Monday, July 13, 2009

லா.ச.ராவின் "அபிதா"

தமிழில் அதிகமாய் எனக்கு பரிந்துரைக்க பட்ட பெயர்களில் ஒன்று லா.ச.ரா.சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் சென்றிருந்தேன் அம்மாவிற்காக ராஜேந்தரகுமாரின் "வால்கள்" புத்தகம் வாங்கிட.அந்த புத்தகத்தை தேட தொடங்கி கடையையே முழுதாய் புரட்டி போட்டதில் சில(??!!) நல்ல புத்தகங்களும் (அசோகமித்ரனின் "தண்ணீர் தண்ணீர்" ,வண்ணநிலவனின் " கடல்புரத்தில்" ,மற்றும் "அபிதா") கிடைத்தன.ராஜேந்தரகுமாரின் "வால்கள்" குறித்து
சொல்வதிற்கு ஒன்றும் இல்லை.கால இடைவெளி தான் ரசிக்க முடியாமல் செய்கின்றதோ என்னவோ.70 களில் உங்கள் பள்ளி காலம் இருந்திருந்தால் நிச்சயமாய் "வால்கள்" பிடிக்க வாய்ப்புள்ளது.




லா.ச.ரா வின் இந்நாவலை எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி படிக்கச் துவங்கினேன்.கசப்பான நிகழ் காலத்தை மறந்திட இனிமையான கடந்த நாட்களின் நினைவுகளுக்குள் மீண்டும் மீண்டும் மூழ்கும் நாயகனின் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களை அதிர்ச்சியோ ஆரவாரமோ இன்றி மெல்லிய நகைச்சுவையோடு சொல்லுகின்றது. லா.ச.ராவின் எழுத்து,தேட கிடைக்காத வார்த்தைகள்.....வர்ணிப்புகள்.. என விரிகின்றது.பொதுவாய் அயர்ச்சி தரும் நீண்ட வர்ணிப்புகள் இருந்தால் அந்த பத்தியை தவிர்த்து விட்டு தாவி செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும்.லா.ச.ராவின் நடையின் வசீகரம் அதற்கு இடம் தருவதில்லை.மேலும் ஒவ்வொரு பத்தியும் முக்கியத்துவம் கொண்டதாய் உள்ளது.


சிறுவயதில் தனது ஊரான கரடி மலையில் இருந்து ஓடி வந்து பட்டணத்தில் ஒரு முதலாளியிடம் தஞ்சம் புகும் அம்பி வேலையில் சிறந்து அவரின் மகளையே மணம் புரிகின்றான்.செழிப்பான வாழ்கையை அனுபவிக்க இயலாது அவனை துரத்துவது பால்யம் முதல் சிநேகம் கொண்டு விரும்பிய ஏழை காதலி சகுந்தலையின் நினைவுகள்!!நீண்ட நாட்களுக்கு பிறகு தனது ஊருக்கு செல்லும் அம்பி அங்கு சகுந்தலையின் வடிவாய் அவளின் மகள் அபிதாவை சந்திக்கின்றான்.அபிதாவின் மீது அம்பி கொள்ளும் பிரியத்தை வகைபடுத்துவதில் வாசகனுக்கு சிரமம் ஏற்படுகின்றது.அம்பி அபிதாவின் மீது கொள்ளும் காதல்(?),அபிதாவின் முறைமாமனான நவநாகரீக இளைஞன் மீது பொறாமை கொண்டு அம்பி புகையும் காட்சிகள் சற்றே அந்த பாத்திரத்தின் ஸ்திரதன்மையை சிறிது குலைக்கின்றது.

தீவிரமான வாசிப்பிற்கு பிறகு இரண்டு விஷயங்கள் மட்டுமே பளிச்சென புலப்படுகின்றது.அம்பியை ஆட்டுவிக்கும் குற்ற உணர்ச்சி மற்றும் அபிதாவின் மீது கொள்ளும் வகைப்படுத்த இயலா காதல்.மறு வாசிப்பின் பின் வேறு விஷயங்கள் புலப்படலாம்.கரடி மலை,கன்னி குளம் தொடங்கி ஆன்மிகம்,காதல்,அபிதா,மண உறவு என வர்ணனைகளுக்கு சிக்காதவை எதுவுமில்லை.லா.ச.ர எழுத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கின்றது..அதுவே வாசகனை சோர்வின்றி தன் வசப்படுதுவதாய் உள்ளது.லா.ச.ராவின் பிற நூல்கள் குறித்து அறிய ஆவலாய் உள்ளது.நண்பர்கர் பரிந்துரைக்க வேண்டுகின்றேன்.

வெளியீடு - கிழக்கு பதிப்பகம்

22 comments:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

பக்கங்களையும் விலையையும் குறிப்பிட்டால் இன்னும் சிறப்பு.

வாழ்த்துகள்.

Dr.Rudhran said...

இது 1982 டிசம்பர் 31, சென்னை ம்யுசியம் தியேட்டரில் நாடகமாய் அரங்கேறியது, அந்த நாடகத்தில் எம்.பி.சீனிவாசன் இசை ஒலித்தது..
அபிதா ஓர் அற்புதத்தின் அநுபவம்

Unknown said...

இந்தப் புத்தகத்தை வாங்கி வெகுநாட்கள் ஆகிறது. இன்னும் படிக்கத் துவங்கவில்லை.

சமீபத்தில் தான் லா சா ராவின் 'சிந்தா நதி' படித்து பதிவிட்டேன். தற்பொழுது பால குமாரனின் 'இரும்புக் குதிரைகள்' வாசித்துக் கொண்டு இருப்பதால் 'அபிதா' படிக்க சிறிது நேரம் எடுக்கலாம். உங்களுடைய பதிவினைக் கண்டதும் படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.

பகிர்விற்கு நன்றி லேகா...

கே.என்.சிவராமன் said...

லேகா,

முடிந்தால், தி. நகர் 'வானதி' பதிப்பகத்துக்கு செல்லுங்கள். லா.ச.ராவின் பெரும்பாலான படைப்புகள் அங்கு கிடைக்கும்.

படைப்பின் பெயர் நினைவில் இல்லை. இறப்பை குறித்து ஓரிடத்தில் இப்படி பதிவு செய்திருப்பார்:

'ஒருநாள் ஒரு மரத்தடியில் அவள் மத்தியானவேளையில் தூங்கிக்கொண்டிருந்தாள். மத்யானம் பிற்பகலாயிற்று. பிற்பகல் மாலையாயிற்று. மாலை இரவாயிற்று. இரவு காலை ஆயிற்று. காலை பகலாயிற்று. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாகப் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அவள் எழுந்திருக்கவேயில்லை...''

வாக்கியங்கள், புதுக்கவிதையாக மலர்ந்த அவரது இன்னொரு படைப்பு, 'த்வனி'. அந்தக் கதையின் முடிவு இப்படி இருக்கும்:

''நான் கண்விழித்ததும் இவ்வுலகை சிருஷ்டிக்கிறே... நான் தூக்கத்தில் அயர்கையில் என் சிருஷ்டியாகிய இவ்வுலகம் என் இமைகளின் குவிப்புள் ஒடுங்கிவிடுகின்றது. இவ்வுலகத்தை அழித்து, என் சடலத்தையும் கழற்றிவிட்டு பிரக்ஞையில் புகுந்து யோகநித்திரையில் ஆழ்ந்துவிடுவேன்.''

மத்தியதர குடும்பத்தின் சாதாரண நிகழ்வுகளுக்குள் பயணித்தபடியே அதன் எல்லையை அதிகபட்சமாக விஸ்தரிப்பது லா.ச.ராவுக்கு கை அல்லது மொழி வந்த கலை.

'பச்சைக் கனவு' சிறுகதை அவ்வப்போது என் மனதில் எட்டிப் பார்க்கும்.

கண்பார்வை நன்றாக இருந்து இளம் வயதில் பார்வை இழந்த ஒரு குருடன் பற்றிய கதை அது. அவன் கண்ணால் கடைசியாக கண்ட நிறம் பச்சை. அதனால் அந்த வர்ணம் அவன் மனதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. அன்றிலிருந்து, தான், கேள்விப்படுகிற, உணர்கிற பொருட்கள் அனைத்தையும் பச்சை நிறமாக கற்பனை செய்துப் பார்ப்பது அவனுக்கு பிடிக்கிறது.

நிலா பச்சையாக இருக்குமா? வெய்யில் பச்சையாக இருக்குமா? என்ற வாயைத் திறந்தால் தத்துபித்தென்று கேட்கும் அவன், இந்தப் பச்சைப் பிதற்றல்கிடையே தன்னுடைய முதல் மனைவி பற்றிய தரிசனத்தைத் தனது இளைய மனைவிக்கு சொல்கிறான். இதுதான் 'பச்சைக்கனவு' என்ற கதை.

'சிந்தாநதி' என்ற புத்தகத்தில் தனது நண்பர், மாசு குறித்து லா.ச.ரா இப்படி எழுதியிருப்பார்:

''மாசு நீங்கள் எனக்கு சுந்தரகாண்டம்; எத்தனை முறை படித்தாலும் பூர்த்தியாகாத பாராயணம்..!''

'அபிதா' குறித்த உங்கள் பதிவை வாசித்ததும் மனதில் சுழன்றதை பின்னூட்டமாக எழுதியிருக்கிறேன். இங்கு லா.ச.ராவின் வார்த்தைகளாக கொட்டேஷனில் எழுதியிருப்பது நினைவிலிருந்து எழுதியவை. தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

குப்பன்.யாஹூ said...

பகிரிவிர்க்கு நன்றி லேகா. நானும் லா ச ரா அதிகம் படித்தது இல்லை . படிக்க முயலுகிறேன்,

குப்பன்_யாஹூ

அ.மு.செய்யது said...

உங்களுக்கு என்னால் இய‌ன்ற ஒரு சிறு ப‌ரிசு.வ‌ந்து பார்க்க‌வும்.

இங்கே கிளிக்க‌வும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி.

இன்றுதான் உங்கள் வலைப்பூவுக்கு வர நேர்ந்திருக்கிறது திரு. அ.மு. செய்யது மூலமாக.

விருதுக்கு வாழ்த்துக்கள்.

deesuresh said...

பகிர்விற்கு நன்றி லேகா. லாசராவின் எழுத்துகள் நான் அதிகம் படித்ததில்லை. இனி படிக்க முயல்கிறேன்

லேகா said...

வருகைக்கு நன்றி வண்ணத்துபூச்சியார்

மிக சிறிய நாவலே இது.விலை 70 ரூபாய்.

லேகா said...

@ ருத்ரன்

வருகைக்கு மிக்க நன்றி.

இந்த வருட சென்னை புத்தக சந்தையில் உங்களை பார்த்தும் பேச தயக்கமாய் இருந்ததால் வந்துவிட்டேன்.

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி பிரபு.

லா.ச.ரா வின் "சிந்தா நதி" - குறித்து கொண்டேன் :-)))

லேகா said...

@பைத்தியக்காரன்

சிவராமன்..அற்புதமான பின்னூட்டம்.தீவிரமான வாசிப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.:-)

மரணத்தை தெரிவிக்கும் லா.ச.ரா வின் வரிகள் அற்புதம். வார்த்தைகளில் ஜாலங்கள் புரிகிறார்.

தி.நகரில் வானதி பதிப்பகம் எங்கு உள்ளது? Any Indian இல் கிடைக்குமா?

லேகா said...

நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா :-)

நன்றி செய்யது :-)

லேகா said...

ராம்ஜி,

வருகைக்கு நன்றி

நான் படிக்கும் முதல் லா.ச.ராவின் நாவல் இது.மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் நடை.

ரௌத்ரன் said...

ஐந்தாறு வருடங்களுக்கு முன் இவருடைய கழுகு என்ற நாவலை படித்திருக்கிறேன்...இப்பொழுது சுத்தமாக மறந்து விட்டது...இவருடைய த்வனி என்ற படைப்பு குறித்து அதிகம் சிலாகிக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டதுண்டு...பகிர்வுக்கு நன்றி...

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி ரௌத்ரன்

குப்பன்.யாஹூ said...

Lekha , found this blog, looks interesting and exciting, you might like .
http://kalpanase.blogspot.com/2009/07/blog-post_15.html

Krishnan said...

Lekha, got this book, yet to read it. Check out this:
வானதி பதிப்பகம் முகவரி :23, தீனதயாளு தெரு தியாகராஜா நகர் சென்னை - 600017 PHONE - 434 28 10.

லேகா said...

Krishnan,

Nice to hear!!

Tnx for providing the address,fantastic as always!!

WordsBeyondBorders said...

Hi,
La.Sa.Ra took prose as poetry to a new level. A phrase of his which I can never forget
"Kannadiyil Aval Bimbam Vizhum Oli Kettadhu". Amazing.

Another phrase which has never left me "Nerppendru Sonnal Suda Vendum".

There is another phrase which I don't remember correctly which shook me up. It starts like "Ennathaiyo Ezhudi..... and end's with "... Raname Vazhkai" (It is given in preface of one of Adhavan's novel. Don't remember the name of the novel)

By the way, am interested in knowing your opinion on 'Thanneer Thanneer'. One of the best ever novels (or is it a novella?).

Ajay

லேகா said...

அஜய்,

அற்புதம்.எவ்வளவு ரசித்து வாசித்திருந்தால் அந்த வரிகள் இன்றும் உங்கள் நினைவில் இருக்கும்.பைத்தியக்காரன் மற்றும் உங்களின் இந்த பின்னூட்டங்கள் தேர்ந்த வாசிப்பின் வெளிப்பாடு.

வலைத்தளம் வந்து சாதித்தது என்னவென்று கேட்டால்,யோசிக்காமல் சொல்வேன் அற்புத ரசனை கொண்ட உங்களை போன்ற இலக்கிய நண்பர்கள் என்று.

அருண் பாரத் said...

leka please see this
http://www.udumalai.com/?name=La%20Sa%20Ramamirtham&auth_id=39