Thursday, December 6, 2012

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை"


"இந்த மண்ணை,மக்களை,மொழியை,முந்திரிகளை விட்டு விட்டு எங்கேயோ ஒரு நகர காட்டுக்குள் அடைபட்டு,உயிரற்றவர்களை எழுத நேர்த்திடாதவாறு ஓர் எதிர்காலம் எனக்கு வாய்க்குமானால்,அது போதும் எனக்கு."

-- கண்மணி குணசேகரன் 

இம்முறை முந்திரிக் காடுகளை விடுத்து வேறு உலகினிற்கு நம்மை கடத்திச்  செல்கிறது கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை.அரசு போக்குவரத்து துறை ஒன்றின் பகுதி நேர பணியாளர்களாய் சேரும் மூன்று இளைஞர்கள்களை சுற்றி சுழலும் கதை.நாடு,வீடு என இரண்டு பகுதிகளாய் உள்ளது.அரசாங்க உத்தியோகம்  என வெளியில் சொல்லிக்கொண்டாலும் பணி  நிச்சயமற்ற சி.எல் பதவியின் சங்கடங்களை, அவ்வூழியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை,சகித்து கொள்ள வேண்டிய அவமானங்களை அய்யனார்,தமிழ்,ஏழை முத்து என மூவரின் கதை கொண்டு சொல்ல
ப்படுகின்றது.

கடன் பட்டவனும் அங்கு இருக்கின்றான், பணம் உள்ளவனும் இருக்கின்றான்.அரசு வேலை படுத்தும்பாடு.நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நம்மிடம் பகிர 
பிரத்யேக   அனுபவங்கள் உண்டு.நாவலே ஆசிரியரின் அரசு போக்குவரத்து பணி  அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதே.பேருந்து காட்சிகள் ஆகட்டும்,போக்குவரத்து  நிலைய டிப்போ நிகழ்வுகள் ஆகட்டும் கதை என்பதை மறந்து நிதர்சனத்தின் வெகு அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு.அது வேறு உலகம்.சக ஊழியர்களோடு பணியின் ஊடே அய்யனார்  கொள்ளும் உரையாடல்கள் சிறு உதாரணம்.


தேர்வெழுதி,பயத்தின் ஊடே நேர்முக தேர்வை நிறைவு செய்தும்/தெரிந்தவர்கள் மூலமும் பணியில் சேர மூவரும் கொள்ளும் பிரயத்தனங்கள் விவரிக்கப்படுவது நிதர்சனம்.மூன்று இளைஞர்களின் வாழ்க்கை/குடும்ப பின்னணிகள் மெலிதாக தெரிவிக்கபடுகின்றன  நிறைந்த அழுத்தத்துடன்.பகுதி நேர பணியில் நிரந்தரம் அடைய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருப்பதின் அவசியத்தை சொல்லுபவை அவை.கதையின் ஊடே காதலும் உண்டு.சி.எல்  நடத்துனரான தமிழ் கொள்வது சிறுபிள்ளை காதல் எனில்,(சி.எல்  மெக்கானிக்)  அய்யனார் ஆண்டுகள் பல கடந்தது  காணும் சந்திராவிடம் கொள்ளும் பிரியம் முதிர்ச்சியானது.அவர்கள் இருவருக்குமான உரையாடல்கள் வாழ்வில் எல்லா  துயரங்களையும் கண்டு தீர்த்தவர்களின்  அசல் மொழி.

வட்டார மொழிவழக்கில் இலக்கியம் படைப்பவர்களில்,கண்மணி குணசேகரனுக்கு எப்பொழுதும் முக்கிய இடம் உண்டு. அம்மொழிவாதம் நாவலோடான  நம் நெருக்கத்தை அதிகரிக்க செய்பவை. "அண்ண...." என அன்பொழுக இம்மூவரும்,பிறரை அழைக்கும் ஒற்றை சொல் போதும் இதை விளக்க. இதன் கூட அசல் பகடியும்,நையாண்டியும் கைகூடி வருது இன்னும் சிறப்பு.நாவல் முதல் பகுதியான "வீடு" இவர்கள் பணியில் சேர்வதையும்,அதன் பொருட்டு எதிர்கொண்ட அனுபவங்களை அலுவலகம்,குடும்பம்,காதல் எல்லாமும் சேர்த்து  சொல்லி செல்கின்றது.நாவல் முழு வடிவம் பெறுவது இரண்டாம் பகுதியான "நாடு" 
வில்  தான்.

பணி  நீக்கத்தில் இருக்கும் தமிழும்,ஏழையும்  தேவாலைய திருவிழா நாளொன்றில்,ஆள் இல்லாத நிர்பந்தத்தினால் உதவாத பேருந்தொன்றை  எடுத்துக்கொண்டு பயணிகள் உடன் பெரு நகரம் சென்று திரும்புவது மட்டுமே இரண்டாம் பகுதி.இருவருக்கும் அந்த பயணம் தொடக்கத்தில் உவப்பானதாய் இல்லை.பழுதான வண்டியில் பெருங்கூட்டத்தை  ஏற்றி கொண்டு இது வரை கண்டிடாத பெரு  நகருக்கு பயணம் மேற்கொள்வது உண்டாக்கும் இயல்பான அச்சத்தோடு தொடங்கும் அவ்விரு இளைஞர்களின் பயணம்...மெல்ல மெல்ல வேகம் எடுத்து நம்மை தன்வசமாக்கி கொள்கின்றது.அவர்கள் சோர்வுறும் பொழுது நாமும் சோர்வடைந்து அவர்கள் உவகை கொள்ளும் பொழுது நாமும் மகிழ்ச்சி கொள்வது என..நாவலின் பிற்பகுதி முழுமை.எதிர்பாராத சங்கடங்களும, அழுத்தங்களும் முட்டி மோதி அவற்றை  வென்றிட துடிக்கும் மனமும்,எடுத்துக் கொண்ட செயலை நிறைவேற்றிட கொள்ளும் மனவுறுதியும் அவர்களின் பயணத்தில் பிரதிபலிப்பது, நம்  தினசரி வாழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டியவை.இனி அவர்கள் இனிதாய் வாழ்ந்தார்கள்  என முடிவுரைக்காமல்,தொடரும் அவலம் அது, தினம் உதிக்கும் சிறு நம்பிக்கையே தொடர்ந்து கொண்டு செலுத்த தேவை என்பதை நிறுவுகின்றது நாவலின் முடிவு.


நடுத்தர வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்று  பேருந்து பயணம்.நாம் தினம் எதிர்கொள்ளும் மனிதர்கள் நடத்துனரும் ஓட்டுனரும்,அவர்களின் உலகினிற்குள் சென்று வருவது வேறு அனுபவமாய் உள்ளது.அரசு துறை அலுவலங்கள் குறித்த பதிவுகள் தமிழில் இதுவரை உண்டா என தெரியவில்லை.போக்குவரத்து துறை ஊழியர்களின் அன்றாடங்களை நேர்த்தியாகவும் ,நேர்மையாகவும்  பதிவு செய்துள்ள விதத்தில் தமிழில் நெடுஞ்சாலை மிக முக்கிய பதிவு.

வெளியீடு - தமிழினி 

Thursday, July 26, 2012

காதலும் மரணமும்.....



Pedro Almodovar's "Talk To Her"

சுயநினைவை இழந்த காதலியுடன் தீரா காதல் கொண்டிருக்கும் பெனிங்கோ என்னும் அற்புத காதலனின் கதை. பேசி பேசி தீராத காதல் கணங்கள் இவனுக்கும் உண்டு! மீண்டு வருவது நிச்சயமற்ற போதும், அயர்ச்சி அற்று அவளோடு அவன் செலவிடும் மருத்துவமனை நாட்கள்...காதல் இனிது!இவர்கள் நீண்ட நாள் காதலர்கள் இல்லை,பேசி சிரித்து மகிழ்ந்தவர்கள் இல்லை,எதிர்காலம் குறித்து திட்டமிட்டவர்கள் இல்லை... அவன் காதலை சொல்லும் முன்னர் அவள் விபத்தில் சுயநினைவை இழக்கின்றாள்.பெனிங்கோவிற்கோ அது ஒரு தடை இல்லை,அன்பு செய்ய எப்பொழுதும் தயாராய் இருக்கும் பெருங்காதலன் அவன்.




விடாது அவளோடு உரையாடி தீர்க்கும் பெனிங்கோ,அவளுக்கு சொல்லும் தான் கண்ட திரைப்பட காதல் கதை ஒன்று நெகிழ்ச்சியானது.தவறான மருத்துவ ஆராய்ச்சியினால் உடல் சிறுத்து சிறுத்து விரல் அளவு ஆகிவிடும் அத்திரைப்படத்தின் நாயகன், கொண்ட காதலின் பிடியில் இருந்து தப்பிக்க காதலியின் யோனிக்குள் சென்று உயிரை மாய்கின்றான்...புனிதம்!பெனிங்கோவின் காதலும் அது போலவே சோக முடிவை அடைகின்றது. இத்திரைப்படம் இரண்டு காதல் ஜோடிகளை குறித்து பேசுகின்றது.ஏனோ பெனிங்கோவின் காதல் மட்டுமே அதிக கனத்தை கூட்டுகின்றது.அல்மொடோவரின் "ALL I KNOW ABOUT MY MOTHER" திரைப்படம் தாய்மை குறித்து பேசும்..இதுவோ தாயாகி போன காதலனின் கதை!

பெனிங்கோவின் கதாபாத்திரம் எனக்கு கதேயின்,காதல் நாயகன் "வெர்தர்" யை அதிகம் நினைவூட்டியது.17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலைய செய்த காதல் காவியம் ,கதேயின் "The sorrows of young werther".தமிழில் இந்நாவல் "காதலின் துயரம்" என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வெர்தர்,பேரழகன்,இசை கலைஞன்,பயணங்களை விரும்புபவன்,விசித்திர நாடோடி,குழந்தைகளை நேசிப்பவன்,இயற்கையின் காதலன்......வெர்தர் காதல் கொள்ளும் யுவதியோ ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவள்.இரக்கமற்ற காதலின் தீவிரத்தால் தன்னுயிரை மாய்த்து கொள்கிறான் வெர்தர்.கேட்டு சலித்த காதல் கதை போல தோன்றினாலும்,கதேயின் விவரிப்புகளால் இது பெருங்காவியம் ஆகின்றது.

காதல் பெருந்துயரம்!!


Departures : மரணத்தின் ஊடான பயணம்...

மரணம் தோற்றுவிக்கும் பயத்தில் இருந்து தப்பியவர் எவருமில்லை. தவிர்க்க விரும்பும்,நினைவில் நிறுத்த மறுக்கும் செய்திகள் மரணம் குறித்தானவை .ஜப்பானிய திரைப்படமான "Departure " முழுக்க முழுக்க மரணம் குறித்து பேசுகிறது,அமுங்கிய குரலில்.எந்த வித பதற்றமோ,ஆர்ப்பாட்டமோ இல்லாத காட்சிகளினால்/எதார்த்த வாழ்வின் நிதர்சனங்களை காட்டி மரணம் ஒரு தவம் என எடுத்துரைக்கிறது.

ஏழ்மையின் காரணமாய் இசைக் கலைஞனான நாயகன் ,இறந்தவர்களின் உடலை சுத்தம் செய்து,கடைசி நேர சடங்குகள் செய்து தரும் நிறுவனம் ஒன்றில் தவறுதலாய் பணியில் சேர்கிறான்.தொடக்கத்தில் தன் பணியை வெறுக்கும் அவனுக்கு ஒவ்வொரு இறந்த வீட்டிலும் ஒரு அனுபவம் கிடைகிறது.அதீத அன்பின் மொழி, உச்ச குரலில் ஒலிக்கும் இடங்கள் அவை .மெல்ல மெல்ல தன் பணியை நேசிக்க தொடங்குகிறான்.மரணத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் அந்த தொழில்,வருமானத்தை மீறி கற்று தரும் பாடங்கள் பல .. இறந்தவரை வெறுப்பவர் எவரும் இலர்.காட்சிகளுக்கு உயிரூட்டும் பின்னணி இசை இத்திரைப்படத்திற்கு பெரும் பலம்.




குறிப்பிட்டு சொல்ல வேண்டிய காட்சிகள் பல.குறிப்பாக அந்நிறுவனத்தில் அவன் உடன் பணி புரியும் பெண் ,விலைக்கு தகுந்தாற்போல,வேலைபாடுகள் கொண்ட வித விதமான சவ பெட்டிகளை அவனுக்கு காட்டி சொல்லுவது.."மரணத்திற்கு பிறகு உனக்கான தேர்வுகள் உனதில்லை......"! என்பது.

கதையில் உலவும் மனிதர்கள் யாவரும் அன்பை பற்றிக்கொண்டவர்கள்.அவன் நிறுவனத்தின் தலைவர்,உடன் பணிபுரியும் பெண்,அவன் பால்ய கால சிநேகிதன்,கட்டண குளியல் அறை நடத்தும் நண்பனின் தாயார்,அங்கு வரும் முதியவர் என அவன் சந்திக்கும் மனிதர்கள் யாவருக்கும் அவனிடத்து பகிர காரியங்கள் உண்டு."மரணம் முடிவு அல்ல,அடுத்த நிலைக்கு செல்வதற்கான வாசல் வழி...." என வரும் முதியவரின் கூற்று உணர்த்துவது ஏராளம்.சிறு வயதில் தன்னையும்,தாயையும் விட்டு சென்ற தந்தையை குறித்து அவன் நினைவில் இருந்து மீட்டெடுக்கும் காட்சிகள்..கவிதை!

"ஆதியில் மொழி தோன்றுவதற்கு முன்னர், மனிதர்கள் தம் உணர்வுகளை கூழாங்கற்களை பரிமாறி பகிர்ந்து கொண்டனராம்.அன்பை சொல்ல மென்மையான கற்களையும்,துயரத்தை பகிர முரடான கற்களையும் பரிமாறி கொள்வார்கள்.." என அவன் தந்தை அவனுக்கு சொல்லி சென்ற கதை ஒன்று திரைப்படத்தின் சாரத்தை உணர்த்துவது.மரணத்திற்கு முன்பான நம்முடைய தேர்வுகள் யாவும் நம்முடையதே..அதன் பொருட்டு அன்பை பரிமாறும் கற்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் கொள்ள அவசியம் இல்லை!