Tuesday, March 16, 2010

A Very Long Engagement - பிரெஞ்சு திரைப்படம்

அதி தீவிர காதலை போரின் துயர விளைவுகளோடு பகிர்ந்திடும் இத்திரைப்படத்தை பார்க்க எனக்கான ஒரே காரணம் Audrey Tautou.ஏதோ ஒரு மயக்கும் வசீகரம் அந்த புன்னகையில்!!குழந்தை சிரிப்போடு இவர் தோன்றும் அமேலி திரைப்படம் உலக திரைப்படங்கள் வரிசையில் முக்கியமானது. இத்திரைப்படம்,முதலாம் உலக (பிரெஞ்சு - ஜெர்மனி)போரில் இறந்ததாக நம்பப்படும் தனது காதலன் மெனக் எங்கோ உயிரோடு இருக்கின்றான் என்கிற நம்பிக்கையில் மெதில்டா மேற்கொள்ளும் தேடலை சுவாரஸ்யம் கூட்டி சொல்லுகின்றது.

ராணுவ பணியில் இருந்து விடுபட தங்களை தாங்களே காயம்படுத்தி கொண்டதாக குற்றம் சாட்டப்படும் ஐந்து வீரர்களை குறித்த அறிமுகத்தோடு தொடங்குகின்றது திரைப்படம்.அந்த ஐவரில் மெதில்டாவின் காதலன் மெனக்கும் ஒருவன்.யுத்த களத்தில் இருந்து வெளியேற்றபடும் அந்த வீரர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களில் இறந்துவிட்டதாக நம்பபடுகின்றது.மெதில்டாவின் இதயம் எப்போதும் தனது கைகளில் துடித்து கொண்டிருப்பதாக சொல்லும் மெனக்,மரணத்தின் சமீபத்திலும் கூட அவர்கள் இருவருகும்மான ரகசிய குறியீடான "MMM"(Metilda Marry Menach)யை கருகிய மரம் ஒன்றில் செதுக்குவது என குறைந்த அளவிலான காட்சிகளில் நாயகனின் காதலின் தீவிரம் அழகாய் உணர்த்தபடுகின்றது.



திரைப்படம் முழுவதும் நாயகி மெதில்டாவின் ஆதிக்கம் தான்.இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு போலியோவினால் பாதிக்க பட்ட மேதில்டாவிடம் "நடப்பதற்கு சிரமமாக இல்லையா" என சிறுவன் மெனக் கேட்பதோடு தொடங்குகின்றது.அழகிய அக்கடற்கரை கிராமத்தின் கலங்கரை விளக்கத்தின் மீதேறி விளையாடும் அவர்களின் பால்ய காலங்கள்,கடற்கரை பாறைகளில் முதல் முதலாய் "MMM" என்பதை செதுக்கி கூச்சலிடும் மெனக்,தேவாலைய ராட்சச மணிகளில் மீண்டும் தங்களின் காதல் குறியீட்டை பதிப்பதுமான அவர்களின் சந்தோஷ தருணங்கள் மெல்லிய புன்னகையோடு ரசிக்கும்படியானவை.

மெனக் குறித்த செய்திகளை சேகரிக்க பாரிஸ் நகரம் செல்லும் மெதில்டா,துப்பறிவாளர் ஒருவரின் உதவியுடனும்,தனது கார்டியனான பெரியவருடனும் மெனக்கை யுத்த களத்தில் கடைசியாய் பார்த்தவர்களிடம் ஏதேனும் நல்ல செய்தி கிடைக்குமென நம்பிக்கை தேம்பிய விழிகளோடு பார்த்திருப்பது,சின்ன சின்ன நிகழ்வுகளின் சாத்தியத்தை கொண்டு மெனக் உயிரோடிருப்பதாய் சமாதானம் கொள்ளுவதுமான காட்சிகளில் ஆட்ரேயின் நடிப்பு அபாரம்.இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று,நாயகியின் உடல் குறையை வைத்து எந்த காட்சியிலும் சென்டிமென்டல் பேத்தல் பண்ணாமல்,அது குறையாய் கவனிக்கபடாமல் இருப்பதில் கவனம் மேற்கொண்டுள்ளனர்.பார்வையாளனுக்கு அழுத்தமாய் முன்னிறுத்தபடுவது அவளின் தளராத மனஉறுதி மட்டுமே.

மெனக்கை தேடி தொடங்கும் மெதில்டாவின் பயணத்தில் கிடைக்கும், உடன் குற்றம் சாற்றப்பட்ட மற்ற வீரர்கள் குறித்த குறிப்புகள் ஒவ்வொரு ராணுவ வீரனும் ஏதோ ஒன்றை இழந்தோ,இழந்த ஒன்றை கண்டேடுக்கவோ தான் போர்களத்திற்கு செல்கின்றான் என்பதை உணர்த்துவதாய் உள்ளது.மெனக்கின் மரணம் நிகழ்திருக்க கூடிய சாத்தியங்கள் அதிகப்படும் பொழுதுகள்,அதன் தொடர்ச்சியாய் நம்பிக்கை முழுதுமாய் நீர்த்து போன மனநிலையில் மெனக்கின் கல்லறையில் மெதில்டா பேசும் உருக்கமான காட்சி....என செல்லும் திரைக்கதையில் எதிர்பாரா திருப்பம் இறுதி காட்சி..!!

அமேலி திரைப்பட இயக்குனரின் மற்றொரு படைப்பான இதில் குறிப்பிடும்படியான விஷயங்கள் பல......சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட தங்கள் பகுதியை நிறைவாய் செய்திருப்பது,கடற்கரை கிராமத்தின் அழகை நேர்த்தியாய் கொணர்ந்திருக்கும் ஒளிப்பதிவு,ஆடை வடிவமைப்பு மற்றும் 1900களின் தொடக்கத்திலான பாரிஸ் நகரை கண்முன் நிறுத்தும் சிறப்பான கலை இயக்கம் என......காதலும்,தேடலுமான மேதில்டாவின் இப்பயணத்தின் சில உன்னத தருணங்கள் காதல் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதலுக்கு அர்த்தம் கூட்டுபவை!!

Wednesday, March 10, 2010

இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள்

இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்த விரிவான அறிமுகத்தோடு பிரேசில்,அர்ஜென்டினா,சிலி,டொமினிக் குடியரசு,கொலம்பியா தேசத்து முக்கிய இலக்கிய படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பிது.இலத்தீன் அமெரிக்க தேசங்கள் தோன்றிய வரலாற்றையும் அதன் நாகரீக வளர்ச்சியையும் கோடிட்டு காட்டும் அறிமுக கட்டுரை இந்த தொகுப்பை தொடர்ந்து படிக்க பெரும் தூண்டுதல்.ஸ்பானிஷ் - இந்தியர் கலப்பினமான மெஸ்டிஜோ குறித்த தகவல் குறிப்பிடதகுந்த சுவாரஸ்யம் கொண்டது.மொழிபெயர்ப்பு எளிமையாய் இல்லாதது புரிதலில் சிக்கல் ஏற்படுத்தவில்லை மாறாக ஆழ்ந்த வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதாய் தோன்றியது.

அர்ஜென்டினா சிறுகதைகள்

இசிதேரோ ப்ளேஸ்டின் பெகுண்டோ மாமா

அழகிய குடும்பம் ஒன்றின் சரிவை,அதில் இருந்து மீள அவர்கள் எடுக்கும் விபரீத முடிவை அதிர்ச்சி தரும் விவரணைகளோடு சொல்லும் இக்கதை உதாரண குடும்பங்கள் சிதையுறுவதை ஆராய்கிறது.எல்லாவிதமான மோசமான ஆசைகளும் கொண்டிருக்கும் பெக்குண்டோ தனது அக்காவின் வீட்டிற்கு வெகு நாட்களுக்கு பின்பு வருகின்றான்.முதலில் அவனை சேர்க்க தயங்கும் அக்குடும்பத்தினர்..அவனின் சாகச பேச்சிலும்,இதற்கு முன் அறிமுகமற்ற உற்சாகம் கூட்டும் புதிய பழக்க வழக்கங்களாலும் அவனோடு சேர்ந்து வாழ்வை கொண்டாடுகின்றனர்..மெல்ல மெல்ல தங்களின் குடும்பம் சரிவை நோக்கி செல்வதை உணர தொடங்கும் தருவாயில்.... கூட்டாய் எடுக்கும் பயங்கர முடிவே அவர்களை மீட்டெடுக்கின்றது.அர்ஜென்டினா நாட்டின் குடும்ப வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய செய்திகளை கொண்டிருப்பது இக்கதையின் சிறப்பு.

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் "மற்ற மரணம்"

இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரான போர்ஹேவின் "மற்ற மரணம்" சிறுகதை...சரித்திரத்தோடு மனிதன் கொண்டுள்ள தீராத தேடலை மையமாய் கொண்ட நேர்த்தியான புனைவு.டாமியான் என்னும் போர்வீரனை குறித்த தேடலில் இறங்கும் நாயகனுக்கு டாமியான் என்கின்ற பெயரில் இருவர் இருந்ததும்...தான் அறிய விரும்பிய டாமியான் குறித்த பிம்பங்கள் உருக்குலைந்து போனது தெரிய வரும் பொழுது டாமியானின் செயலை நியாயபடுத்தும் தீர்வை கொள்கின்றான்.பிரபஞ்ச சரித்திரத்தோடு நமக்குள்ள உறவினை பல்வேறு பரிமாணங்களில் விளக்க முயலும் முயற்சி இது!!





பிரேசில் சிறுகதைகள்

ஜோவோ உபால்டோவின் "தாயகத்து அலன்டெலோன்"

நவீன வாழ்வில் செக்ஸ் என்பது விந்து எடுப்பதும் - கொடுப்பதுமான வியாபாரம் ஆகி வருவதை மறைமுக குறியீடாய் சொல்லும் இக்கதை,சமுதாயத்தின் மீதான கவலையை முன்னிறுத்துகின்றது.70 களில் வெளிவந்த இக்கதை தற்பொழுதைய சூழலுக்கும் பொருந்தி வருவது ஆச்சர்யமே.இங்கு "அலன்டெலோன்" என்பது விந்து வங்கியின் குறியீடாய் சொல்லப்படும் காளை மாடு.

ஜோர்ஜ் அமாடோவின் "பறவைகள் நிகழ்த்திய அற்புதம்"

இந்த தொகுதியில் எனக்கு பிடித்த கதை.வாழ்க்கை குறித்த கவலை ஏதும் அற்ற நாடோடி பாடகனை பற்றியது.நகரங்கள் தாண்டி....தேசங்கள் தாண்டி.. செல்லும் இவனின் பயணம் சாகசங்கள் நிறைந்ததல்ல,காதல்கள் நிறைந்தது!!பேரழகு கொண்ட நாடோடி பாடகன் உபால்டோ கவிதைகளாலும்,பெண்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தான் என்னும் வரிகளே போதும் அவனை குறித்து அறிந்து கொள்ள!! ப்ரான்ஹாசை நகரில் சாபோ என்னும் பேரழகியை சந்திக்கும் உபால்டோ.....அவளோடு காதல் கொண்டிருக்கும் வேளையில் சாபோவின் கணவன் வந்துவிடுவதால் தப்பிக்க ஓட்டமெடுப்பதும் ....பின் எதிர்பாரா வண்ணம் பறவைகள் கொத்தி சென்று அவன் உயிரை காப்பாற்றுவதாகவும் முடிகின்றது இக்கதை.

போர்ச்சுகீஸ் சிறுகதை

கிளாரிஸ் லிச்பெக்டாரின் "அன்பு"

சட்டென தோன்றி மறையும் ஏதோ ஒரு காட்சியோ,சம்பவமோ அந்த நாள் முழுதும் நினைவில் அகலாது இருந்து இயல்பை புரட்டி போட்டுவிடுவதுண்டு..பார்வையற்ற யாசகனை காணும் நாயகி அன்னாவின் நிலை மாற்றத்தை நேர்த்தியான காட்சி கோர்வைகளால் சொல்லும் இக்கதை வேறுபடும் வாழ்க்கை சூழல் தோற்றுவிற்கும் மனகுழப்பத்தை ஒரு பெண்ணை முன்னிறுத்தி பகிர்கின்றது.

சிலி தேசத்து சிறுகதை

இசபெல் அலண்டேவின் "நீதிபதியின் மனைவி"

பெரும் புரட்சிகாரனான நிகோலசின் சாவு ஒரு பெண்ணால் தான் என பிறக்கும் பொழுதே குறி சொல்லபடுகின்றது.நீதிபதியின் மனைவி காசில்தா தான் அந்த பெண் என்று துவக்கத்திலேயே முடிவையும் சொல்லி விரிகின்றது இக்கதை.ஒரு நாவலை வாசித்த திருப்தி. நேர்த்தியான திரைக்கதை போல,முடிவு தெரிந்தும் தொடர்ந்து வாசிக்க தூண்டும் கதையாடல்.கதையின் முடிவு நிஜவாழ்க்கையில் அபூர்வமாய் காணக்கிடைப்பது,இருப்பினும் அது நம்பும்படியாக தந்திருப்பதே சாதனை.


கொலம்பியா தேசத்து சிறுகதை

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் "நீரில் மூழ்கிய நிகரற்ற அழகன்"

நோபெல் பரிசு பெற்றுள்ள மார்க்வெஸின் இக்கதை சிறுவர்களுக்கானது.Fairy Tales கதைகளை போல.......பிரம்மாண்ட உடலமைப்பு கொண்ட பேரழகனின் சடலம் சிறு மீனவ கிராமத்தில் கரை சேர்கின்றது..எதிரி தேசத்து கப்பல் என நினைக்கும் குழந்தைகள் அதை கண்டு மிரள்வதும் பின்பு கிராமத்தினர் அவனை குறித்த சந்தேகங்களையும்..தமக்கு தெரிந்த பழங்கதைகளையும் ஒன்றாய் புனைந்து அவன் நரமாமிசம் தின்பவர்களை கொல்லும் கடல் தேவனான எஸ்தபான் என்கிற முடிவிற்கு வருகின்றனர்.எஸ்தபானின் சடலத்தை அடக்கம் செய்வதிற்கு முன்பு அவனின் சடலத்திற்கு அலங்காரம் செய்ய அப்பெண்கள் செய்யும் அலட்டல்கள் ஆண்களின் பார்வையில் மிகுந்த நகைச்சுவையாய் சொல்லப்பட்டுள்ளது.பூக்களாலும்,பட்டு துணிகளாலும் அலங்கரிக்கபடும் எஸ்தபானின் சடலம் யாரும் நினைத்திடா வண்ணம் அடக்கம் செய்யபடுகின்றது.பெரும் சிரத்தை கொண்டு அந்த புதியவனிற்கு அவர்கள் செய்யும் மரியாதை கிராமத்தினரின் தூய்மையான அன்பினை தெரிவிப்பதாய் உள்ளது.


வெளியீடு - வர்ஷா,மதுரை

Sunday, March 7, 2010

இந்தியச் சிறுகதைகள் - "பாறைகள்"

நம் தேசத்தின் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள சிறுகதைகளின் இத்தொகுப்பு சமகால இந்திய இலக்கியம் குறித்த தெளிவான பார்வை பெற உதவாவிடினும் இந்திய மொழிகளின் சில காத்திரமான படைப்புகளை தெரிந்து கொள்ள உதவுகின்றது.மேலும் தமிழ் இலக்கியம் குறித்த ஒருவித திருப்தியும்,மகிழ்ச்சியும் உண்டாகின்றது.எதன் பொருட்டும் நமது படைப்புகள் குறைந்தவை அல்ல என்பதும் தெளிவாய் புலப்படுகின்றது.இத்தொகுதியின் பெரும்பால கதைகள் விளிம்பு நிலையின் அவலங்களை சொல்லுபவை.தேசம் முழுதும் பொதுவாய் பரவி கிடக்கும் ஏழ்மை இக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க போதுமானதாய் இருப்பது வருத்தமே.இத்தொகுதியில் உள்ள பிறமொழி எழுத்தாளர்கள் குறித்த சிறு குறிப்புகள் அவர்கள் குறித்து அறிய எளிதாய் உதவுகின்றது.


மொகள்ளி கணேஷின் "காளி" (கன்னடம்)- தமிழில் பாவண்ணன்

கன்னட இலக்கியத்தில் குறிப்பிடதக்க தலித் எழுத்தாளர் மொகள்ளி கணேஷ்.தலித் சேரி ஒன்றில் வாழ்ந்து மறைந்த காளி என்னும் பெண்ணொருத்தியின் நினைவுகளை நாயகன் மீட்டெடுக்கும் இக்கதை,தலித் சிறுவர்கள் ஒரு வேலை உணவிற்காக எடுத்துகொள்ளும் பிரயத்தனங்களை,நல்ல உணவின் பொருட்டும்,உடையின் பொருட்டும் கொண்டிருக்கும் கனவுகள்,அது நிறைவேற பண்ணை கூலிகளாய் தொடர்ந்திட கூட தயங்காத மனநிலைக்கு தள்ளபட்டிருப்பதையும் விவரிக்கும் வரிகளில் பதற்றம் கொள்ள செய்கின்றன.பெருமாள் முருகனின் "கூள மாதாரி" மற்றும் இமயத்தின் "கோவேறு கழுதைகள்" நாவல்கள் விரிவாய் சொல்லியதை சிறுகதை வடிவில் படிப்பதாய் இருந்தது.

குஷ்வந்த் சிங்கின் "ஒரு பெண்மணியின் சித்திரம்" (பஞ்சாபி) - தமிழில் முத்துமோகன்

வெகு அழகானதொரு கதை.தனது பாட்டி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் இக்கதையில் கால சுழற்சியில் சிறுவர்கள் படிப்பு,வேலை என திசை மாறி கொஞ்ச கொஞ்சமாய் பாட்டி,தாத்தாவிடம் இருந்து அந்நியபட்டு போவதை தனக்கேயான பகடி கலந்து கூறி உள்ளார்.

பிரிஜ் மோகனின் "வால்" (சிந்தி)- தமிழில் சுந்தர்ஜி

விசுவாசத்தின் பெயரில் எதையும் செய்ய தயங்காத இன்றைய அலுவலக சூழலை பகடி செய்யும் இக்கதை,அதீத நன்றி உணர்ச்சியின் காரணமாய் நாயகனுக்கு வால் முளைப்பதும்,அதன் தொடர்ச்சியாய் அவன் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளும் என நகைச்சுவையாய் நீள்கின்றது.ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் நன்றி மிக்கவர்களாகி..கண்ணுக்கு புலப்படா வால் கொண்டு திரிவதாய் மாயையை தோற்றுவிக்கின்றது இக்கதை.



ஆர்.எஸ்.சுதர்சனத்தின் "சாம்பலின் சுமை" (தெலுங்கு)- தமிழில் சா.தேவதாஸ்

புகை பிடித்தலை முன்வைத்து நாயகன் தனக்குள் எழுப்பி கொள்ளும் கேள்விகளும் அது குறித்தான கடந்த கால நினைவுகளுமான இக்கதை,சிகரட் பழக்கம் குறித்தான ஒருவனின் பார்வையை விரிவாய் முன்வைக்கின்றது.தனிமையின் குறியீடாய் அதை கொள்ளும் நாயகனின் நினைவில் நீங்காது இருக்கும் நிகழ்ச்சி ஒன்றே அதற்கு காரணம் என விளக்குகின்றது இக்கதை.

அமிதாப்பின் "சபிக்கபட்ட வாழ்க்கை" (மராத்தி) - தமிழில் சா.தேவதாஸ்

வறுமையின் குரூரத்தை இது போல எவரும் விளக்கி இருக்க முடியாது..அடித்து வீழ்த்தப்படும் பசுவின் இறைச்சிக்கு ஒரு சேரியின் மக்கள் அடித்து கொள்வதும் அவர்களுக்கு மத்தியில் சிறுவன் ஒருவன் தனக்கான இறைச்சியை பெற தடுமாறுவதும்..கடைசியாய் பெற்றதை கழுகளின் பிடியில் இருந்து பாதுகாத்து வீடு சேர்ப்பதும் என மேலோட்டமாய் கதை சொல்லி சென்றாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் மனதை பிசைபவை.இத்தொகுதியின் மிகச்சிறந்த கதை இதுவென்பேன்.

பகவதி சரணின் "வெகுமதி" (ஒரியா) - தமிழில் தேவகி குருநாத்

இந்திய சட்டத்தின் ஓட்டைகளை சாடும் இக்கதை,குற்றங்களின் கிடங்காய் திரியும் பணக்காரனை கொலை செய்யும் அப்பாவி வேடுவனான கினுவாவை பற்றியது.மிருகங்களை வேட்டையாடுவதை போலவே இதுவும் என்று எண்ணி தன் காரியத்திற்காக பரிசை எதிர் நோக்கும் கினுவாவின் பாத்திரபடைப்பு படிப்பறிவில்லாத பாமரனின் வெகுளி மனநிலையின் குறியீடு.

கிரேசியின் "பாறைகள்" (மலையாளம்) - தமிழில் ரவி இளங்கோவன்

ஏழ்மையின் பொருட்டு தொடர்ந்து வரும் குடும்ப சிக்கல்களும் தவிர்க்க முடியா அலுவலக சங்கடங்களும்,குழப்பங்களும் ஒரு பெண்ணின் மனதை பாறையென இறுக செய்வதை தெளிவான காட்சி கோர்வைகளால் உணர்த்துகின்றது இக்கதை.வறுமையினால் கன்னியாஸ்திரி ஆக கட்டாயபடுத்தபடும் சூழலின் அபாயத்தையும் இக்கதை தெளிவுபடுத்துகின்றது.மலையாள இலக்கிய உலகிற்கு புதியவரான கிரேசியின் இக்கதை முக்கியமான சிறுகதைகள் வரிசையில் இடம் பெற்று இருப்பதில் ஆச்சர்யமில்லை.

ந.முத்துசாமியின் "செம்பனார் கோவில் போவது எப்படி?" (தமிழ்)

ந.முத்துசாமியின் கதைகள் இதற்கு முன் அறிமுகம் இல்லை.திரைப்படம் பார்க்க செம்பனார் கோவிலுக்கு மாட்டு வண்டி கட்டி புறப்பட யத்தனிக்கும் பெரிய வீட்டு இளைஞன் ஒருவனின் முழு சோம்பேறித்தனத்தை சொல்லும் இக்கதை ஏனோ புழுக்கம் நிறைந்த வேனிற்கால பகல் பொழுதுகளை நினைவூட்டியது!!

வெளியீடு - சந்தியா பதிப்பகம்
தொகுப்பாசிரியர் - தளவாய் சுந்தரம்

Thursday, March 4, 2010

அனுரணன் - வங்காள திரைப்படம்

கடந்த வார இறுதி,சில குறும்படங்கள்,சிறப்பான இந்த வங்காள திரைப்படம் என உருப்படியாய் கழிந்தது.லோக் சபா தொலைகாட்சியில் கடைசியாய் பார்த்த" அக்ரகாரத்தில் கழுதை" திரைப்படம் கொஞ்சம் ஏமாற்றம் தந்தாலும் துணிச்சலான முயற்சி என்னும் வகையில் பிடித்திருந்தது.மேலும் அத்திரைப்படம் வெளிவந்த காலத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து நிறையவே கேள்விப்பட்டு அதிக எதிர்பார்ப்போடு பார்த்திருந்தேன்.இந்த திரைப்படத்தையும் வழக்கம் போலவே டைட்டில் கார்டை தவற விட்டு பார்க்க தொடங்கினேன்.ராகுல் போஸ் முகத்தை பார்த்ததும் ஒரு வித ஆசுவாசம்,படம் நிச்சயம் ஏதோ வகையில் நிறைவை தரும் என.அது பொய்க்கவில்லை.கணவன், மனைவிக்கிடையேயான உறவை இவ்வளவு நுட்பமாய் இதற்கு முன் திரையில் பார்த்ததில்லை.மேலும் ஆண்- பெண் நட்புறவு எவ்வளவு புனிதம் காத்தாலும் சமுதாயத்தின் பார்வை மாறாது என்பதையும் அழுத்தமாய் பதிவு செய்கின்றது.



ராகுல் - நந்திதா,அமித் - ப்ரீதா என நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு உறவுகளின் மேன்மையை வெகு சிறப்பாய் படைத்துள்ளார் இயக்குனர்.லண்டனில் வசிக்கும் ராகுல்(ராகுல் போஸ்),நந்திதா (ரிதுபர்னா )தம்பதியினர் குறித்த ஆரம்ப காட்சிகள்,அங்கே அவர்களுக்கு அறிமுகமாகும் அமீத் (ராஜத் கபூர்),கொஞ்சம் லண்டன் நகரம் என முதல் பாதி அழுத்தம் குறைவாய் தொடங்கினாலும்...வசனத்தின் வழியே இயக்குனர் நிறையவே சொல்லி செல்கின்றார்.அலுவலக தோழியோடு ராகுல் தனது சொந்த நகரமான கொல்கத்தா குறித்து சிலாகிக்கும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு.உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் குறித்தான ஏக்கமும்,பிரியமும் மாறாது என்பதை விளக்கும் காட்சி அது.

வேலை மாற்றல் வாங்கி கொல்கத்தா திரும்புகின்றனர் ராகுல் தம்பதியினர்..இனி வரும் காட்சிகள் ஒவ்வொன்றுமே கவித்துவமானவை!!தனது தாயின் கடிதத்தை ராகுல் நந்திதாவோடு சேர்ந்து வாசிக்கும் காட்சி கடிதங்களின் காலம் முடிந்து போக வேண்டிய ஒன்றில்லை என தோன்ற செய்தது.குழந்தையின்மை குறித்த இருவரின் வருத்தங்களும் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ச்சியாய் மழலையர் பள்ளியில் ஆசிரியையாய் சேரும் நந்திதா குழந்தைகளின் உற்சாகத்தில் புதிய உலகை காண்கிறாள்.நந்திதாவாக நடித்துள்ள ரிதுபர்னா எந்த இடத்திலும் அதீத உணர்ச்சியை காட்டாமல் வெகு எதார்த்தமாய் நடித்துள்ளார்.

ராகுல் தம்பதியினருக்கு அமீதின் மனைவி ப்ரீத்த அறிமுகமாவது ஒரு பார்ட்டியில். ராகுலிற்கும் ப்ரீதாவிற்குமான ஒத்த சிந்தனை அலைவரிசை அவர்களை நண்பர்களாக்குகின்றது.இயற்கை குறித்தும்,இலக்கியம் குறித்துமான இவர்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ப்ரீதா கதாபாத்திரத்தில் மெல்லிய புன்னகையோடு,அளவான உணர்ச்சி வெளிபாட்டோடு வெகு சிறப்பாய் நடித்துள்ளார் ரெய்மா சென்.எப்பொதும் பறவையின் சிறகை வேண்டும் ப்ரீதாவிற்கும்,பணத்தின் மீதே ஆவல் கொண்டிருக்கும் அமீதிற்குமான தோய்ந்த மணவாழ்க்கை
வெகு சில காட்சிகள் கொண்டு விளக்கபடுகின்றது.



இத்திரைப்படத்தின் மற்றொரு கதாபாத்திரம் கஞ்சன்ஜங்கா மலைதொடர்ச்சி.பணி நிமித்தமாய் கொல்கத்தாவில் இருந்து அங்கு செல்லும் ராகுல்,அம்மலை தொடர்ச்சியின் அழகில் மூழ்கி புத்த பித்து சிறுவன் ஒருவனோடு,அம்மலையின் அமைதியை ரசிக்கும் காட்சி இயற்கையின் பிரம்மாண்டங்கள் மீதான ஆச்சர்யத்தை அதிகரிக்க செய்வது.நிலவொளியில் கஞ்சன்ஜங்கா மலையின் பேரழகை ராகுல் காண்பது மற்றொரு உன்னத காட்சி.ராகுலை காண கஞ்சன்ஜங்கா செல்லும் ப்ரீத்தாவின் பார்வையில் இந்த காட்சிகள் யாவும் மீண்டும் விரிகின்றன..அந்த இரவு அவர்கள் இயற்கையின் பேரழகை ரசிக்கும் மௌனத்திலேயே கழிகின்றது.ராகுலின் எதிர்பாரா மரணம்,சொந்தங்களால் துரத்தி அடிக்கபடும் ப்ரீதா,ராகுல்-ப்ரீத்தாவின் உறவு குறித்த குழப்ப மனநிலையில் நந்திதா என அதற்கு பின்னான காட்சிகள் அதிர்ச்சி தருபவை.நந்திதா,ராகுல் மேல் கொண்டிருந்த தீரா காதலும்,முழுமையான புரிதலும் மட்டுமே ப்ரீதாவை மீட்டெடுக்கின்றது.

இயக்குனர் அனிருத்தாவிற்கு முதல் படமான இது 2008 ஆம் ஆண்டு தேசிய விருதை பெற்றுள்ளது.முதிர்ச்சியான காட்சியமைப்பு..சிறப்பான நடிகர்கள் தேர்வு..முக்கியமாய் ராகுல் மற்றும் ரெய்மாவின் அலட்டி கொள்ளாத நடிப்பு,கூர்மையான வசனங்கள்,எழில் கொஞ்சும் கஞ்சன்ஜங்கா என சொல்லி கொண்டே போகலாம் ரசித்தவற்றை.சுலபத்தில் இக்கதை மாந்தர்கள் மனதை விட்டு அகல மாட்டார்கள்.மனித உறவுகள் அழகானவை,தொடர்ந்து இயங்க அதன் அற்புத கணங்கள் எப்போதும் நம்முள்ளே இருப்பது அவசியம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றது இத்திரைப்படம்.