Thursday, December 6, 2012

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை"


"இந்த மண்ணை,மக்களை,மொழியை,முந்திரிகளை விட்டு விட்டு எங்கேயோ ஒரு நகர காட்டுக்குள் அடைபட்டு,உயிரற்றவர்களை எழுத நேர்த்திடாதவாறு ஓர் எதிர்காலம் எனக்கு வாய்க்குமானால்,அது போதும் எனக்கு."

-- கண்மணி குணசேகரன் 

இம்முறை முந்திரிக் காடுகளை விடுத்து வேறு உலகினிற்கு நம்மை கடத்திச்  செல்கிறது கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை.அரசு போக்குவரத்து துறை ஒன்றின் பகுதி நேர பணியாளர்களாய் சேரும் மூன்று இளைஞர்கள்களை சுற்றி சுழலும் கதை.நாடு,வீடு என இரண்டு பகுதிகளாய் உள்ளது.அரசாங்க உத்தியோகம்  என வெளியில் சொல்லிக்கொண்டாலும் பணி  நிச்சயமற்ற சி.எல் பதவியின் சங்கடங்களை, அவ்வூழியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை,சகித்து கொள்ள வேண்டிய அவமானங்களை அய்யனார்,தமிழ்,ஏழை முத்து என மூவரின் கதை கொண்டு சொல்ல
ப்படுகின்றது.

கடன் பட்டவனும் அங்கு இருக்கின்றான், பணம் உள்ளவனும் இருக்கின்றான்.அரசு வேலை படுத்தும்பாடு.நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நம்மிடம் பகிர 
பிரத்யேக   அனுபவங்கள் உண்டு.நாவலே ஆசிரியரின் அரசு போக்குவரத்து பணி  அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதே.பேருந்து காட்சிகள் ஆகட்டும்,போக்குவரத்து  நிலைய டிப்போ நிகழ்வுகள் ஆகட்டும் கதை என்பதை மறந்து நிதர்சனத்தின் வெகு அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு.அது வேறு உலகம்.சக ஊழியர்களோடு பணியின் ஊடே அய்யனார்  கொள்ளும் உரையாடல்கள் சிறு உதாரணம்.


தேர்வெழுதி,பயத்தின் ஊடே நேர்முக தேர்வை நிறைவு செய்தும்/தெரிந்தவர்கள் மூலமும் பணியில் சேர மூவரும் கொள்ளும் பிரயத்தனங்கள் விவரிக்கப்படுவது நிதர்சனம்.மூன்று இளைஞர்களின் வாழ்க்கை/குடும்ப பின்னணிகள் மெலிதாக தெரிவிக்கபடுகின்றன  நிறைந்த அழுத்தத்துடன்.பகுதி நேர பணியில் நிரந்தரம் அடைய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருப்பதின் அவசியத்தை சொல்லுபவை அவை.கதையின் ஊடே காதலும் உண்டு.சி.எல்  நடத்துனரான தமிழ் கொள்வது சிறுபிள்ளை காதல் எனில்,(சி.எல்  மெக்கானிக்)  அய்யனார் ஆண்டுகள் பல கடந்தது  காணும் சந்திராவிடம் கொள்ளும் பிரியம் முதிர்ச்சியானது.அவர்கள் இருவருக்குமான உரையாடல்கள் வாழ்வில் எல்லா  துயரங்களையும் கண்டு தீர்த்தவர்களின்  அசல் மொழி.

வட்டார மொழிவழக்கில் இலக்கியம் படைப்பவர்களில்,கண்மணி குணசேகரனுக்கு எப்பொழுதும் முக்கிய இடம் உண்டு. அம்மொழிவாதம் நாவலோடான  நம் நெருக்கத்தை அதிகரிக்க செய்பவை. "அண்ண...." என அன்பொழுக இம்மூவரும்,பிறரை அழைக்கும் ஒற்றை சொல் போதும் இதை விளக்க. இதன் கூட அசல் பகடியும்,நையாண்டியும் கைகூடி வருது இன்னும் சிறப்பு.நாவல் முதல் பகுதியான "வீடு" இவர்கள் பணியில் சேர்வதையும்,அதன் பொருட்டு எதிர்கொண்ட அனுபவங்களை அலுவலகம்,குடும்பம்,காதல் எல்லாமும் சேர்த்து  சொல்லி செல்கின்றது.நாவல் முழு வடிவம் பெறுவது இரண்டாம் பகுதியான "நாடு" 
வில்  தான்.

பணி  நீக்கத்தில் இருக்கும் தமிழும்,ஏழையும்  தேவாலைய திருவிழா நாளொன்றில்,ஆள் இல்லாத நிர்பந்தத்தினால் உதவாத பேருந்தொன்றை  எடுத்துக்கொண்டு பயணிகள் உடன் பெரு நகரம் சென்று திரும்புவது மட்டுமே இரண்டாம் பகுதி.இருவருக்கும் அந்த பயணம் தொடக்கத்தில் உவப்பானதாய் இல்லை.பழுதான வண்டியில் பெருங்கூட்டத்தை  ஏற்றி கொண்டு இது வரை கண்டிடாத பெரு  நகருக்கு பயணம் மேற்கொள்வது உண்டாக்கும் இயல்பான அச்சத்தோடு தொடங்கும் அவ்விரு இளைஞர்களின் பயணம்...மெல்ல மெல்ல வேகம் எடுத்து நம்மை தன்வசமாக்கி கொள்கின்றது.அவர்கள் சோர்வுறும் பொழுது நாமும் சோர்வடைந்து அவர்கள் உவகை கொள்ளும் பொழுது நாமும் மகிழ்ச்சி கொள்வது என..நாவலின் பிற்பகுதி முழுமை.எதிர்பாராத சங்கடங்களும, அழுத்தங்களும் முட்டி மோதி அவற்றை  வென்றிட துடிக்கும் மனமும்,எடுத்துக் கொண்ட செயலை நிறைவேற்றிட கொள்ளும் மனவுறுதியும் அவர்களின் பயணத்தில் பிரதிபலிப்பது, நம்  தினசரி வாழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டியவை.இனி அவர்கள் இனிதாய் வாழ்ந்தார்கள்  என முடிவுரைக்காமல்,தொடரும் அவலம் அது, தினம் உதிக்கும் சிறு நம்பிக்கையே தொடர்ந்து கொண்டு செலுத்த தேவை என்பதை நிறுவுகின்றது நாவலின் முடிவு.


நடுத்தர வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்று  பேருந்து பயணம்.நாம் தினம் எதிர்கொள்ளும் மனிதர்கள் நடத்துனரும் ஓட்டுனரும்,அவர்களின் உலகினிற்குள் சென்று வருவது வேறு அனுபவமாய் உள்ளது.அரசு துறை அலுவலங்கள் குறித்த பதிவுகள் தமிழில் இதுவரை உண்டா என தெரியவில்லை.போக்குவரத்து துறை ஊழியர்களின் அன்றாடங்களை நேர்த்தியாகவும் ,நேர்மையாகவும்  பதிவு செய்துள்ள விதத்தில் தமிழில் நெடுஞ்சாலை மிக முக்கிய பதிவு.

வெளியீடு - தமிழினி