனித்து ஒதுக்கப்பட்டு இருந்த நிலை வெகுவாய் மாறிவருகின்றது,இருப்பினும் கடந்த காலங்களில் இருந்த கட்டுபாடுகள் கொடுமையானவை.தலித் மக்களுக்கு நிகழ்ந்து வரும் கொடுமைகளை கிராமத்து சம்பவங்களோடு மட்டும் சுருக்கி விட முடியாது, நேரில் கண்ட காட்சிகளை எழுத்துக்களாய் வாசித்த பொழுது இவ்விரு நாவல்களோடு மிக நெருக்கமாய் உணர்ந்தேன். தமிழில் வெளிவந்துள்ள மிக சிறந்த தலித் இலக்கியங்களுள் இவ்விரு நூல்களுக்கும் கட்டாயம் இடம் உண்டு.

இமயத்தின் "கோவேறு கழுதைகள்"



பற வண்ணார்களான ஆரோக்கியம் - சவுரி தம்பதியினரின் வாழ்கை குறிப்பே "கோவேறு கழுதைகள்".கதையின் பிரதான பாத்திரம் ஆரோக்கியம்,அவளின் வாயிலாக வண்ணார் இன மக்களின் துன்பங்களை பகிர்ந்துள்ளார் இமயம்.காலையும் மாலையும் மூட்டை மூட்டையாய் துணிகளை வெளுப்பதொடு இவர்களின் பணி முடிவதில்லை,ஊரில் நடைபெறும் திருமணம்,சடங்கு,இழவு என எல்லா நிகழ்ச்சிகளிலும் ஓயாது வேலை - எதிர்பார்ப்புகள் அதிகம் இன்றி.தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து வரும் அடிமை வாழ்கையை ஆரோக்கியமும் சவுரியும் ஏற்று கொண்டது போல அவர்களின் குழந்தைகள் ஏற்கவில்லை.

மாறி வரும் சமூக சூழ்நிலையில் தற்பொழுதைய தலைமுறையினர் படித்து முன்னேறவோ,சுயமாக வேறு தொழில் செய்து பிழைக்கவே விருப்பம் கொள்வது பெரிதும் ஆறுதல் தரும் செய்தி.வீடு வீடாக சென்று இரவு பொழுதுகளில் ராச்சோறு வாங்க தன் மகன் பீட்டரை ஆரோக்கியம் அழைக்கும் பொழுது,அச்சிறுவனுக்கும் அவளுக்குமான உரையாடல் உருக்கமானது.எதிர்காலம் குறித்த திட்டமிடுதலும்,குழந்தைகள் மீதான பிரியமும்,கடந்த கால நினைவுகளோடும் நாட்களை கடத்தும் ஆரோக்கியத்தின் நாட்கள் அவர் நினைத்ததை போல அன்றி மாற்றம் காணாமல் சோகத்தின் நீட்டிப்பாய் தொடர்கின்றது. சமூக அவலத்தின் நிதர்சன புனைவான இந்நாவல் தமிழில் மிக முக்கியமான பதிவு.

நூல் வெளியீடு - க்ரியா பதிப்பகம்

பாமாவின் "கருக்கு"



தலித் எழுத்தாளரான பாமாவின் முதல் நாவல் இது.தலித் மீதான சமூகத்தின் பார்வையை தனது சொந்த அனுபவங்கள் பகிர்கிறார்.மாற்ற சாதியினரிடம் இருக்கும் தீண்டாமை மனோபாவம்,கிராம நிகழ்ச்சிகளிலும்,ஊர் திருவிழாக்களிலும் பங்கு கொள்ள முடியாது தனித்து விட பட்ட சோகங்கள்,அக்காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தலித் மாணவர்கள் எதிர் நோக்கிய அவமானங்கள் என ரணங்களின் வேதனையாய் நீள்கிறது இப்பதிவு.

ஜாதியை முன்வைத்து எதிர்நோக்கிய தடைகளையும் அவமானங்களையும் தாண்டி பள்ளி மற்றும் கல்லூரியில் தேர்ச்சி பெற்று தன் சமூகத்து குழந்தைகளுக்கு சேவை செய்யும் பொருட்டு கிறிஸ்தவ மடத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை கூறும் இடங்கள் முக்கியமானவை.பிற்படுதபட்டோருக்கென செயல் படும் கிறிஸ்துவ மடங்களிலும் தீண்டாமை கொடுமை நிகழ்வதை பாமா தனது நேரடி அனுபவங்களால் விவரிக்கும் பொழுது சிற்சில நம்பிக்கைகளும் தகர்கின்றன.

தற்சமயம் சிறிய கிராமம் ஒன்றில் ஆசிரியராய் பணிபுரியும் பாமா தன்னை ஒரு எழுத்தாளராய் அங்கு அடையாளம் காட்டி கொள்ளாது வெகு எளிமையாய் உரையாடியது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் புகைப்பட கலைஞர் புதுவை.இளவேனில் கூறி இருந்தது நாவல் படிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது."கருக்கு" என்னளவில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்திய பதிவு.

வெளியீடு - நர்மதா பதிப்பகம்

Monday, November 24, 2008

"வேட்டி" - கி.ராவின் சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப்பு

கி.ரா வின் கதைகள் யாவும் கரிசல் மண்ணின் அனுபவ பகிர்தல்கள்.சற்றே கற்பனை கலந்து கேட்பவனை தன்வச படுத்த கதை சொல்லும் யுக்தி கதை சொல்லிகளுக்கே உண்டானது.அவ்வகையில் கி.ரா வின் கதைகளில் வரும் கற்பனை காட்சிகள் சுவாரசியமானவை.சில எழுத்துக்கள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காத வசீகரத்தை கொண்டிருப்பவை,கி.ரா வின் எழுத்துக்களை போல.நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படித்த பொழுது இத்தொகுப்பு தந்த நிறைவு அலாதியானது.

கரிசல் பக்கத்து சம்சாரிகளின் நித்ய ஆடை வேட்டி.துங்கா நாயக்கரின் ஒரே ஒரு வேட்டி கிழிந்து விட கவலையில் அமர்ந்து அவர் வேட்டி குறித்து தம் சிந்தனையை ஓட விடுகிறார்.ஊரில் உள்ள ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தன் வேட்டியை பராமரிகின்றான் என நகைச்சுவை கலந்து சொல்லுகின்றது "வேட்டி" சிறுகதை. சீவி,சிங்காரித்து,மை பூசி அழகு பார்க்க கரிசல் பெண்களுக்கு நேரமும் இல்லை விருப்பமும் இருக்காது.பிறந்தது முதல் வீட்டு வேளையிலும்,காட்டு வேளையிலும் நாட்களை கழித்த பெண்ணொருத்தி திருமணம் அன்று தலையில் வைத்த பூவின் வாடை தாளாது மயங்கி விழுந்த கதை "பூவை".

இத்தொகுதியில் பெரும்பாலான கதைகள் கரிசல் பக்கத்து பெண்களை மையமாய் கொண்டவை.வேலை..வாழ்கையே வேலை சிறுகதை சம்சாரி வீட்டு பெண்ணொருத்தியின் காட்டிலும்,வீட்டிலும் கழியும் ஒரு நாள் பொழுதினை விவரிப்பது.கால சுழற்சியில் விவசாய வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்களை வயதான சம்சாரியின் பார்வையில் சொல்லும் கதை "எங்கும் ஒரே நிறை".மற்றும் புதிதாய் திருமணமான தம்பதியருகுள்ளான பிரியத்தை சொல்லும் கி.ரா வின் பிரபலமான சிறுகதை "கனிவு"ம் இதில் அடக்கம்.




இத்தொகுதியில் அமைந்த சற்றே நீண்ட சிறுகதை,"கரிசல் காட்டில் ஒரு சம்சாரி".எனக்கு பிடித்த சிறுகதையும் கூட.துரைச்சாமி நாயக்கர் - உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு,விவசாயத்தில் புதிய தந்திரங்களை கையாண்டு,பண விஷயத்தில் கருமி தனம் செய்து காண்பவர் ஆச்சர்யப்படும் வண்ணம் வாழ்ந்த சம்சாரி.உளவுக்கு மாடு பிடிப்பது,பஞ்ச காலத்திற்கு முன்பே தானியங்கள் சேமிப்பது,உறவுகளை விட்டு விலகியே இருந்து பணத்தையும்,சச்சரவுகளையும் குறைப்பது,பெரு மழைகால இரவில் வயலில் சென்று நீரின் தடம் மாற்றுவது,அதிக விலை பெறுமானமுள்ள தோட்டத்தை பேச்சு சாதுர்யத்தால் குறைவாய் பேசி முடிப்பது என செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் திட்டமிடுதலை கையாண்ட துரைசாமி நாயக்கரின் கதையை கதை சொல்லி தம் நண்பருக்கு சொல்வதை அமைந்துள்ள இக்கதை சில இடங்களில் எனக்கு என் தாத்தாவை நினைவூட்டியது.

சிறுகதைகள் தவிர்த்து கி.ராவின் சில கட்டுரைகளும் இதில் உண்டு.தமது கிராமமான இடைசெவல் குறித்த கி.ராவின் "எங்கள் கிராமம்".தாம் முதலில் எழுதிய கடிதம் குறித்தும் நினைவுகளை,கதைக்கு கரு உருவாக காரணமாய் அமைந்த சில நிகழ்ச்சிகளையும் குறித்து விரிவாய் பதிவு செய்துள்ளார்.இதில் புதுமைபித்தனின் "துன்பக்கேணி" மற்றும் சு.ரா வின் "அக்கரை சீமையிலே" ஆகிய கதைகள் சிறப்பானவை என குறிப்பிட்டு சொல்லி உள்ளார்.சிறுகதைகள்,கட்டுரைகள் தவிர்த்து கி.ரா வின் பல கடிதங்களும் இதில் உண்டு.மொத்தத்தில் கி.ராவின் கதைகள்,கட்டுரைகள்,கடிதங்கள் என யாவும் சேர்ந்த அறிய தொகுதி இது.

வெளியீடு - அன்னம் பதிப்பகம்

Friday, November 21, 2008

"Me You Them" - பிரசிலிய திரைப்படம்



ஒரு ஆண் தன் வாழ்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் சந்தித்த பெண்களை,அவர்களோடு கொண்டிருந்த காதலை,சிநேகத்தை சொல்லும் ஆட்டோக்ராப் திரைப்படம் வெளிவந்த சமயம் இதே கதை ஒரு பெண்ணை மைய படுத்தி வெளிவந்தால் சமூகம் ஏற்குமா என்ற கேள்வி பரவலாய் இருந்தது.அதற்கான சூழலும்,தைரியமும் தற்சமயம் இங்கில்லை.பிரேசிலில் நடந்த நிஜ கதையை மையமாய் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் மூன்று கணவர்களோடு ஒரே வீட்டில் வசிக்கும் பெண்ணை பற்றியது.படம் பார்க்கும் பொழுது பெரிய அதிர்ச்சியோ,எரிச்சலோ ஏற்படவில்லை,மெல்லிய புன்னகையோடு அதன் போக்கை ஏற்றுக்கொள்ள முடிந்தது.

தாயை இழந்த டர்லீன் கைகுழந்தையோடு அவதியுறும் வேளையில் சற்றே முதியவனான வசதி படைத்த ஓசியாசை மணக்கிறாள்.ஒசியாசின் உறவினான ஜெசின்கோ தன் தாயின் மரணத்திற்கு பிறகு ஓசியாசோடு தங்கி பிழைக்க வருகின்றான்.தன் மீது பிரியம் கொள்ளும் ஜெசின்கோவை ஏற்று குழந்தை பெறுகிறாள்.எப்பொழுதும் வானொலி கேட்டபடி உறங்கும் ஓசியாஸ்,வீட்டு பராமரிப்பு வேளைகளில் தன்னை மூழ்கடித்து கொண்ட ஜெசின்கோ - நாட்கள் செல்ல செல்ல இவ்விருவருக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை வெறுப்பை தர மெய்யான அன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் கரும்பாலையில் வேலை செய்யும் அழகிய இளைஞனான சிரோவின் உறவை பெறுகிறாள்.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது இக்கதை பெரும் நகைப்பிற்குரியதாய் தோன்றலாம்.தேர்ந்த இயக்கமும்,வெகு இயல்பான நடிப்பும் நம் பார்வையை மாற்றி அமைக்கின்றன.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு விஷயங்கள் படம் நிகழும் இடம் மற்றும் பின்னணி இசை.வடகிழக்கு பிரேசிலில் அமைந்த புழுதி பறக்கும்,வறண்ட கிராமம் ஒன்றில் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மஞ்சள்,ஆரஞ்சு,பிரவுன் என மாறி மாறி காட்சிக்கு தகுந்தாற்போல ஒளி அமைப்பு சிறப்பாய் கையாளப்பட்டுள்ளது.மழை காணாது வறண்ட நிலங்களும்,ஆலிவ் மரங்களும் காமிராவில் பதிவு செய்துள்ள விதம் அருமை. மனதை வருடும் பின்னணி இசை நெருடலின்றி படம் முழுதும் தொடர்கின்றது.வசனம் ஏதும் இன்றி பத்து நிமிடங்களுக்கு மேலாக நீளும் இறுதி காட்சிக்கு பின்னணி இசை பெரும் பலம்.

தனக்கான தேவைகள் எதையுமே டர்லீன் திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ளவில்லை.வாழ்கை அதன் போக்கில் ஏற்று நடத்தும் பெண்ணாய் இருக்கின்றாள். டர்லீனின் கணவர்கள் அவளின் விபரீத முடிவுகளை கண்டு அவளிடம் எதிர்ப்பு காட்டாது அவள் வாழ்கையை அவள் முடிவில் விட்டுவிட்டு தாமும் அவளை பிரிய மனம் இன்றி ஒன்றாய் வாழ்வை தொடர்கிறார்கள். 2000 ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் கேன்ஸ்/டோக்யோ/டொராண்டோ திரை விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

Thursday, November 20, 2008

வாசிப்பு..தனிமையின் தேடல்!!

சில விஷயங்கள் எத்தனை முறை பேசினாலும் அலுப்பு தருவதில்லை.இலக்கியம்,இசை,சினிமா இவை குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும்,வெவ்வேறு பார்வைகள்,ரசனைகள்,விமர்சனங்கள்,எதிர்ப்புகள்..எது எப்படியாயினும் கால சுழற்சியில் நம்மை விட்டு நீங்காது சில காரியங்கள் தொடர்ந்து கொண்டே வருபவை..வாசிப்பும் அதில் ஒன்று.வாசிப்பு அனுபவம் குறித்த தொடர் பதிவிற்கு அழைத்த நர்சிமிற்கு நன்றி..இப்பதிவில் எனது தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை சம்பவங்கள் கோர்வையோடு சொல்லாமல்,முடிந்த வரை படித்த நூல்களை மேற்கோள் காட்டியே எழுத முயன்றிருகின்றேன்.

எங்கள் வீட்டில் சிறிய புத்தக அலமாரி உண்டு,சிறிதும் பெரிதுமாய் நூற்றிற்கும் மேலான புத்தகங்கள் இருக்கும்.இசையும்,இலக்கியமும் ரசிக்க கற்று தந்தது அப்பா.எதை படிப்பது,படித்தால் புரிந்து கொள்ள முடியும் என புத்தகங்களை தரம் பிரித்து எனக்கு பரிந்துரைத்தும் அப்பா.இலக்கியம் குறித்தும்,ராஜாவின் இசை குறித்தும் அப்பாவோடு உரையாடும் பிரிய தருணங்கள் விருப்பதிற்குரிய ஒன்று.


முதல் வாசிப்பு என்றதும் நினைவில் வந்தது சிறுவர்மலர் - கேலி சித்திரங்கள்,நீதி கதைகள்,வினா விடை,புதிர்,தொடர் கதைகள் என குழந்தைகளுக்காகவே வடிவமைக்க பெற்ற அந்த இதழில் படித்த பல கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றது.ராணி காமிக்ஸ்/இரும்புக்கை மாயாவி/அம்புலி மாமா கதைகள் என கழித்த விடுமுறை நாட்கள் மறக்க முடியாதவை.வாசிப்பு கற்பனை திறனை வளர்க்க பெரும் உந்துதல்..ஆங்கில திரைப்படங்களை ஒத்த சாகச காட்சிகள் நிறைந்த மாயாவி கதைகள்,ஓங்கி வளர்ந்த பெண்களும்,குடுமியிட்ட புஷ்டியான ஆண்களும் சித்திரங்களாய் நிரம்பிய அம்புலி மாமாவின் நீதி கதைகள் என குழந்தை பருவத்து புத்தகங்கள் குறித்து சமீபத்தில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த பொழுது திரும்ப அப்புத்தகங்களை படிக்க ஆவல் மிகுந்தது.

>


பேரதிசியமாய் வியந்து படித்த நாவல்கள் "சிந்துபாத்" மற்றும் "அலாவுதீனும் அற்புத விளக்கும்".மாமா வீட்டு புத்தக அலமாரியில் சுஜாதா,பாலகுமாரன் நாவல்களுக்கு மத்தியில் இருந்த சிறுவர் நாவல்களான "தெனாலி ராமன் கதைகள்","அக்பர்- பீர்பால்","சிந்துபாத் சாகசங்கள்","ட்விங்கிள்" மற்றும் அப்பா பிறந்த நாளுக்கு பரிசளித்த "எறும்பும் புறாவும்" , "ஈசாப் நீதி கதைகள்" ஆகியவை இன்றும் என் புத்தக அலமாரியில் உள்ளவை.ஆரம்ப கால வாசிப்பை குறித்து இவ்வளவு விரிவாய் எழுத எழுத எனக்கே ஆச்சர்யம் உண்டாகின்றது. தொலைக்காட்சியும்,கணினியும் குழந்தைகளின் நேரத்தை ஆக்ரமித்து கொண்டுள்ள தற்பொழுதைய சூழலில் நம் காலத்தில் வாசிப்புக்கள் சாத்தியமானத்தில் வியப்பில்லை.

இலக்கியம் என தரம் பிரித்து வாசித்த முதல் நாவல் கி.ரா வின் "பிஞ்சுகள்",அகாதமி விருது பெற்ற சிறுவர்களுக்கான இந்நாவலை படிக்க சொல்லி அப்பா கொடுத்த கணம் இன்றும் நினைவில் உள்ளது.அந்நாவலில் வரும் வேதி நாயக்கர் கதாபாத்திரம் எனக்கு மிக பிடித்த கதை மாந்தர்களுள் ஒன்று.பள்ளி இறுதி ஆண்டுகளில் சாருவின் "கோணல் பக்கங்கள்" படித்த பின் அவரின் எழுத்தின் வசியம் மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் ஆனது, பின் படிக்க தொடங்கியது வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் எழுத்துக்கள்,எதார்த்த நடுத்தர வாழ்வை இயல்பு மாறாமல்,கவித்துவம் கலந்து கூறிய இருவரின் நடையும்,எளிமையும் இவர்களின் எல்லா படைப்புகளையும் தேடி தேடி படிக்க செய்தது.

கி.ரா வின் "கோபல்ல கிராமம்" ,எழுவது அவ்வளவு கடினம் அல்ல என உணர்த்திய நாவல்,கதை சொல்லியிடம் கதை கேட்பது போன்ற உணர்வை தந்த இந்நாவலின் பல காட்சிகளை என் கிராமத்து நிகழ்வுகளோடு சுளுவாய் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது.இன்று நடைமுறையில் இல்லாத கரிசல் பழக்க வழக்கங்கள் பலவற்றை விரிவாய் எடுத்துரைக்கும் இந்நாவல் ஒரு அறிய பொக்கிஷம்.

கல்லூரி நாட்களில் வெளிவந்த எஸ்.ராவின் விகடன் தொடர் கட்டுரைகள் என்னையும் ஈர்த்ததில் வியப்பில்லை.தனது பயண அனுபவங்களை,சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிக நுட்பமாய் எழுத்தில் வடிக்கும் எஸ்.ரா வின் எழுத்துக்கள் அந்த நேரத்தில் பெரும் ஆறுதலாய் இருந்தது.அழிந்து வரும் நாட்டுபுற கலைகளை தனது பயண அனுபவத்தோடு விவரித்துள்ள அவரின் "இலைகளை வியக்கும் மரம்" தொகுப்பிற்கு எனது விருப்ப பட்டியலில் எப்பொழுதும் இடம் உண்டு.இவை தவிர்த்து என்னை மிகவும் ஈர்த்த நூல்கள் தகழியின் "தோட்டி மகன்",யு.ஆர்.அனந்த மூர்த்தியின் "சம்ஸ்கார",ஜெயகாந்தனின் "ஒரு வீடு,ஒரு மனிதன் ஒரு உலகம்" மற்றும் "என்னை போல் ஒருவன்",பஷீர் மற்றும் வைக்கம் முஹமது மீரானின் படைப்புகள்.

கி.ரா,தி.ஜா,வண்ணதாசன்,வண்ணநிலவன்,சாரு,சுஜாதா என சிறு வட்டத்திற்குள் பயணித்த எனது வாசிப்பு விஸ்தாரம் பெற்றது சென்னை வந்த பின்னரே.பெரும்பாலான நாவல்கள் இலக்கிய நண்பர்கள் பரிந்துரைத்ததே!அதில் முக்கிய நாவல்களாய் நான் கருதுபவை பா.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி",கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்",ஜி.நாகராஜனின் "நாளை மற்றும் ஒரு நாளே" ,ஆதவனின் "ஏன் பெயர் ராமசேஷன்",கந்தசாமியின் "சாயா வனம்" மற்றும் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகள்.
விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த ஜி.நாகராஜன் மற்றும் சாணக்யாவின் பதிவுகள் அது வரை படித்திராத எவரும் எழுத தயங்கும் உண்மை நிலையை விவரிப்பவை.

காண கிடைக்காத உலகை காண்பித்தும்,அன்றாட சந்திக்கும் மனிதர்களை வேறு சூழ்நிலைக்கு பொருத்தி உலாவவிட்டும்,இடத்திற்கு இடம் வேறுபடும் வாழ்கை சூழலை,வாழ்வின் அவலங்களை எடுத்துரைக்கும் ஒவ்வொரு வாசிப்பும் ஒரு புது அனுபவம் தந்தபடி தொடர்கின்றது.வாசிப்பு கட்டாயப்படுத்தி வருவதில்லை, இயல்பாய் சுய ஆர்வத்தின் பேரில் வருவது, எனினும் ஏதேனும் ஒரு உந்துதல் அவசியம்.வாசிக்கும் பழக்கத்தை நம்மோடு நிறுத்தி விடாது மற்றவர்களுக்கு முடிந்தவரை பரிந்துரைக்க வேண்டும்,அதிலும் முக்கியமாய் குழந்தைகளுக்கு.தமிழ் வாசிப்பு என்பது கொடிய விஷத்தை விட மோசமாக தோன்றுகிறது தற்பொழுதைய கணினி யுக குழந்தைகளுக்கு,வாசிப்பின் அவசியமும்,தேவையும் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.

இத்தனை நீண்டதொரு பதிவை நான் எழுவது இதுவே முதல் முறை.வாசிப்பு குறித்து எழுத இன்னும் இருக்கின்றது படித்து,ரசித்த நூல்களை நினைவில் உள்ள மட்டும் பகிர்துள்ளேன்.தொடர்ந்து வாசிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நான் அழைப்பது

மாதவராஜ்
உஷா
குப்பன்_யாஹூ
அனுஜன்யா

Thursday, November 13, 2008

நீல.பத்மநாபனின் "பள்ளிகொண்டபுரம்"

மிக சமீபத்தில் வலைப்பதிவு ஒன்றில் கணவனையும்,தம் குழந்தைகளையும் விட்டு வேறொரு ஆணுடன் சென்று விட்ட நண்பனின் மனைவி,இதை எதிர்பார்க்காத நண்பனின் நிலை குறித்த பதிவை படித்த பொழுது மாறிவரும் சமூக சூழலில் பெற்ற பிள்ளைகளை விட்டு வேறு இடம் செல்லும் பெண்களின் மனநிலை குறித்து நினைக்கவே அருவருப்பாய் இருந்தது.குடும்பத்தை விட்டு பிரிய தனிப்பட்ட காரணங்கள் பல இருப்பினும் அதற்கு பலியாகும் ஒன்றும் அறியா குழந்தைகள் பாதிக்கப்படுவது சகித்து கொள்ள முடியாதது.
இது போலவே இந்நாவலும் தன்னையும்,தன் இரு குழந்தைகளையும் விட்டு வேறு ஆணை மணந்த மனைவியின் துரோகத்தை மறக்க முடியாது துன்புறும் அனந்த நாயரின் மனவோட்டத்தை,அவர் பார்வையில் சொல்லுகின்றது.



இரண்டே நாட்களில் நடக்கும் சம்பவங்களோடு,அனந்த நாயரின் மறக்க நினைக்கும் துர் நினைவுகளோடும் கதை மிக எளிமையாய்,நேர்த்தியாய் சொல்லபட்டிருக்கின்றது.
தம் மனைவி கார்த்திகாயினியை பெண்பார்க்க சென்ற பொழுதின் நினைவுகள்,திருமணத்திற்கு பிறகு நகரின் விழா கால கொண்டாட்டங்கள்,மனைவியோடு சந்தோஷித்து இருந்த தருணங்கள்,பின் டி.பி நோய் தாக்கி தான் மருத்துவமனையில் கழித்த நாட்கள்,தன் உயர் அதிகாரி சிதம்பரம் தம்பி கார்த்திகாயினி மீது விருப்பம் கொண்டு அவளை மணக்க செய்த மறைமுக காரியங்கள் என ஒவ்வொரு நிகழ்வையும் அந்த பொழுதின் தம் கொண்டிருந்த மனநிலையோடு எண்ணி பார்க்கிறார் அனந்த நாயர்.

ஒரு மனிதனின் துன்பம் நிறைந்த கடந்த கால வாழ்கையை மட்டும் சொல்லும் நாவலாய் இதை எடுத்து கொள்ள முடியாது.காரணம் மிக அழகாய் வர்ணிக்கபட்டுள்ள பத்மநாபபுர நகரம்.நகரங்கள் குறித்த செழுமையான வர்ணனைகள் மிக கொஞ்ச நாவல்களில் மட்டுமே கிட்டும்.இந்நாவல் அவ்வகையில் மிகச்சிறந்த பொக்கிஷம்.இருபது வருடத்திற்கு முன்பும்,தற்பொழுதும் என மாறி மாறி நகரின் தெருக்கள் ,விழா கால கொண்டாட்டங்கள் ,அரண்மனை காரியங்கள் ,பத்மநாப கோவிலின் மெருகேறி வரும் அழகு ,சங்கு கடற்கரை ஆகியவை குறித்த விவரிப்புகள் யாவும் நிஜ காட்சிகளாய் நம் மனகண்ணில் விரிகின்றது.

இந்நாவலின் ஆசிரியர் நீலபத்மநாபன் தமிழிலும்,மலையாளத்திலும் பல நாவல்கள் எழுதியுள்ளார்.சாகித்திய அகாதமி விருது பெற்ற நீலபத்மநாபனின் வலைத்தளம் அவரின் படைப்புகள்,பேட்டி,பெற்ற விருதுகள் குறித்த தகவல்கள் கொண்டுள்ளது.

நூல் வெளியீடு : மாணிக்கவாசகர் பதிப்பகம்

Thursday, November 6, 2008

பெருமாள் முருகனின் "ஏறுவெயில்"

கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் இழப்புகளை
மிக விரிவாய் நாயகனின் பார்வையில் சொல்லும் நாவல் "ஏறு வயல்".சமுதாய மாற்றங்களினால் கிராமங்கள் மறைகின்றன,விலை நிலங்கள் அழிகின்றன,குடும்ப உறவுகளுக்குள்ளான பிரியங்கள் பின் தள்ளப்பட்டு பணம் முதன்மை பெறுகின்றது இவை யாவையும் ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளோடு சொல்லி இருக்கின்றார் பெருமாள் முருகன்.எந்த வித சமரசமும் செய்து கொள்ளாது கையாண்டுள்ள எழுத்து நடை,கோவை வட்டார பேச்சு மொழி நாவலின் எதார்த்த தன்மையை கூட்டுபவை.

காலனி வீடுகள் கட்ட அரசாங்கத்திற்கு தம் வீட்டையும்,விளை நிலங்களையும் விற்றுவிட்டு பிழைக்க வழி தேடி பிரிகின்றனர் பொன்னையனின் உறவினர்கள்.அந்த சோகத்தின் நீட்டிப்பாய் தொடர்கின்றன பின் வரும் நாட்கள்.தினமும் பணத்தை முன்வைத்து தாய் தந்தைக்கு இடையே நடக்கும் சண்டைகள்,பிள்ளைகளால் தவிர்க்க படும் பொன்னையனின் தாத்தா - பாட்டி,தீய பழக்கங்களுக்கு ஆளாகும் அண்ணன்,சுயநலம் மிகுந்து அறுபடும் உறவுகள் என தன்னை சுற்றி நடப்பவைகளை மௌனியாக கவனிக்கும் பொன்னையனின் பார்வையில் கதை நகர்கின்றது.



1980 களில் கதை நிகழ்வதாய் உள்ளது.அந்த கால கட்ட அரசியல்,சினிமா குறித்த கிராமத்து மக்களின் ரசனை/ பார்வை,திருவிழா நேர கலாட்டாக்கள்,கிராமத்தில் இருந்து புதிதாய் கல்லூரிக்கு செல்லும் மாணவனின் அனுபவங்கள் என கதோயோட்டதொடு சேராமல் துண்டு துண்டாய் பல காட்சிகள் வர்ணனை செழிப்போடு வருகின்றது.இருப்பினும் அக்காலகட்ட விவரிப்புகள் சுவாரஸ்யம் கூட்டுபவையே.

இந்நாவலின் மனிதர்களை சுலபமாய் இருவகையாய் பிரிக்கலாம்.வாழ்வும்,சூழலும் மாறினாலும் மண்ணின் மீதும்,சக உறவுகள் மீதும் கொண்டிருக்கும் பிரியம் குறையாது இருப்பவர்கள்.பொன்னையன்,பொன்னையனின் அப்பா,தாத்தா,பாட்டி இவ்வகையினர்.சூழ்நிலைகேற்ப தம்மை வளைத்து கொண்டு பணத்தை பிரதானமாய் கொண்டு அந்தந்த நேர பொழுதை கழித்தால் போதும் என்னும் மனநிலை கொண்ட பொன்னையனின் தாய்,அக்கா,தி.மு.க வின் மொண்டி ராமு ஆகியோர்.இரு வகையினருக்கும் பொதுவாய் அமைந்து இருப்பது ஜாதிதிமிர் மட்டுமே.

நாவல் குறித்த தம்முடைய உரையில் எழுத்தாளர் விக்ரமாதித்யன் தமிழின் இதுவரை வெளிவந்துள்ள சிறந்த நாவல்களான "புயலிலே ஒரு தோணி","நித்ய கன்னி","நாளை மற்றும் ஒரு நாளே" ,"ஒரு புளிய மரத்தின் கதை" வரிசையில் இந்நாவலும் சேர்த்தி என குறிப்பிட்டுள்ளார்.அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

நூல் வெளியீடு - மருதா பதிப்பகம்

Friday, October 31, 2008

பாவண்ணனின் "எனக்கு பிடித்த சிறுகதைகள்" மற்றும் "கடலோர வீடு"

நாவலோ சிறுகதையோ படிக்கும் பொழுது அதன் மனிதர்களும்,நிகழ்வுகளும் ஏதோ ஒரு இடத்தில் நமக்கு மிக நெருக்கமாய் தோன்றலாம்.அவ்வாறு தான் மிகவும் நெருக்கமாய் உணர்ந்த சிறுகதைகளை தனக்கு நேர்ந்த நிகழ்ச்சிகளின் பின்னணி கொண்டு தொகுத்துள்ளார் பாவண்ணன்.தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் அனைவரின் சிறுகதைகளும் இதில் அடக்கம்.நாம் படித்த மற்றும் படிக்காத சிறுகதைகளை குறித்து முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மிக எளிமையாய் சொல்லியுள்ளார் பாவண்ணன்.


எனக்கு பிடித்த வண்ணதாசனின் "தனுமை" சிறுகதை மிக பிடித்தமானதாய் மாறிபோனது பாவண்ணனின் விமர்சனம் படித்த பின்னரே.சிறிதும் ஒத்து போகாத மனநிலை கொண்ட இருவர் ஒரே அறையில் தங்க நேரும் சங்கடத்தை சொல்லும் ஆதவனின் "ஒரு அறையில் இரு நாற்காலிகள்',விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை மிகையின்றி சொல்லும் ஜி.நாகராஜனின் "ஓடிய கால்கள்", விதவை தாயின் மனநிலையை சொல்லும் அசோகமித்ரனின் "அம்மாவுக்காக ஒரு நாள்", புதுமைபித்தனின் "மனித எந்திரம்" , சு.ரா வின் "பள்ளம்" என ஒவ்வொரு சிறுகதையையும் ரசித்து தம் அனுபவ நிகழ்ச்சிகளோடுகூறியுள்ளார் ஆசிரியர்.



பாவண்ணனின் சிறுகதை தொகுப்பு "கடலோர வீடு" .பெரும்பாலான கதைகள் மனிதனின் தனிப்பட்ட மனநிலையை,விருப்பங்களை முன்னிறுத்தி சொல்லப்பட்டவை.பெரியதொரு பறவைகள் சரணாலயத்தை விருப்பத்தோடு பராமரிக்கும் ஒரு முதியவரின் மனபோராட்டங்களை சொல்லும் கதை "பறவைகள்".
புராண நிகழ்வின் புனைவாக கிருஷ்னையை மணக்க வைக்கப்படும் சுயம்வரத்தில் வென்றிட துடிக்கும் துரியோதனனின் ஒவ்வொரு நொடி மனவோட்டத்தையும் விவரிக்கும் கதை "இன்னும் ஒரு கணம்".

முதியோர் இல்லத்தில் தங்க வைக்கபட்டிருக்கும் நண்பனின் உறவினரை காண செல்லும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை,தாள முடியாத சோகத்தில் தள்ளும் அப்பெண்மணியின் நிலையை வெகு நேர்த்தியாய் சொல்லும் கதை "விளிம்பின் காலம்" .பெருகி வரும் முதியோர் இல்லங்கள் மலிந்து வரும் பந்த பாசத்தை மறைமுகமாய் உணர்துபவையே!!நவீன உலகில் பிராணிகளுக்கு அளிக்கப்படும் மதிப்பும்,பிரியையும் சக மனிதர்களுக்கு தரப்டுவதில்லை என்பதை சற்றே நகைச்சுவை கலந்து சொல்லும் சிறுகதை "பாதுகாப்பு".


பாவண்ணனின் எழுத்துலகம் சராசரி மனித வாழ்வின் அவலங்களை வெகு நுட்பமாய் எடுத்தாளுகின்றது.மிக கடினமான கருத்துக்களை கதை போக்கில் இயல்பாக உணர்த்தி, மிக அழுத்தமாக பதிவு செய்கின்றார்.

"எனக்கு பிடித்த சிறுகதைகள்" - காலச்சுவடு வெளியீடு
"கடலோர வீடு" - காவ்யா வெளியீடு

Wednesday, October 29, 2008

ரயில் பயணங்கள்,வாசிப்பு மற்றும் சுதாவின் 'அனல் மேலே பனித்துளி.....'



எனது பால்ய கால ஏக்கங்களில் முக்கியமான ஒன்று ரயில் பயணம்..கல்லூரி முடித்து சென்னையில் பணியில் சேர்ந்த பிறகு ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி போனதோடு சுவாரசியம் கூட்டும் அனுபவமாய் மாறிப்போனது.மிக விருப்பத்திற்குரியது வாசிப்பிற்கு அனுகூலமான நீண்ட பகல் பொழுது பயணங்கள்.ஜன்னல் காட்சிகள் துண்டிக்கப்படும் குளிர்வசதி கொண்ட ரயில் பெட்டி பயணம் தண்டனை அனுபவிப்பது போன்ற நிலையில் தள்ளும்..எல்லாவற்றிற்கும் மேலாக அரிதாய் புன்னகைக்கும் சக பயணிகள்,தொடர் சேட்டைகளால் கவனம் பெரும் சிறுவர்கள்,இரவில் ஒளிரும் நதிகள்,உடன் நகரும் வயல்வெளிகள்,மரங்கள், நாகை,நெல்லை,மதுரை என சரளாமாய் புரளும் வட்டார மொழிகள் என சுவாரசியத்திற்கு குறைவில்லாத ரயில் பயணங்கள் சலிப்பற்று தொடர்கின்றது!!

*************************************

வாசிப்பு..புத்தக வாசிப்பு தொடர் ஆட்டத்தில் பங்கு கொண்டு கேள்விகளுக்கான பதில் எழுதும் பொழுது வாசிப்பு மீது கொண்டிருக்கும் ஆர்வமும்,முற்று புள்ளி அற்று தொடரும் அதன் சுழற்சியில் சுகமாய் பயணிப்பது குறித்து யோசிக்க செய்தது.வாசிப்பு என்றைக்குமே திணிக்கபட்டு வருவதில்லை,தேடல் மிகுதியின் தொடர்ச்சியாய் வருவது!!சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் வாசிப்பு குறித்த வைரமுத்துவின் "வாசிப்பு மனிதனை விசாலபடுத்துவது.வாசிப்பு உலகம் வாசகன் வாழாத உலகத்தை அவன் வாசலுக்கு கொண்டு வருவது " என்கின்றன வரிகள் வெகு உண்மையாய் தோன்றியது.நெருக்கடி மிகுந்த தினசரி வாழ்வில் காண கிடைக்காத உலகம் குறித்த தேடல் மிக அவசியமே!!சமீபத்திய பண்டிகை விடுமுறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் வாசிக்காமல் இருந்தது வெறுமையாய் உணர செய்தது..சென்னை பட்டணம் நெருங்க நெருங்க அந்த வெறுமை தேவை ஆகா உருமாறி ரயிலிலேயே வாசிப்பை தொடங்கி விட்டேன்...

**********************************************




முன் எப்போதும் இல்லாத அளவு ஒரு பாடலின் மீது பைத்தியம் கொண்டு, எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கில் கொள்ளாது தொடர்ந்து ரசித்து கொண்டிருகின்றேன் சுதா ரகுநாதனின் குரலில் வரும் வாரண ஆயிரம் படப்பாடல் "அனல் மேலே பனித்துளி....." யை.சுதாவின் முந்தைய இரு திரை பாடல்கள் அதிக கவனம் பெறவில்லை..ராஜாவின் இசையில் இவன் படப்பாடல் "எனை என்ன செய்தாய்.." அற்புதமான தொடக்கமாய் இருந்த போதிலும் ஏனோ வெகுஜன ரசிப்போடு ஒன்றவில்லை.

கர்நாடக இசையை பொறுத்த மட்டில் எனது அறிவும்,ரசனையும் பூஜ்யம்.நேர் எதிராய் கர்நாடக சங்கீதத்தில் அப்பாவிற்கு உள்ள ஈடுபாடும்,சுதாவின் பாடல்களுக்கு மீது கொண்ட தீவிர ரசனையாலும் இப்பாடலை கேட்க முடிந்தது.மெல்ல இப்பாட்டின் வசீகரத்தில் மூழ்கி போகும்படியும் ஆனது..

"எந்த காற்றின் அளாவலில் மலர்
இதழ்கள் விரிந்தனவோ ..........."

"சந்தித்தோமே கனாக்களில் சில முறைய பலமுறையா
அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா........"

தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கொண்டு முழுமை அடைவது தாமரையின் வரிகள் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதுவித அனுபவம் தந்தபடி தொடர்கின்றது!!

எம்.வி.வெங்கட்ராமின் "நித்ய கன்னி"

சரித்திர நாவல்கள் தரும் கற்பனை வெளி எல்லை அற்றது.அரண்மனைகளும்,போர் படைகளும்,அரச குமாரிகள் குறித்த வர்ணனைகளும் சொல்லபட்டதிற்கு மேல் அதிகமாய் எண்ணி வியக்க கூடியவை.25 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த 'நித்யகன்னி" புராண சம்பவம் ஒன்றினை அடிப்படையாய் கொண்டது.மிகுந்த வர்ணனைகள் அற்று பெண் உடலை முன்னிறுத்தி பின்னபட்டிருக்கும் இந்நாவல் அந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டதில் வியப்பில்லை.

விசுவாமித்திர முனிவரின் சிஷ்யனான காலவன் குரு தட்சணையாக முனிவருக்கு 400 அதிசய வெண் புரவிகளை அளிக்க பணிக்கிறான்.பேரு வள்ளலான யயாதி மன்னனின் மகள் மாதவி 'நித்யகன்னி' வரம் பெற்றவள் என்பதை அறிந்து அவரிடம் சென்று அவளை பெற்று பின் அப்புரவிகள் உள்ள மன்னர்களுக்கு அவளை மணமுடித்து தன் குரு சேவையை நிறைவு செய்ய முடிவு செய்கிறான்




இந்நிலையில் காலவன் வந்த நோக்கம் அறியாது அவன் மீது காதல் கொள்கிறாள் மாதவி.மாதவி என்று அறியாது காலவனும் அவள் அழகில் மையல் கொள்கிறாள்.காலவனின் முடிவை மாற்றிவிடலாம் என எண்ணி அவன் உடன் புறப்படுகிறாள்.விசுவாமித்திர முனிவரின் கடுங்கோபத்திற்கு அஞ்சி காலவன் தன் காதலியை புரவி வேண்டி மன்னர்களுக்கு மனம் முடிக்க அழைத்து செல்கிறான்.
காமுகனான அயோத்தி மன்னனை மனம் முடித்து,பிள்ளை பெற்று கன்னியாக மாறிய மாதவியை தன் பிள்ளையை விட்டு பிரித்து அறத்தின் மீது பெரு நம்பிக்கை கொண்ட காசி மன்னனை மணக்க அழைத்து செல்கிறான் காலவன்.


அயோத்தி மன்னனும்,காசி மன்னனும் மாதவியின் அழகின் பொருட்டே அவளை மணக்க சம்மதித்து,அவள் உள்ளம் அறியா நடந்துகொள்கின்றனர்.காமம்,ஆறாம் தவிர்த்து கலைகளின் மீது ஆர்வம் கொண்ட மூன்றாவது மன்னன் மாதவியின் குணம் அறிந்து அவளை காலவனோடு செல்ல அனுமதிக்கிறான்.துயரங்கள் யாவும் முடிவுற்றது என எண்ணி காலவன்,மாதவியை மனம் செய்ய இருக்கும் தருணம் அவள் அழகில் மயங்கி விசுவமித்ரர் அவளை மணக்க முடிவு செய்து,தன் குடிலில் தங்க செய்கிறார்.



தொடர் திருமணங்களாலும்,ஸ்திர புத்தி அற்ற காதலான காலவனாலும் புத்தி பேதலித்து பைத்தியம் ஆகிறாள் மாதவி.பேரழகியாய்,நித்ய கன்னியாய் அரண்மனையில் உலா வந்த மாதவி,தனக்கு சிறிதும் சம்பந்தம் அற்ற விச்வாமித்ரரின் சாபத்திற்கு பலியாகி வாழ்கை முழுதும் தொடர் அல்லல்களால் சுழட்டி அடிக்கபடுவதை மிகை இன்றி,பெரும்பாலும் மாதவியின் மனநிலை கொண்டு விளக்கி உள்ளார் எம்.வி.வெங்கட்ராம்.

எந்த ஒரு கால கட்டத்திற்கும் பொருந்தி போகும் கதை இது.தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறாக,சுயேச்சையாக முடிவு எடுக்க வழியின்றி எப்போதும் எவரையேனும் சார்ந்து வாழும் நிலை பெண்களுக்கு நம் சமூகத்தில் இன்றும் உண்டு.பெண் உடல் குறித்த சமூகத்தின் பார்வையை மாதவி மணக்கும் மூன்று மன்னர்களின் குணங்களாய் கொள்ளலாம்.காமம் மிகுந்த,அற ஒழுங்கம் பற்றி,போற்ற பட வேண்டிய அழகிய கலை போல நோக்கப்படும் பார்வைகளில் பெண்ணிற்கு மிக விருப்பமானதாய் இருப்பது மூன்றாவதே!!

மிக கடினமான கருத்தை சரித்திர பின்னணியுடன் புனைந்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.நாவல் முடியும் தருவாயில் அதன் சாரத்தை முழுதாக உணர முடிந்தது,ஒவ்வொரு காட்சிக்கும் ,உரையாடல்களுக்கும் பல்வேறு உட்பொதிந்த அர்த்தங்கள் உண்டு.தனது கிளாசிக் நாவல்கள் வரிசையில் காலச்சுவடு இந்நாவலை வெளியிட்டுள்ளது..


வெளியீடு - காலச்சுவடு
விலை - 100 ரூபாய்

Wednesday, October 22, 2008

வைரமுத்துவின் "கள்ளிகாட்டு இதிகாசம்"

கவிஞராக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு வைரமுத்துவை சிறந்த எழுத்தாளனாய் காட்டிய கரிசல் இலக்கியம் இது!!பகட்டில்லாத,முக பூசில்லாத கரிசல் மனிதர்களும்,மண்ணுடன் ஆனா அவர்களின் உறவும்,பிரியமும் மிக நெருக்கமாய் உணர செய்யும் இந்த நாவல் விகடனில் தொடராக வந்தது.ஒரு கரிசல்பூமியில் வாழ்ந்து மடிந்த பேயதேவர் என்னும் மனிதனின் சோக வரலாறே "கள்ளிகாட்டு இதிகாசம்".

மண்ணோடும் பெற்ற மக்களோடும் போராடும் பேயத்தேவர் ஒரு சிக்கலில் இருந்து விடுபட்டு தலை நிமிர நினைக்கும் பொழுதில் இன்னொன்று வந்து புயலென சூழ தொடர்ந்து சுழட்டி அடிக்கபடுவது மனதை கனக்க செய்வதாய் உள்ளது.கோழி குழம்பு வைப்பதில் இருந்து சாராயம் காய்ச்சுவது வரை,சவர தொழில் நேர்த்திமுறைகள் முதல் வெட்டியானின் ஒரு பிணம் எரிக்கும் அனுபவங்கள் வரை அனுபவித்து சொல்லப்பட்டுள்ளன.இவ்வாறு சிறு சிறு விஷயங்களை விரிவாய் விவரித்துள்ள இடங்கள் வைரமுத்துவின் எழுத்தாளுமைக்கு எடுத்துக்காட்டு.



கிராமத்து வாழ்க்கையோடு நமக்கு சிறிது பரிட்சயம் இருந்தால் இந்நாவல் மேலும் சுவாரசியமாக தோன்றும்.கமலை தோட்டத்தில் உழவு செய்யும் அழகை,தனி ஆளை தரிசு நிலத்தை விலை நிலமாக்க கிணறு வெட்டும் பேயதேவரின் உழைப்பும் எனக்கு வெவ்வேறு சம்பவங்களை நினைவு படுத்தியது.கோழி,ஆடு திருட்டு முதல் சாராயம் காய்ச்சுவது முதல் சகல கெட்ட காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பேயதேவரின் மகன் பாத்திர படைப்பு சண்டியர் தனம் செய்து திரியும் அசல் கிராமத்து இளைஞனின் குறியீடு.

பேயதேவரின் இளம் வயது காதல்,மனைவி மீதான பிரியம்,நாயக்கரோடு கொண்டிருந்த நட்பு,பேரனோடான தோழமை என யாவும் இயல்பு மாறாது உரையாடல்களால் சொல்லப்படுகின்றது. கிராமத்து மனிதர்களுக்குள்ளான நட்பும்,பிரியமும்,துன்பம் நேர்கையில் உதவும் மனமும்,மண்ணின் மீது கொண்ட பிரியமும்,கரிசல் பெண்கள் எப்படி எல்லா விதத்திலும் சராசரி பெண்களை விஞ்சி நிற்கின்றனர் என வைரமுத்து காலை முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்களின் தின காரியங்களை பட்டியலிடும் இடமும் புழுதி காட்டின் மீதான பிரியத்தை அதிகரிக்க செய்பவை.

தொடர்ந்து வரும் துன்பங்களை சாபமாக கருதாது வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கும் வைக்கப்படும் சவால் என எண்ணி ஒவ்வொரு சிடுக்குகளையும் விடுவித்து கொண்டே பேயதேவர் முன்னேற இனி ஒரு போதும் வெளிவர முடியாத பெரும் துக்கம் வந்து தாக்குகின்றது.அணை கட்டும் பொருட்டு தேவரின் ஊரோடு சேர்த்து சில கிராமங்களை இடம் பெயர அரசாங்கம் வற்புறுத்துகிறது.அதை மீள இயலாது வீட்டு பொருட்களை கொஞ்ச கொஞ்சமாய் கொண்டு மேடு சேர்க்க,இறுதியில் தன் பூமியின் பிடிமண் எடுத்து திரும்பும் பொழுது நீரில் மூழ்கி இறக்கின்றார்.

நாவல் முழுவதும் தொடர்ந்து வரும் அதீத சோகம் ஒரு கட்டத்தில் அயர்ச்சியை தருகின்றது.இருப்பினும் சுவாரசியம் கூட்டும் வர்ணனைகளும்,மண்ணோடு வேர்விட்டு மழைக்கும்,புயலுக்கும் அஞ்சாது நிற்கும் ஆலம் விழுதென பேயத்தேவர் பாத்திர படைப்பின் வலிமையும் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை தருகின்றது.சேரும் புழுதியும் அப்பி மண்ணோடு மல்லு கட்டும் கரிசல் மக்களின் வாழ்க்கையை இந்நாவலில் அழகாய் பதிவு செய்துள்ளார் வைரமுத்து.

கிடைக்கும் இடம் : திருமகள் புத்தக நிலையம்,தி.நகர்
விலை : 200 ரூபாய்

Friday, October 17, 2008

கோபி கிருஷ்ணனின் 'உள்ளே இருந்து சில குரல்கள்'

எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் மரணத்திற்கு பிறகு குமுதம் இதழ் ஒரு பக்க அளவில் அஞ்சலி கட்டுரை வெளியிட்டு இருந்தது,அதற்கு முன்பு வரை கோபியை பற்றிய எந்த அறிமுகமும் இருந்ததில்லை.வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறிய படாத எழுத்தாளர்கள் வரிசையில் பா.சிங்காரத்தை போல கோபியும் உண்டு.

நண்பர்கள் மூலமாகவும்,வலைத்தளங்களிலும் இவரின் "உள்ளே இருந்து சில குரல்கள்" நாவல் குறித்த விமர்சனங்கள் இந்நாவலை படிக்கும் ஆவலை தூண்டியது.நாவலை படித்து கொண்டிருந்த கணங்களில் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள வழியின்று பல சமயம் பாதியில் புத்தகத்தை மூடி வைத்தேன்..கனத்த வலி தரும் மனித நிலைகளின்(பிறழ்வு) தொகுப்பு வெகுவான ஏற்ற இறக்கம் இன்றி சீராக பயணிக்கின்றது.



மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருக்கும் மனநிலை பாதிக்கபட்டோர் அல்லது அவர்களின் உறவினரின் நேரடி கூற்றாக ஒவ்வொரு நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது.ஐம்பதிற்கும் மேலான மனநிலை வெளிப்பாடுகளில் பெரும்பாலான பிறழ்வுகளுக்கு காரணமாய் அமைவது அதீத கடவுள் பக்தி,திருமண/காதல் தோல்வி,உறவுகள்,வேலை,அர்த்தம் அற்ற பயம்,சந்தேகம் என பொதுவாய் கொள்ளலாம்.இவ்வாறு சிறு சிறு அதிர்வுகளை உள்வாங்கி ஒவ்வொரு நிலையும் கடக்க வேண்டியுள்ளது.மன பிறழ்வை நோய் என கூறுவதை காட்டிலும் ஒரு வகை பாதிப்பு என சொல்வது சரியாக இருக்கும்,சில நிலைகளை படிக்கும் பொழுது நமக்கும் அவர்களுக்குமான வித்யாசம் பெரிதாய் இல்லை.சிந்தனையையும்,மனவோட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நமது நிலை குழப்பம் இன்றி தொடர்கின்றது.

இது தவிர்த்து நாவலின் இறுதியில் மன நல பாதிப்பிற்க்கு வைத்தியம் (?!) செய்யும் சில சாமியார்கள், மற்றும் மாந்த்ரீகர்களின் சந்திப்புகள்,மன நலம் குறித்து விவாதிக்கும் பல நூல்களின் மேற்கோள்கள் என இறுதி பகுதி முழுவதும் மன பிறழ்வு குறித்து முழுதுமாய் உணர்ந்து கொள்ள உதவுகின்றது.

மனித மனங்களின் வலிகளை,இருண்ட வாழ்வின் அவலங்களை மிக அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல்.கோபி குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை இந்த எழுத்தாளனுக்கு சிறந்ததோர் அஞ்சலி.

வெளியீட்டார் - வம்சி புக்ஸ்
விலை - 80 ரூபாய்

Wednesday, October 15, 2008

தமிழ் சினிமா இன்னுமொரு தொடர்

இரண்டு தமிழர்கள் பார்த்து பேசினால் அங்கு சினிமா குறித்த பேச்சு கட்டாயம் இருக்கும் என கூற கேட்டு இருக்கின்றேன்.அந்த அளவில் திரைபடங்கள் நம் தின சரி வாழ்கையில் ஒன்றாகிவிட்டது!!அமைதியாய் இத்தொடர் ஓட்டத்தை கவனித்து கொண்டிருந்தேன்..அய்யனாரின் அழைப்பை ஏற்று நானும் இங்கே..

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

(அதிகம் யோசிக்க வைத்த கேள்வி இது)முதலில் பார்த்த படம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை..சிறு வயதில் சனி,ஞாயிறு மத்திய பொழுதுகளில் டிடி யில் ஒளிபரப்பான இரு குறும்படங்கள் இன்றும் என் நினைவில் உண்டு.

-முதலை தன் முட்டைகளை பாதுகாப்பதை வியந்து பார்க்கும் கிராமத்து சிறுவன்,தானும் பகல் பொழுதுகளில் அதற்கு துணையாய் இருப்பதாய் வரும்.

-வெளிநாட்டு பெண்ணை மனது வரும் மகனுக்கும் படிப்பறிவில்லாத மாடு மேய்க்கும் தாய்க்குமான உறவின் பிணைப்பு சொல்லும் படம்.



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சிவாஜி - சாவித்திரி நடித்த நவராத்திரி.கேபிள் சானல் ஒன்றில் பார்த்தது.இருவரின் நடிப்பு வியப்பில் ஆழ்த்தியது,அதிலும் முக்கியமாக அந்த தெரு கூத்து நடனம்.
எஸ்.ரா வின் சமீபத்திய கட்டுரையான "இரு புகைப்படங்கள்" ளில் சாவித்திரியின் இறுதி நாட்கள் குறித்த செய்திகள் நினைவில் வந்து மனதை பிசைந்தது!!


4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மஹாநதி - ஒரு மனிதனின் ஒரு நிமிட சபலத்தால் குடும்பமே சீரழியும் கதையை
மிகுந்த எதார்த்தத்தோடு சித்தரித்த படம்.

அவள் அப்படிதான் - இப்படம் குறித்து தனியே பதிவு போடும் அளவிற்கு பாதித்தது
மஞ்சுவின் பாத்திர படைப்பு.


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எதுவும் இல்லை

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.நிவாஸ் ஒளிப்பதிவு குறித்து அப்பா எப்பொழுதும் ஸ்லாகித்து சொல்வதுண்டு.

பாரதிராஜா - நிவாஸ்(பெரும்பாலான படங்கள்)
மஹேந்திரன் - பாலுமகேந்திரா(முள்ளும் மலரும்,உதிரி பூக்கள் )
மணிரத்தினம்-பி.சி.ஸ்ரீராம்(அக்னி நட்சத்திரம்)

நாம் தினம் காணும் காட்சிகளை தங்கள் காமெராக்கள் மூலம் கவிதையாக்கிய இவர்களின் எதார்த்த நிலை இப்பொழுது எவரிடமும் காணகிடைப்பதில்லை.அதி நவீன தொழில் நுட்பம் என்கிற பெயரில் தற்பொழுதைய திரைப்படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அபத்தத்தின் உச்சம்.

இளையராஜாவின் பின்னணி இசை (சிகப்பு ரோஜாக்கள்,மௌன ராகம் )


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதம்,விகடனில் வாசிப்பதோடு சரி.முன்பெல்லாம் ஒரு பக்கம் மட்டுமே சினிமா செய்திகளுக்கு ஒதுக்கி இருப்பர்,இப்போ நிலைமை தலைகீழ்.பெரும்பாலான பக்கங்கள் நடிகையர் பேட்டி,புகைப்படம் என நிரம்பி வழிகின்றது!!விகடனும் தன் தரத்தை இழந்து வருகின்றது.

7. தமிழ்ச்சினிமா இசை?

எப்பொழுதும் இளையராஜா.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ரசித்து பார்த்த உலக மொழி படங்கள் - Amelia,Monster,cider house rules
வேற்று மொழி படங்கள் - செம்மீன்(மலையாளம்),கடஷ்ரேத (கன்னடம்)
Mr & Mrs Iyer,Fire இன்னும் சில


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாலா,அமீர்,ராம்,சேரன்,தங்கர் பச்சன்,ராதாமோகன்,செல்வா ராகவன் என நம்பிக்கை கூட்டும் இயக்குனர்களும் சூர்யா,விக்ரம்,ஜீவா போன்ற படத்தின் தேவைகேற்ப தம்மை வருத்தி கொள்ளும் நாயகர்களும் ஒரு புறம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் மகிழ்வூட்டுவதே!! அதே சமயம் குத்து பாட்டு,தாலி சென்டிமன்ட்,3 டூயட்,நாலு பைட் பார்முலாக்களை விடாது பற்றி படம் எடுக்கும் பேரரசு வகையறாக்களை நினைத்தால் தமிழ் சினிமா எதிர்காலம் புகைமூட்டமாகவே தெரிகின்றது!!

மேம்போக்கான இக்கேள்விகளை தவிர்த்து இன்னும் சில கேள்விகள் இணைக்கப்பட்டு இருக்கலாம் என தோன்றுகின்றது..உதாரணமாக "சிறந்த பத்து தமிழ் படங்கள்","நாவலை தழுவி எடுக்க பட்ட படங்கள் குறித்து","இசையை மையமாய் கொண்ட திரை படங்கள்" "தமிழ் சினிமாவில் பெண்ணியம்" என்று..

இத்தொடர் ஓட்டத்தில் பங்கு கொள்ள நான் அழைப்பது

'ரகசிய கனவுகள்' கார்த்திக் மற்றும் வால் பையன் 'அருண்'

Tuesday, October 14, 2008

ஜி.நாகராஜன் மற்றும் ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துலகம்

விளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளை தீவிரமாக தேடி படித்ததில்லை.ஜெயகாந்தனின் "உன்னை போலே ஒருவன்" அவ்வகையில் நல்ல பதிவு.ஜி.நாகராஜன் மற்றும் ஜே.பி.சாணக்கியாவின் நூல்கள் குறித்தான அறிமுகம் கிடைத்ததும் இருவரின் நூல்களை தேடி படித்து முடித்தேன்.சமூகம் வரையறுத்த கட்டுபாடுகளை மீறி தன் இயல்பில் நடமாடும் நிஜ மனிதர்களை குறித்து முழுதாய் விரிவாய் எடுத்துரைப்பவை இவர்களின் எழுத்துக்கள்.

ஜே.பி.சாணக்கியாவின் "என் வீட்டின் வரை படம்" சிறுகதை தொகுப்பு

"ஊருக்கு சென்று திரும்பும் பொழுதெல்லாம் மீசை தாடி பெருத்து வளர்ந்த பிள்ளையை தொட்டு பேச முடியாத துக்கத்தில் வார்த்தைகளை சோறாய் ஆக்கி போடும் என் அம்மாவிற்கு"

- சாணக்கியா


இந்நூலின் முகப்புரையில் சாணக்கியா குறிப்பிட்டுள்ள மேற்சொன்ன வார்த்தைகளை அப்பா அழுத்தி கோடிட்டு இருந்தார்,, தாயும் மகனுக்குமான பிரியத்தை அழகாய் விளக்கும் இவ்விரு வரிகள் என்னையும் ஈர்த்ததில் வியப்பில்லை!!

இத்தொகுப்பின் முதல் சிறுகதை 'ப்ளாக் டிக்கட்' ,சென்னை நகரின் ஒரு காலை நேர பிளாட்பார காட்சிகளோடு தொடங்குகின்றது...குப்பை மேடுகளும்,மூத்திர நெடியும் மிகுந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் திரையரங்கு ஒன்றில் ப்ளாக் டிக்கட் விற்று பிழைப்பு நடத்துகின்றனர்..விற்பனை மந்தம் ஆகும் வேளைகளில் வேசியராய் திரையரங்கை சுற்றி வருகின்றனர்...மற்றொரு சிறுகதையான 'என் வீட்டின் வரை படம்' கனத்த மௌனத்தோடு நகருகின்றது.வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதின் குறியீடாய் குப்பையில் எரிய படும் குடும்ப புகைப்படத்தின் நினைவுகளோடு அவ்வீட்டு சிறுவனின் பார்வையில் கதை விரிகிறது.



இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை "வெகு மழை",ஒரு பெரு மழை நாளில் தன் வீட்டின் அருகே முன்பு குடி இருந்த வேணி அக்காவை அவள் ஊரில் வழியறியாது தேடி திரியும் நாயகன் அக்கணங்களில் அவளோடான தனது கடந்த கால நிகழ்வுகளை பகிர்கிறான்.திருமணத்திற்கு பிறகு கணவனை விட்டு வேறு ஆடவர்களோடு பிரியம் கொண்டு,பின்பு மன நோய்க்கு ஆளான வேணி பற்றிய குறிப்புகள் மழையின் கனத்தோடு நம்மை தாக்குகின்றது.

இக்கதைகள் தவிர்த்து "ரிஷப வீதி","தனிமையின் புகைப்படம்","உருவங்களின் ரகசியங்கள்" ஆகிய சிறுகதைகளும் குறிப்பிட தக்கவையே..சாணக்கியா கையாளும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வேசியர்,தடம் மாறும் குடும்ப பெண்கள்,பிளாட்பார மனிதர்கள்,பிச்சைக்காரர்கள்..இம்மனிதர்களின் வாழ்க்கை சூழலும்,உரையாடல்களும்,முக பூச்சு இல்லாத மனித வாழ்வின் அவல நிலையை எடுத்துரைப்பவை.

வெளியீடு :காலச்சுவடு
விலை : 75 ரூபாய்

ஜி.நாகராஜனின் 'நாளை மற்றும் ஒரு நாளே"

மதுரை நகரில் வாழும் நாயகன் கந்தனின் ஒரு நாள் குறிப்புகளை முழு நாவலை தொகுத்திருக்கின்றார் நாகராஜன்.பெண் தரகு,கட்ட பஞ்சாயத்து என கழியும் கந்தனின் நாட்களில் ஒரு நாள் அவனோடு பயணித்த அனுபவம்.நாம் எப்போதும் அறிய விரும்பாத அசிங்கம் என ஒதுக்கி தள்ளும் வாழ்கை முறையை முழு மனதாய் ஏற்று நடத்தும் எத்தனையோ மனிதர்களுள் கந்தனும் ஒருவன்.படித்த இளைஞன் ஒருவனோடான கந்தனின் சமூக மாற்றம் குறித்தான உரையாடல்,அவனின் அறியாமையை விளக்குவதாய் இருப்பினும் எந்த ஒரு சமூக மாற்றமும் அவனின் வாழ்க்கை தரத்தை மாற்ற போவதில்லை என்பதை உணர்த்துவதாய் உள்ளது.

எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை ஒன்றில் "ஜி.நாகராஜன் போல மதுரை நகரை யாரும் வருணிக்க முடியாது" என குறிப்பிட்டு இருந்தார்.இந்நாவலிலும் 'வடம் போக்கி தெரு','ஷெனாய் நகர்','மசூதி தெரு' போன்ற மதுரையின் சில பகுதிகளை குறிபிட்டுள்ளார்,விரிவான வருணிப்புகள் எதுவும் இல்லை.அவரின் மற்றும் ஒரு நாவலான 'குறத்தி முடுக்கு" இல் மதுரை நகரின் விவரிப்புகள் இருக்கலாம் என கருதுகிறேன்!!

நன்றி அய்யனார்

வெளியீடு - காலச்சுவடு
விலை - 90 ரூபாய்

Monday, October 13, 2008

புத்தக வாசம்- ஒரு தொடர் ஆட்டம்

வாசிப்பு - தேடல் மிகுந்த என் தனிமைகளை போக்கியது வாசிப்பு மட்டுமே!! என் மட்டிலும் வாசிப்பு என்பது சுகானுபவம்..உஷாவின் இந்த அழைப்பு பெரு மகிழ்ச்சியை தருவதாய் உள்ளது.பகிர்தல் என்றும் சுவாரசியமானதே!!

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

கி.ராஜநாராயணனின் 'பிஞ்சுகள்",குழந்தைகளுக்கான இலக்கிய நாவல்..அந்நாவலில் கி.ரா குறிபிட்டிருக்கும் அரிய பறவை இனங்களும்,வழக்கொழிந்த தமிழ் சொற்களும் முதல் வாசிப்பின் பொழுது ஏற்படுத்திய ஆச்சர்யம் இன்றும் நினைவில் உள்ளது.


2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
அம்புலிமாமா கதைகளில் இருந்து தான் வாசிப்பு தொடங்கியது.10 வயதில் என நியாபகம்.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

அ. சமூக நாவல்கள்
ஆ. சரித்திர நாவல்கள்
இ. ஹரிபாட்டர் வகையான வினோத நாவல்கள்
ஈ. ராணிமுத்து, மாலைமதி மற்றும் பாக்கெட் நாவல்கள்

சமூக நாவல்கள்
எதார்த்தம் நிறைந்த,மனித உறவுகள் முன்னிறுத்தி சொல்லப்படும் கதைகள்.
விளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளும்.


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு
ஆ. பத்திரிக்கைகளில் நூல் மதிப்புரைப் படித்து
இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து
ஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து
உ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து
ஊ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)


பெரும்பாலான நாவல்கள் எனக்கு அறிமுகம் செய்தது என் தந்தையே.வலையுலக அறிமுகத்திற்கு பிறகு நண்பர்கள் மூலம் அறிந்து சில நூல்கள் படிக்க நேர்ந்தது.

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

அ. பக்க அளவு
ஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை
இ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)

பக்க அளவு

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

அ. வாசகனின் அக நிலையிலிருந்து

ஆ.எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து

இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)

வாசகனின் அகநிலையில் இருந்து


7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

கதையின் தேவைக்கேற்ப எத்துணை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். பக்கங்களை மறந்து படிக்க ஆர்வத்தை தூண்டும் ஆற்றல் உள்ள எழுத்திற்கு புயலிலே ஒரு தோணி,கோபல்ல கிராமம் நூல்களை உதாரணமாய் சொல்லலாம்.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

தேர்ந்தெடுத்த நூல்களை மட்டுமே வாசிப்பதால்,எத்துணை பக்கம் கொண்ட நாவலாய் இருந்தாலும் மலைப்பாய் உணர்ததில்லை.

9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

நிச்சயமாக இல்லை.

10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
பெரும்பாலும் இரவு

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

எதுவும் இல்லை

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

சுஜாதாவின் " பிரிவோம் சிந்திப்போம்" ,பாலகுமாரனின் "மெர்குரி பூக்கள்"

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
தி.ஜாவின் "மரபசு" , புதுமைப்பித்தனின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பு.

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

வண்ணநிலவனின் "கடல்புரத்தில்"
சுந்தரராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை"
எஸ்.ராவின் "உறுபசி"
கி.ராவின் "கோபல்ல கிராமம்"
தி.ஜாவின் "மோகமுள்"
வண்ணநிலவனின் " ரைநீஸ் ஐயர் தெரு"
ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்'
சாருவின் "சீரோ டிகிரீ"
கோபிகிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்"
ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி"


பட்டியல் பெரியது,மிக பிடித்தவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

அனிதா தேசாயின் "கடல்புறத்து கிராமம்"
யு.ஆர்.அனந்த மூர்த்தியின் " சம்ஸ்கார"
தகழியின் "செம்மீன்"
தகழியின் " தோட்டியின் மகன்"
வைக்கம் முகமது பஷீரின் "பாத்திமாவின் ஆடு"
பாறபுரத்துவின் "அப்பாவின் காதலி"
யு.ஆர்.அனந்த மூர்த்தியின் "அவஸ்தை"


16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

புதுமை பித்தனின் "பலிபீடம்" ,எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் "கடலும் கிழவனும்" தவிர்த்து வாசித்த ஆங்கில நூல்கள் சுவாரஸ்யம் அற்றவை.

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

கி.ராவின் "பிஞ்சுகள்","கோபல்ல கிராமம்"

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

பெரும்பாலும் தலைப்பு எவ்விதத்தில் நாவலோடு ஒத்து போகின்றது என யோசிப்பதுண்டு. "சாயா வனம்" "ரப்பர்" நாவல்களின் தலைப்பு மறைமுக அர்த்தம் போதிப்பவை.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

லட்சிய மனிதர்களாக் கொண்டதில்லை.பிடித்த கதாபாத்திரங்கள் உண்டு.
மோகமுள் "யமுனா"
பிஞ்சுகள் நாவலில் வரும் "வேதி நாயக்கர்"
புயலிலே ஒரு தோணியின் "மாணிக்கம்"
ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலின் "துரைகண்ணு"


20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?


மிதமிஞ்சிய எதார்த்தம்,துணிந்து தன் எதிர்ப்பை வெளிபடுத்தும் பாங்கு பிற மொழி நாவல்களில் மிகுந்துள்ளது.பிற மொழி என இங்கே குறிப்பிடுவது கன்னட மற்றும் மலையாள நாவல்கள்.பிராமண சட்ட திட்டங்களை தொடர்ந்து தன் நாவல்கள் (கடஸ்ரேதா,சம்ஸ்கார) மூலம் எதிர்த்து வரும் அனந்தமூர்த்தியின் துணிவு பாராட்டுதலுக்கு உரியது..


21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?


"கோபல்ல கிராமம்" ,"கடல் புறத்தில்
"


22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்"
கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்"


23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

அ.எழுத்து மொழி
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு

வட்டார பேச்சு வழக்கு


24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை.

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

கி.ரா வின் கோபல்ல கிராமம்,எஸ்.ரா வின் "இலைகளை வியக்கும் மரம்" - பயண கட்டுரை தொகுப்பு

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவலின் தன்மையை பொருத்தது.பெரும்பாலும் விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பேன்.எதுவாயினும் ஒரு வாரத்திற்குள் முடித்து விடுவேன்.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

கி.ராஜநாராயணன்,சுந்தர ராமசாமி

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

இதுவரை அத்தகைய வாசிப்பு அனுபவம் இல்லை.


29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

ஜெயகாந்தனின் "ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்"
சு.ரா வின் "ஒரு புளியமரத்தின் கதை"
வண்ணநிலவனின் "கடல் புறத்தில்" "ரைநீஸ் ஐயர் தெரு"


30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

ஜி.நாகராஜனின் "நாளை மற்றும் ஒரு நாளே"

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

இல்லை.

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?

--------------------------

அப்பா தவிர்த்து இலக்கியம் குறித்து நான் அதிகமாய் உரையாடியது இருவரிடம் மட்டுமே அய்யனார் மற்றும் வனிதா.

தமிழ் வலையுலகம் அறிமுகம் ஆனதிற்கு முன்பே வனிதாவின் நட்பு கிடைத்தது.
சென்ற ஆண்டு புத்தக கண்காட்சிக்கு சேர்த்து சென்ற பொழுது வழி நெடுக இலக்கியம் பேசி சென்றது மறக்க முடியாத அனுபவம்.

வாசிப்பு மீதான எனது ஆர்வத்தை வேறு தளத்திற்கு இட்டு சென்றது அய்யனார் பரிந்துரைத்த தமிழ் நாவல்கள்.அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்" மற்றும் ஆதவன்,நகுலன்,கி.நாகராஜன்,ப,சிங்காரம் நாவல்கள்.விளிம்பு நிலை வாழ்கை குறித்த பதிவுகளை அறிமுகம் செய்ததில் அவருக்கு மிக்க பங்குண்டு.

இத்தொடர் ஓட்டத்தில் இவர்களின் பங்களிப்பு மேலும் புதிய நூல் அனுபவங்களை தரும் என்பதில் ஐயமில்லை.


Tuesday, October 7, 2008

ச.கந்தசாமியின் "சாயாவனம்"

ஒரு பெரு வனம் அழிக்கபடுவதை முழு நாவலாக இத்துணை சுவாரசியமாக சொல்ல முடியுமா என ஆச்சர்யமாக உள்ளது.நாகரிக வளர்ச்சியின் காரணமாய் நாம் இழந்த இயற்கையின் செல்வங்கள் பல..வனங்களும் அதில் ஒன்று.மனிதனின் தேவைகளும்,விருப்பங்களும் பெருக பெருக ஏதேனும் ஒரு வகையில் இயற்கை அதற்கு பலியாகிறது.கரும்பாலை நிறுவும் பொருட்டு பெரும் வனம் ஒன்றினை அழிக்க நாயகன் எடுக்கும் முயற்சிகளும்,அவன் பெரும் அனுபவங்களும்,அதில் அவன் காணும் வெற்றியுமே(?) இக்கதை.

இலங்கையில் இருந்து தன் சொந்த ஊரான சாயவனதிற்கு திரும்பும் சிதம்பரம்,கரும்பு ஆலை நிறுவ விரும்பி வனம் ஒன்றினை விலைக்கு வாங்குகிறான். விவசாயத்தை நம்பி பிழைக்கும் அவ்வூரில் யாரும் வனத்தை அழிக்க கூலிக்கு வராததால்,தானே சிறுவர்கள் இருவரை துணை கொண்டு செடிகளை அகற்றி,மரங்களை வெட்டி திட்டம் வகுத்து துரிதமாய் வேலையில் இறங்குகிறான்.கொஞ்சம் கொஞ்சமாய் வனம் அழிந்து வரும் நிலையில் வாசிக்கும் நமக்கு ஒரு கசப்பான மன உணர்வை தருவதாய் உள்ளது.அதிலும் பறவைகளும்,அணில்,முயல்,காளை மாடு ஆகிய விலங்குகளும் வனத்தை அழிக்க வைத்த தீயில் இரையாவது வலி அதிகரிக்க செய்யும் வர்ணனை.




கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலில் சிறு காட்டினை தீ வைத்து அளித்து சம வெளியாக்கி,பின் அதில் குடியேறி விவசாயம் செய்த வேதி நாயக்கரின் மூதாதையர் பற்றிய குறிப்புகள் இந்நாவல் படிக்கும் பொழுது வந்து போனது.ஒரு சமூகம் செழிக்க மேற்கொள்ளப்பட்ட அந்த அழிப்பு நியாமாக தோன்றியது.சிதம்பரம் தன் விருப்பம் நிறைவேற வனத்தினை அழிக்கும் செயல் முரணாக தோன்றினாலும்,
அதில் அவன் கொண்டிருக்கும் உறுதி,சிறு சிறு தோல்விகளில் பெறும் பாடத்தை கொண்டு வரும் நாட்களுக்கான வியுகம் அமைப்பது,எப்பொழுதும் எதிர்மறை கருத்து கூறி அவனை திசை திருப்ப முயலும் ஊரார்களை சிறு புன்னகை யோடு எதிர்கொள்ளும் பாங்கு என சிதம்பரத்தின் பாத்திர படைப்பு வெகு நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதை தொடங்கி வெகு நேரம் வரை அது நடக்கும் காலத்திற்கான குறிப்பு இல்லை,நிகழ கால கதை எனவே கருதும் வண்ணம் செல்லும் கதையோட்டம் சுதந்திரத்திற்கு முன்பு நிகழ்வதாய் உள்ளது.நிலவின் ஒளியில் அழிந்து வரும் வனத்தை ரசிக்கும் சிதம்பரத்தின் மனவோட்டம்,சாயாவன மக்களின் ஜாதி பேதம் தாண்டிய நட்பு,திருமண சடங்குகள்,புதிதாய் தொழில் தொடங்க வந்திருக்கும் இளைஞனிற்கு அவர்கள் தரும் உற்சாகம்,முரண் பட்ட சிந்தனையால் ஏற்படும் மன பிறழ்வுகளை எளிதில் மாற்றி கொள்ளும் முதிர்ச்சி,சற்றும் மனம் தளராது எடுத்த காரியத்தில் உறுதி கொண்டு உழைக்கும் சிதம்பரம் என நாவல் முழுவதும் நாம் சாயாவன மனிதர்களிடம் கற்று கொள்ள ஏராளமானது உள்ளது.யாவருக்கும் பயன்பட்ட எக்காலமும் காய்த்து குலுங்கிய வனத்தின் புளியமரங்களை அழித்தது குறித்து சிதம்பரத்திடம் கிழவி ஒருத்தி இடிந்து கூறும் இடத்தில் அவன் கொள்ளும் அமைதி,அவன் அதுவரை செய்த முயற்சிகள் அனைத்தையும் அர்த்தமற்றதாகிவிட்டதின் குறியீடாய் உள்ளது.

வெளியீடு : கவிதா பதிப்பகத்தார்
விலை : 60 ரூபாய்

Sunday, October 5, 2008

பாரதியார் கட்டுரைகள்

1970 களில் பூம்புகார் பதிபகத்தால் வெளியிடப்பட்ட பாரதியாரின் கட்டுரைகள் தொகுப்பு படிக்க கிடைத்தது.கவிதைகள் மூலமாகவே பாரதியை உணர்திருந்த எனக்கு அவரின் கருத்து தெளிவும்,சிந்தனை தெளிவும் கொண்ட கட்டுரைகள் வாசிக்க வாசிக்க சிறப்பாய் தோன்றியது.தாம் வாழ்காலத்தின் சூழ்நிலைகளையொட்டிசமயம்,சமூகம்,அரசியல்,கலைகள் குறித்து பாரதி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாய் வெளிவந்துள்ளது இந்நூல்.

தத்துவம்,உண்மை,மாதர்,கலைகள்,சமூகம் என பல்வேறு தலைப்புகளில் கீழ் தொகுக்கபட்டுள்ள கட்டுரைகளுள் மாதர் என்னும் தலைப்பின் கீழ் உள்ள பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வு கட்டுரைகள் இப்பதிவு எழுத காரணமாய் அமைந்தது.அதிலும் சீனத்து புரட்சி பெண்மணி "சியூ சீன்" குறித்து தன் மகளுக்கு பாரதியின் கடிதம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.



900களில் வாழ்ந்த சியூ சீன் திருமணம் ஆகி வீட்டில் பொழுதை கழித்த காலங்களில் அந்நிய படையெடுப்புகளில் பங்கு கொள்ள பெண்களுக்கு வழி இல்லாதது குறித்து " மனிதர்களாய் பிறந்து,தமது மனித சக்தியை காண்பிக்கும் பொருட்டாக கஷ்டங்களையும்,விபத்துக்களையும் எதிர்த்து உடைக்கும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே!வீட்டு காரியங்களின் அற்ப கவலைகளுக்கு இரையாகி மடியவா நாம் பூமியில் பிறந்தோம்??" என வருத்தம் கொண்டு குடும்பம் விட்டு பிரிந்து போர் கலைகளில் தேர்ந்து,நாடு தாண்டி இளைஞர்களை பயிற்றுவிக்கும் போர் பாசறை ஒன்றினை தொடங்கி வீர பெண்மணியாய் திகழ்ந்துள்ளார்.."ஏஷியாடிக் ரிவியூ" என்னும் இதழில் வெளிவந்த சியூ சீன் குறித்த கட்டுரையின் சாராம்சத்தை தன் மகள் தங்கம்மாவிற்கு கடிதமாய் எழுதியுள்ளார் பாரதி.

பாரதி என்றதும் என் நினைவிற்கு வருவது அவர் கவிதைகளோடு, தன் மனைவியோடு கம்பீரமாய் நிற்கும் எங்கள் வீட்டு பட்டகசாலையில்யுள்ள உள்ள புகைப்படம்.இனி சியூசீன் யின் வீர வரலாறும் சட்டென நினைவிற்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நூல் வெளியீடு : பூம்புகார் பதிபகத்தார்
விலை : 10 ரூபாய்

Monday, September 29, 2008

வண்ணதாசனின் "நடுகை" - சிறுகதை தொகுப்பு

வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு -"நடுகை" படிக்க கிடைத்தது.இத்தொகுதியில் அமைந்த பெரும்பாலான கதைகள் மனித உறவுகளின் பாசாங்கற்ற இனிமையை சொல்லுபவை.சக மனிதர்களோடு முகம் கொடுத்து,நின்று பேச நேரம் இல்லாமல் இயந்திர ஓட்டத்தில் அடித்து செல்லப்படும் இன்றைய பொழுதில் இக்கதைகள் படிப்பதற்கு பெரும் ஆறுதலாய் உள்ளது.

* காற்றின் வெளி-- ஒரு காலை பொழுதில் தன் மகளோடு சென்ற நடைபயணம் குறித்த பதிவு இது.வாகன பயணத்தை விட நடை பயணம் சுவாரசியமானவை..நான் மிக நெருக்கமானதாய் உணர்த்த கதை இது.கடை வீதிகளுக்கு செல்லும் பொழுதோ,சாலையை கடக்கும் பொழுதோ அப்பாவின் கைகோர்த்து செல்வது மிகுந்த விருப்பதிர்க்குறிய ஒன்று.சொல்லில் உணர்த்த முடியாத அன்பின் வெளிப்பாடாய் அக்கணங்கள் தோன்றும்.சிறுமியான தன் மகளின் வியத்தகு கேள்விகளும்,பார்பவர்களிடத்தில் எல்லாம் சிரித்து பேசும் குணமும்,குழந்தைகளுக்கே உண்டான ஆச்சர்யங்களும்,கேலிகளும் ஒரு தந்தையின் பார்வையில் சொல்லி இருப்பது நன்று.பால்ய காலந்தின் மீதான ஏக்கத்தை அதிகரிக்க செய்யும் விவரிப்புகள் அருமை.




* ஜோதியும் நானும் அந்த பையனும் - காதலிக்கு கொலுசு வாங்க கனவுகள் சுமந்து கடைக்கு செல்லும் நாயகன் அங்கு வறுமையின் காரணமாய் தான் வாங்கிய பரிசு கோப்பைகளை விற்று பணம் பெற கெஞ்சும் இளைஞனை கண்டு தான் வந்த காரியம் அற்பமானது என்பதை உணர்கிறான்...மனதை கனக்க செய்யும் இக்கதை உள்ளார்ந்த அர்த்தம் கொண்டது.

* மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது - வண்ணநிலவனின் மற்றுமொரு சிறுகதையான "கடைசியாய் தெரிந்தவர்கள்" போலவே இதுவும்,மன உளைச்சல் கொண்டு பரிதவிக்கும் நண்பனுக்கு ஆறுதலாய் உடன் இருந்து உதவிய கணங்களின் பதிவு.உறவுகள் மேம்படுவது கேளிக்கையான தருணங்களை காட்டிலும் துன்ப காலங்களிலேயே...

* நடுகை - நாமே எதிர்பாரா வண்ணம் சில அபூர்வ மனிதர்களை காண நேரிடும்.படிப்பு,வளர்ப்பு என்பதை உலக ஞானம் பெற்று அவர்கள் கூறுபவை யாவும் நிதர்சனங்களாய் ஒலிக்கும்.பயிர் செடிகளின் மீது பிரியம் கொண்ட மாடு மேய்க்கும் கிழவரூடான சம்பாஷனைகளே இச்சிறுகதை.


இச்சிறுகதை தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையே ஒரு அழகிய சிறுகதையை போன்றது."இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது" என கூறுகிறார்.இன்றைய பொழுதுகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட நினைவுகளின் பகிர்தல் மிக அவசியமானதே!!

வெளியீடு - அன்னம் புக்ஸ்
விலை - 45 ரூபாய்

Friday, September 26, 2008

அனிதா தேசாயின் "கடல்புறத்து கிராமம்" - ஒரு இந்திய குடும்பத்தின் கதை

ஆரம்ப கால இலக்கிய வாசிப்புகளை எளிதில் மறக்க முடியாது.சிறுவர் இலக்கியம் படிக்க ஆவல் மேலிட தேடிய பொழுது முதல் பக்கத்தில் என் ஒன்பதாம் வகுப்பு கிறுக்கல்களோடு இப்புத்தகம் கிடைத்தது."ஈசாப் நீதி கதைகள்","பிஞ்சுகள்","டின்கில்","அக்பர் அண்ட் பீர்பால்",தெனாலிராமன்","டாம் சாயேர்" ஆகிய நூல்களை இப்பொழுது பார்த்தாலும் எனது பால்யம் திரும்பி வந்ததாகவே உணர்வேன்.குழந்தைகளுக்கு என பல புதினங்கள் எழுதிய அனிதா தேசாயின் அற்புத படைப்பு "கடல்புறத்து கிராமம்".




படிப்பறிவில்லாத ஹரிக்கு வேலை செய்ய உகந்தது என தெரிவது மூன்று வழிகள்.ஊரில் புதிதாய் வரபோகும் ரசாயன ஆலை,அவ்வூரின் பெரும் பணக்காரனான பிஜ்ஜுவின் மீன் பிடி கப்பலில்,மும்பை சென்று பிழைத்து கொள்வது.முதல் இரண்டு வழிகளில் நம்பிக்கை இழந்து மும்பை சென்று பிழைக்க எண்ணி கப்பல் ஏறுகிறான். கிராமத்து சிறுவனான ஹரிக்கு மும்பை நகரின் ராட்சச பிரம்மாண்டம்,ஓயாத மக்கள் நடமாட்டம்,இயந்திர நடவடிக்கைகள் ஆச்சர்யத்தை தருகின்றது..அப்பெரு நகரிலும் ஹரிக்கு உதவ ரோட்டு உணவு கடை முதலாளி முன் வந்து அவரோடு அவனை வைத்து கொள்கிறார்.

மெல்ல நிறைவேறி வரும் தன் கனவுகளை எண்ணி வியப்பும் பெரிமிதமும் கொண்டு இருக்கும் வேளையில் ஹரிக்கு அவன் பனி செய்யும் உணவு கடையின் அருகில் கடிகார பழுது கடை நடத்தும் கிழவர் ஒருவரோடு நட்பு உண்டாகிறது.பகல் பொழுதுகளில் அவரோடு அமர்ந்து கடிகாரம் பழுது செய்ய கற்று கொள்கிறான்.நாட்கள் செல்ல செல்ல தொழில் தேர்ச்சி உடன் உலக ஞானமும் பெற்று நிறைவான பணத்தோடு வீடு திரும்புகிறான்.இதனிடையில் அவன் சகோதரிகள் தம் வீட்டருகே உள்ள பங்களாவில் வேலை செய்தும்,அவ்வீட்டரின் உதவியோடு தாயை மருத்துவமனையில் சேர்த்து குணமாக்குகின்றனர்.அவன் தாயின் நிலை கருதி தந்தையும் திருந்துகிறார்.




மேலோட்டமாக பார்த்தால் பட்டணம் சென்று பணம் சம்பாதித்து திரும்பும் கிராமத்து சிறுவனின் கதையாய் தோன்றும். குடும்பம் குறித்த அவனது சிறு வயது கடமைகளும்,கனவுகளும்..எட்டா கனியான விஷயங்கள் குறித்த அவனது பார்வைகள் விரிவாய் சொல்ல பட்டுள்ளது.ஹரியின் மூத்த சகோதரி லைலாவின் பாத்திர வடிவமைப்பு மிக நேர்த்தியானது,சிறு வயதில் குடும்ப நிலை அறிந்து தம் விருப்பங்களை விடுத்து உழலும் பல பெண்களின் குறியீடு.தென்னை மரங்களும்,கடல்கரை இரவுகளும் தந்த மகிழ்ச்சியை தொலைத்து மும்பை செல்லும் ஹரியின் பார்வையில் அந்நகரம் விவரிக்கப்படும் இடம் அற்புதம்.

மிக நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.வறுமையின் கொடுமைகளை பாரம் என கருதாது எப்படியேனும் பிழைத்து முன்னேற துடிக்கும் ஹரியின் கதை மிக்க நம்பிக்கை தரவல்லது.மொழிபெயர்ப்பில் எந்த வித இடறலும் இல்லாதது பெரும் ஆறுதல்.பிரிட்டன் அரசு இந்நாவலுக்கு இலக்கிய விருது அளித்துள்ளது.

வெளியீடு :நேஷனல் புக் டிரஸ்ட்
விலை : 22 ரூபாய்

Wednesday, September 24, 2008

ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" - கலைக்க முடியாத ஒப்பனைகளின் பதிவு!!

ஆதவனின் எழுத்துக்களோடு அவ்வளவு பரிட்சயம் இல்லாதிருந்தேன்.நண்பர்கள் வாயிலாக அவரின் "காகித மலர்கள்" மற்றும் "என் பெயர் ராமசேஷன்" நாவல்கள் குறித்து அறிந்து, நீண்ட தேடலுக்கு பிறகு லாண்ட்மார்க்கில் ஒரு வழியாய் இந்நாவல் வாங்க முடிந்தது.பல ஆண்டுகளுக்கு முன் வந்த இந்நாவலை உயிர்மை பதிப்பகம் மறு பிரசுரம் செய்துள்ளது.

கதை நாயகன் ராமசேஷன்.இளைஞன்.சராசரிக்கும் மேலான சிந்தனை கொண்டவன்.அவன் வாயிலாக அவன் சந்தித்த மனிதர்கள் அவர்களோடான உரையாடல்,விவாதங்கள்,அவர்களின் போலியான பேச்சு,காதல்,நட்பு என சகலத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறான்.போலியான முகங்களினூடே நிஜ முகம் முகம் தேடி அலையும் ராம் சந்தித்த மனிதர்களை விவரிக்க சுலுவாக பெண்கள்,பெரியவர்கள்,நண்பர்கள் என பிரிக்கலாம் .




பெண்கள் - வீட்டினுள் அடைந்து கிடக்கும் பெண்களின் கவனமும்,சிரத்தையும்யார் மீது தன் ஆளுமையை செலுத்தலாம் என்பதிலேயே இருக்கும்,மாமியார்கள் மருமகள்கள் மீதும்,அவர்கள் தம் பிள்ளைகள் மீதும் தொடர் சங்கிலி என கட்டவிழ்க்கும் ஆளுமை - பரிவு,பாசம்,கடமை,கண்டிப்பு என பெயர் மாறி தொடர்வதை சொல்லி இருப்பது சற்று மிகை என தோன்றலாம்,அதனூடாக ஆழ்ந்து நோக்கினால் அது எவ்வளவு உண்மை என புலப்படும்.தனது பாட்டி,தாய்,அதை ஆகியோரே குறித்த ராமின் கருதும் இதை வலியுறுத்துவதே.

காதலா நட்பா என குழப்பி கொள்ளும் வயதில் ராம் சந்திக்கும் இரு பெண்கள் மாலா மற்றும் பிரேமா.வளர்ப்பில் செழுமை,நுனி நாக்கு ஆங்கிலம்,நாகரீக உடையலங்காரம் என தோன்றும் மாலாவின் மாய தோற்றம் குறித்தும்,அவளின் செய்கைகளை வர்ணிக்கும் இடங்கள் நகைப்பை உண்டு பண்ணினாலும்,முகத்தோடு சேர்த்து நடை,உடை,பாவனை,பேச்சிலும் ஒப்பனை ஏற்றி வலம் வரும் இக்கால பெண்கள் பலருக்கும் பொருந்தும் வேதனைக்குரிய நிகழ்வே.கவர்ச்சி தோற்றம் அற்று அதீத சிந்தனை கொண்டு எளிமையாய் தோன்றும் பிரேமா கல்லூரி சுற்றதால் "ஏஞ்சல்" ஆக்கபடுகிறாள்.இவ்விரு பெண்களின் மேம்போக்கான மாயைகளை விளக்கி நிஜம் அறிய முயன்று தோல்வியுறுகிறான் ராம்.



பெரியவர்கள் - ராமின் தந்தை,தாயை பேணி,மனைவிக்கு அடங்கி,குழந்தைகளின் விருப்பத்தை நிறைவு செய்து,இயற்கையோடு பேரன்பு கொண்டு,சக மனிதர்களின் போலி வேஷங்களை அமைதியாய் வேடிக்கை பார்த்து,பிறிதொரு நாள் யாரும் அறியாது வீட்டை விட்டு வெளியேறுகிறார்.ராமின் வெறுப்பிற்குரிய நபராய் முதலில் சித்தரிக்கபடுபவர்,இறுதியில் அவன் தேடிய நிஜ முக மனிதராய் தோன்றுகிறார்.சமூகத்திற்கென சந்தோஷ நிலை முகமூடி அணித்து திரியும் ராமின் பெரியப்பா,எதிலும் எப்பொழுதும் மாற்று கருத்து கொண்டு வாதம் புரியும் ராமாமிர்தம்,மாணவர்களை பகடையாக்கி மகிழ்வுறும் பேராசிரியர் என ஒவ்வொருவரும் தன் இயல்பை மறைத்து பொருந்தா வேடம் தரித்து மற்றவர்களை ஈர்க்க படும்பாடு ஹாசியம் கலந்து சொல்ல படுகின்றது ராமின் வாயிலாக.

நண்பர்கள் - ராமின் அறை தோழன் ராவ்,பணம் படைத்த ராவின் நடப்பை தக்க வைத்து கொள்ள எப்பொழுதும் அவனுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் இருக்கும் மூர்த்தி.ராவின் பலவீனங்கள் மூர்த்திக்கு பலம்,மூர்த்தியின் பலவீனங்கள் ராமிற்கு பலம்.உன்னை விட நான் உசத்தி என காட்டி கொள்ள பிறரின் பலவீனங்களை ஆராயும் நண்பர்கள்.

மனிதர்களுக்கு ஏற்ப,இடத்திற்கு ஏற்ப,சந்தர்பங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி முகமூடி அணிந்து ஆடும் நாடகம் சோர்வின்றி தொடர்கின்றது நம்மிடையே.இந்நாவலின் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை இனம் கண்டு கொள்ளலாம்.அதை நம்ப மறுக்கும் முகமூடியும் நம்மிடம் உண்டு.நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை எளிமையான நடை,நாயகனோடு நேரடி உரையாடல் கொள்வது போன்ற உணர்வு, மிகுந்து நிற்கும் பகடி,சிறப்பான ஒப்புமைகள்.ஒரு மோசமான திரைப்படம் குறித்த ராமின் ஒப்புமை 'பைத்தியகாரனின் கனவு போல" ,எந்த காலத்திற்கும் பொருந்தி போகும் கதையாடல்.நாவலில் அதிகம் காணப்படும் வார்த்தை "இண்டலச்சுவல்" - ஒப்பனைகள் கலைக்க படாமல் தொடர்வது இதன் பொருட்டே!!

ஆதவனின் மற்றும் ஒரு நாவலான "காகித மலர்கள்" படிக்க பெரும் தூண்டுதளாய் இந்நாவல் அமைந்துவிட்டது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : 120 ரூபாய்

Wednesday, September 17, 2008

ருத்ரைய்யாவின் “அவள் அப்படிதான்” - ஒரு மாற்று திரை முயற்சி

இதுவரை நான் பார்த்த சிறந்த படங்கள் யாவும்,அப்படங்களை குறித்து முதலில் அறியாமலேயே பார்த்தவை.ஹிட்ச்காக்கின் "சைக்கோ", "அமெலியா", கிரிஷ் காசர்கோடின் "கடஷ்ரதா",அபர்னா செனின் "மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர்","செம்மீன்',ஆகிய பட வரிசையில் நான் பார்த்த இப்படமும் சேரும்.எதிர்பார்ப்பு ஏதும் இன்றி பார்க்க பட்ட இப்படங்கள் முழுதுமாய் ஆளுமை செய்வதை ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர முடிந்தது.நடுநிலை பார்வையாளனால் சிறந்த படம் என சொல்ல கூடிய வகையில் முழுமை பெற்ற படங்கள் இவை.

1970 களில் வெளிவந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு புதிய திரை முயற்சியாய் வெளிவந்தது "அவள் அப்படிதான்" . ருத்ரைய்யாவின் இயக்கத்தில் ஸ்ரீ பிரியா,கமல்ஹாசன்,ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இப்படம் பெண்ணின் உடல் குறித்த சமூக பார்வையை முன்னிறுத்தி சொல்லப்பட்டது. இயக்கம்,நடிப்பு,இசை,வசனம் எல்லா விதத்திலும் முழுமை பெற்ற இத்திரைப்படம் மஞ்சு என்னும் இளம்பெண்ணை சுற்றி நகர்கிறது.




தாயின் முறைகேடான நடத்தையால் மனபிறழ்வு கொண்டிருக்கும் மஞ்சு தான் சந்திக்கும் ஆண்கள் அவர்களின் ஆணாதிக்க மனோபாவம்,சிந்தனைகள் கண்டு தன்னை தலைகனம் கொண்டவளாய் வெளிகாட்டுகிறாள்.மஞ்சு சந்திக்கும் இரண்டு ஆண்கள், மஞ்சுவின் மனதறிந்து தோழனாய் இருந்து அவளை நேசிக்கும் பத்திரிக்கையாளன்,ஆணாதிக்க சிந்தனை கொண்டு பெண்களை துச்சமாய் என்னும் அவளின் அலுவலக உயர் அதிகாரி. இதில் பத்திரிக்கையாளனாய் கமலும்,உயர் அதிகாரியாக ரஜினியும் நடித்துள்ளனர்.கடந்த கால ஏமாற்றம் ஒன்றினால் நண்பனின் காதலை ஏற்க மனமின்றி தனியே வாழ்வை தொடர முடிவு செய்கிறாள் மஞ்சு.

காட்சிகள் மூலம் பாத்திரங்களின் எண்ணங்களை காட்டுவதை பெரிதும் தவிர்த்து பெரும்பாலான காட்சிகள் விவாதங்களின் வழியே செல்கிறது.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இளையராஜாவின் இசை மற்றும் வண்ணநிலவனின் வசனம்.பின்னணி இசையில் ராஜாவை மிஞ்ச யாரும் இல்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இத்திரைப்படம்."உறவுகள் தொடர்கதை" என தொடங்கும் பாடல் யேசுதாசின் குரலின் செவி வருடி செல்வது.வண்ணநிலவன் கடல் புறத்தில்,ரைநீஸ் ஐயர் தெரு ,எஸ்தர்,கம்பா நதி என சிறந்த இலக்கியம் படைத்த எழுத்தாளர்.மிக கூர்மையான/தெளிவான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.ஆங்கில நெடி அதிக கொண்டவை!

இத்திரைப்படம் ருத்ரைய்யா இயக்கிய முதல் படம்.பெரும்பாலோரால் சிறந்த படம் என அறியப்பட்டது.இவரின் அடுத்த படமான கிராமத்து அத்தியாயம் அவ்வளவு பேசப்படவில்லை,பெரும் எதிர் பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்தது.என் மட்டிலும் சிறந்த படம் என்பது ஒரு சிறந்த நாவலை போன்றது,படித்து முடித்து பல காலங்களுக்கு அதன் நிகழ்வுகளும்,மாந்தர்களும் நம்மோடு இருப்பதாய் உணர்த்துவது.அவ்வகையில் இப்படமும் எப்போதும் பேசப்பட முழு தகுதி கொண்டது!!

Thursday, September 11, 2008

ஜெயமோகனின் "ரப்பர்" -ஒரு தலைமுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

ஜெயமோகனின் எழுத்துக்கள் அவரது இணையத்தளம் மூலமாகவே பரிட்சயம்.அவரின் சிறுகதைகளை இலக்கிய இதழ்களில் படித்திருக்கின்றேன்.முற்றிலும் மாறுபட்ட மொழியாடல் கொண்டு வரும் அவரின் படைப்புக்களை இதுவரை படித்த வாய்ப்பு கிட்டாமல் இருந்து.ஒரு வழியாய் ஜெயமோகனின் முதல் நாவலான "ரப்பர்" படிக்க கிடைத்தது.

நாவலின் பெயரிலேயே இதன் கதை அடங்கி உள்ளது.அதிக நீரை உறிஞ்சி,நெடுக வளர்ந்து நிற்கும் ரப்பர் மரங்கள் ரப்பர் பாலிற்காக அறுபட்டு,பெரும் காயங்களோடு இறுதி காலத்தை கடப்பவை,அது போலவே வாழ் நாள் முழுதும் பிறரின் ரத்தத்தை உறிஞ்சி சுக வாழ்வு வாழ்ந்து தன் இறுதி நாட்களில் படுக்கையில் துன்பப்படும் பெரியவர் பொன்னு பெருவட்டரின் தலைமுறை பற்றிய கதை.




ஒரு கூட்டத்தாரின் சுயநலம் இல்லாது,பெரு முயற்சி கொண்ட உழைப்பின் பயனே ஒரு சமூகம் உருவாக காரணமாய் இருக்கும்.கிராமங்கள் உருவாகிய கதைகள் கேட்பதற்கு என்றும் இனிமை.கி.ரா வின் கோபல்ல கிராமம் அதற்கோர் இனிய எடுத்துகாட்டு.பொன்னு பெருவட்டரின் குழந்தை பிராயமும்,இளமை காலங்களும் விவரிக்கப்படும் பெரும் துன்பம் நிறைந்தவை.வாழ வழியின்றி பிழைப்பு தேடி வேறு ஊருக்கு செல்லும் பொன்னு பெருவட்டார் குடும்பம் அடிமை வாழ்கைக்கு பணிகிறது.தனது காலத்தில் பெரும் முதலாளி ஒருவரிடம் தரிசான கரடு நிலைத்தை இனாமாக பெற்று தம் கூட்டத்தாரோடு பெரும் முயற்சி கொண்டு அதை விளைநிலமாக மாற்றுகிறார்.பின்பு அந்நிலமே பெரும் ரப்பர் காடாக மாறி அவரை செல்வந்தர் ஆக்குகின்றது.

பொன்னு பெருவட்டரின் குணாதிசயங்கள் ஒரு முரட்டு முதலாளிக்கே உரியது.எப்பொழுதும் கோவம் கொண்டு,வேலையாட்களை துச்சமாக மதித்து,முடிந்த வரை தன்னிடம் வேலை செய்யும் கூலிகளை ஏமாற்றி செல்வம் சேர்கிறார்.தனது மூத்த மகனோடும் மருமகலோடும் இருக்கும் பெருவட்டார் தன் இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் நாட்களில் கதை நகர்கிறது.அவரின் கடந்த காலங்கள் யாவும் இடைஇடையே சொல்ல படுகின்றது.

பெருவட்டரின் மகன் அரசியல் மோசடியால் பெரும் தொகையை இழந்து,தனது ரப்பர் காடுகளை விற்கும் நிலைக்கு தள்ளபடுகிறார்,அவரின் மனைவி பெருவட்டதி ஆடம்பர மோகம் கொண்டு எதார்த்த வாழ்வில் நாட்டம் இன்றி திரியும் சராசரி பணம்படைத்த பெண்.பெருவட்டதியின் இளைமைகால வர்ணனைகள் அவளின் இப்பொழுதைய நிலைக்கு முக்கிய காரணமாய் சொல்லப்படுகின்றது.




பொன்னு பெருவட்டருக்கு இரண்டு பேரன்கள் லிவி மற்றும் திரேஸ்.பொறியியல் படிக்கும் லிவி சராசரி இளைஞன்,எதிலும் நாட்டம் இல்லாது பெருவட்டரை தொல்லை என நினைக்கிறான்.திரேஸ் ஊதாரியாக,பெரும் குடிகாரனாக படிப்பை பாதியில் விட்டு யாவரின் வெறுப்பிற்கும் ஆளாகிறான்.ஆனால் திரேசின் மீது பொன்னு பெருவட்டருக்கு எப்பொழுதும் ஒரு தனி பிரியம் இருக்கின்றது.ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் யாவரும் ஒவ்வொரு குணம் கொண்டு,பணம் ஒன்றினையே குறிகோளாய் கொண்டு ஆடம்பர வாழ்வின் மிதப்பில் இறுதியில் யாவற்றையும் இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

இரவு பகல் பாராது உழைத்து சேர்ந்த பெருவட்டரின் சொத்து யாவும் அவரின் தலைமுறையினரால் ஒன்றும் இன்றி ஆகிறது.மூத்தோர் நமக்கு அளித்த செல்வம் அது பணமோ,நிலமோ,நல்ல குணநலன்களோ,குடும்ப மதிப்போ எதுவாயினும் அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்த்தும் இந்நாவலின் மொழியாடல் நாகர்கோவில் பகுதி தமிழ் நடையில் உள்ளது.இந்நாவல் முற்றிலும் ஒரு வித்தியாச வாசிப்பு அனுபவமே.