Wednesday, November 4, 2015

வானெங்கும் உனது பின்பம்..


"ஹாலிவுட் திரைப்படங்கள் பார்வையாளனை உணர்ச்சிவசப்பட வைப்பதை தவிர்த்து வேறொன்றும் செய்வதில்லை.என் திரைப்படங்களின் மூலம் நான் சாதிக்க விரும்புவதெல்லாம் அவ்வுணர்ச்சிகளை நிஜத்தில் பிரதிபலிக்கவும்,அதைக் குறித்து ஆராயவும் என் பார்வையாளனை தூண்டுவதே.."

- வெர்னர் பாஸ்பிண்டர்





ஜெர்மானிய சினிமாவில் புதிய அலை உருவாக காரணமானவர்களில் மிக முக்கியமானவர் வெர்னர் பாஸ்பிண்டர்.பத்தாண்டு கால திரைவாழ்வில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ள வெர்னர், அவற்றின் தனித்த அடையாளத்திற்காய் உலகின் கவனத்தை பெற்றவர். நடிகர், கதாசிரியர்,ஒளிப்பதிவாளர், எடிட்டர் என பல்வேறு முகங்களைக் கொண்ட வெர்னர்,மிக குறுகிய காலத்திற்குள் சினிமாவில் சாதித்தது அத்துறை மீதான அவரது பேரன்பைச் சொல்லுவது.சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் வெர்னரின் படங்கள்,எதார்த்த விவரிப்புகளால் நம்மை அதிர்விற்குள்ளாக்குவதோடு தீவிர சிந்தனைக்கும் உட்படுத்துகின்றன.The Marriage of Maria Braun,Veronika Voss,Berlin Alexanderplatz முதலான வெர்னரின் குறிப்பிட தகுந்த படைப்புகளுள் பரந்த கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்ற திரைப்படம் Ali:Fear Eats The Soul.

சமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் காதல்,உலகப்போரின் விளைவாக குணம் மாறிப்போன மனிதர்கள்,சமூகத்தை எதிர்கொள்ள முடியாத முதியவளின் உளவியல் என இத்திரைப்படம் தொட்டுச் செல்லும் விஷயங்கள் ஏராளம்.ஒரு மழை இரவில் மதுவிடுதியொன்றில் நுழையும் முதியவள் எம்மி அங்கு ஒலிக்கும் அரேபிய இசையை கேட்கவே தான் வந்ததாக கூறுகிறாள். கவித்துவ பயணமொன்றிற்கு தயார் செய்து கொள்ள தூண்டும் அந்த முதல் காட்சியே நம்மை படத்தோடு ஒன்றிட செய்கிறது.60 வயதான எம்மி அங்கு மொரோக்கோ தேசத்து இளைஞனான அலியை சந்திக்கிறாள்.நண்பர்களின் கிண்டல்களுக்கு மத்தியில் எம்மியோடு நடனமாடிடும் அலி அம்முதியவளோடு சிநேகம் கொள்கிறான்.


ஒரு தாயின் அரவணைப்போடு அவனை அணுகிடும் எம்மி அவனது காதலை ஏற்றுக்கொள்ள தடுமாறுகிறாள்.தன் வயதை அவன் ஒரு பொருட்டாக கருதாதது அவளுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆச்சர்யமே.அவனோ அவள் மீது கொண்ட காதலில் உறுதியாய் இருக்கிறான்.ஒரு அரபு தேசத்து இளைஞனை தான் மணமுடிக்கப் போவதாய் மகளிடமும் மருமகனிடமும் எம்மி கூறிட,அவர்கள் அவளை நம்பாமல் சிரித்து கேலி செய்கின்றனர்.அவ்விருவரின் ஏளன பார்வை ஒட்டு மொத்த சமூகத்தின் பார்வையை குறிப்பது.மழை ஓய்ந்த ஒரு பகல் பொழுதில்,தங்களின் திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் அலியும் எம்மியும் தாங்கள் நினைத்ததை விட மிக மோசமான எதிர்வினையை சந்திக்க நேரிடுகிறது. எம்மியாக நடித்துள்ள மிரா,தன் இயல்பான நடிப்பால் நம்மை வசீகரிக்கிறார்.

அவர்களுக்கிடையேயான வயது வித்தியாசம் ஒரு பேசுபொருள் எனில் மற்றொன்று அலி, அரபு தேசத்தைச் சேர்ந்தவன் என்பது.அரேபியர்கள் சுத்தமற்றவர்கள்,தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள்,பெண்களை ஏமாற்றுபவர்கள் என உலவும் வதந்திகளை நம்புகிற சமூகம் அவர்களுடையது. அக்கம்பக்கத்து வீட்டு பெண்கள்,உடன் பணிபுரியும் தோழிகள்,வருட கணக்காக நட்போடு இருந்த மருந்துக்கடைகாரர் என எம்மிக்கு வேண்டியவர்கள் அனைவரும் அலியை வெறுக்கின்றனர்.அதனால் எம்மியோடான தங்களின் நட்பை முறித்துக் கொள்கின்றனர்.அவளது பிள்ளைகளோ பெரும் கூச்சலிட்டு அவளோடு சண்டையிட்டு பிரிகின்றனர்.அலியை அவ்விடம் இருந்து வெளியேற்ற குடியிருப்புவாசிகள் நாடகங்கள் நிகழ்ந்துகின்றனர்.எம்மி ஒரு இளைஞனை மணந்துள்ளால் என்பதைக் காட்டிலும் ஒரு அரேபியனை மணந்துள்ளால் என்பதே அவர்களின் வன்மத்திற்கு காரணமாக இருக்கிறது.ஜெர்மானிய சமூகம் கொண்டிருந்த நிறவெறியின் தாக்கத்தை அலியின் நிலை கொண்டு நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.




காதலின் மேன்மையை உணர்ந்த அவ்விருவரும் செய்வதறியாது சிக்கித் தவிக்கும் பொழுதொன்றில்,யாருமற்ற பூங்காவில் எம்மி அலியின் கைப்பற்றி அழுதிடும் காட்சி உருக்கமானது.அவனை புறக்கணிக்கும் சமூகத்தின் மீதான தன் கோவத்தை சொல்லி வீரிட்டு அழுதிடும் எம்மியை தேற்றுகிறான் அலி.அவளைப் போல எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவனில்லை அவன். அலியின் தீர்க்கமான குணாதிசியங்கள் அபூர்வமாய் காணக்கிடைப்பவை.தன்னை வெறுத்து ஒதுக்கும் மனிதர்களிடம் குறை காணாத அவன் முன்னே அச்சமுகமே சிறுமைப்பட்டு போவதாய் தோன்றுகிறது.அந்த அசாதாரண சூனியத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் சிறிது நாட்கள் வேறு ஊருக்கு பயணப்படுகின்றனர்.

ஊர் திரும்பும் அவர்களுக்கு இம்முறை பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.எம்மியை விட்டு விலகியவர்கள் அனைவரும் இப்பொழுது அவளிடம் வலிய வந்து நட்பு பாராட்டுகின்றனர். அவளிடம் உதவி கேட்கின்றனர். பிள்ளைகள் தேடி வருகின்றனர்.பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் கைகூடிய மகிழ்ச்சியில் எம்மி, அலியிடம் சற்று கடினமாக நடந்து கொள்கிறாள். ஜெர்மானியர்களின் பழக்கவழக்கங்களை அவன் கற்றுக் கொள்ள வலியுறுத்துகிறாள்.முதல் முறை அவன் தான் தனித்து விடப்பட்டதை உணர்கிறான்.எம்மியிடம் சொல்லாமல் அவன் தன் தோழியோடு சென்று தங்குகிறான்.அவர்கள் மீண்டும் இணைந்தார்களா, எம்மியினால் அவன் அன்பை மீண்டும் பெற முடிந்ததா என்பது தீராக் காதலின் அழகினையொத்த இறுதிக் காட்சிகள்.

சமூகம் ஏற்றுக் கொள்ளாத அல்லது ஏற்றுக் கொள்ள தயங்கும் காரியங்களை எதார்த்தத்தை விட்டு கொஞ்சமும் விலகிடாமல் அழுத்தமாக பதிவு செய்துள்ள இத்திரைப்படம் ஒரு இனிய காதல் கதை என்பதைத் தாண்டி நமக்கு கடத்திடும் விஷயங்கள் உணர்வுப்பூர்வமானவை.Ali:Fear Eats The Soul பாஸ்பிண்டரின் உலகை அறிந்து கொள்ள உதவிடும் நிகரற்ற படைப்பு.இளவயதில் மரணித்து விட்ட வார்னர் தன் நிகரற்ற படைப்புகளின் வழி தொடர்ந்து பார்வையாளோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.போதைப் பொருளுக்கு அடிமை, ஓரின சேர்க்கையாளர் என தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கலகக்காரன் என பெயரெடுத்த வெர்னர் பாஸ்பிண்டர்,தன் திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யங்களின் முரண்.

Thursday, May 14, 2015

என் பெயர் சிகப்பு - ஓரான் பாமுக்




"நிறம் என்பது கண்ணின் தொடுகை,செவிடனுக்கு இசை,இருட்டிலிருந்து வெளிப்படும் ஒரு வார்த்தை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளால ஒவ்வொரு புத்தகத்திலும்,ஒவ்வொரு பொருளிலும் ஆன்மாக்கள் - காற்றின் முணுமுணுப்பை போல - கிசுகிசுப்பதை நான் கேட்டிருப்பதால், என் தொடுகை தேவதைகளின் தீண்டலை ஒத்திருக்கிறது என்று சொல்லுவேன். சிவப்பாக இருப்பது என் அதிர்ஷ்டம். நான் மூர்க்கமானவன். நான் வலிமையானவன். எவ்விடத்திலும் மனிதர்கள் என்னை கவனிப்பார்கள் எனத் தெரியும்.நான் கட்டுப்படுத்த முடியாதவன்.."

ஒரு மாபெரும் கலாச்சாரத்தை,அதன் தொன்மச் சுவடுகளின் வழி ஊடுருவிச் சென்று காணும் வாய்ப்பை தன வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் ஓரான் பாமுக்.16ம் நூற்றாண்டு துருக்கியின் ஓட்டான் சாம்ராஜ்யத்தில் நடைபெறும் கதை.ஓவியக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த மூன்றாம் சுல்தான் மூராத்தின் ஆணையின் கீழ் சித்திர சுவடிகளை வரைய முற்பட்ட நுண்ணோவியர்களின் வாழ்வரசியல் குறித்து விரிவாய் பேசுகிறது. நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனுடன் நேரடியாக பேசி கதையை விளக்குகின்றன.இங்கு கதாபாத்திரங்கள் என்பது மனிதர்கள் மட்டும் அல்ல..ஓவியங்களும் பிரேதமும் கூட.

எனிஷ்டே,ஓஸ்மான் ஆகிய ஓவியக் ஆசான்கள்,அவர்களின் சீடர்களான (புனைபெயர்களால் அழைக்கப்படும்)வசீகரன்,ஆலிவ்,நாரை, வண்ணத்துப்பூச்சி..மற்றும் எனிஷ்டேவின் மருமகன் கருப்பு,மகள் ஷெஹூரெ அவளது குழந்தைகள் ஓரான்,ஷெவ்கத்,ஷெஹூரெவின் கொழுந்தன் ஹசன் ஆகியோரைச் சுற்றி நகரும் கதையில் சுவாரஸ்யங்களுக்கு குறையில்லை. இவர்களுக்கு தொடர்பில்லாத யூதப் பெண்ணான வாயடி எஸ்தரின் மீது நம்மையும் அறியாமல் ஒரு நெருக்கம் பற்றிக் கொள்கிறது.அவள் கூவி விற்கும் பட்டாடைகள்,கைக்குட்டைகளின் வண்ணங்களைப் போல கலவையான குணம் கொண்ட பெண்ணவள்.பேரழகி என யாவராலும் வர்ணிக்கப்படும் ஷெஹூரெ காதலின் நிமித்தம் ஆண்களிடம் பகடையாட்டம் ஆடும் பெண்களின் குறியீடு.நிலையற்ற மனம் கொண்டு பேதலிக்கும் அவள்,நம்மை வசீகரிப்பது தம் பிள்ளைகள் இருவரோடு கொண்டிருக்கும் தூய அன்பினால் மட்டுமே.

ஓவிய மெருகாளன் வசீகரன், கொலையாகும் காட்சியோடு துவங்கும் நாவல் அவனது கொலையாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்போடு 100 ஆண்டுகால பாரசீக ஓவியக் கலையின் வரலாறையும் பேசிச் செல்கிறது. நுண்ணோவியர்கள் மத்தியில் காலங் காலமாக புகைந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு,பொறாமை குணத்திற்கு,ஓவியனின் தனித்த பாணியின் மீதான விமர்சனங்களுக்கு,மதச் சம்பிரதாயங்களுக்கு விடை தேடும் எண்ணற்ற உரையாடல்கள். விவாதங்களுகிடையே மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் நூல்கள் (பேரரசர்களின் நிகண்டு,ஹூஸ்ராவ் -ஷிரின் ..) மற்றும் ஓவியங்கள் வாசகனுக்கு சாவாலாக அமைபவை.குறிப்பாக காதலர்கள் ஹூஸ்ராவ் - ஷிரின் இருவரின் சந்திப்புக்கள் ஓவியமாக காட்சிப்படுத்தபட்டதை குறித்த விவரணைகள் அவ்வோவியங்களை தேடிப் பார்த்திடும் ஆவலை தூண்டுவது.

ஓட்டோமான் சுல்தானின் கருவூலத்தில் ஓவியர் ஒஸ்மானும் கருப்பும் செலவழிக்கும் அவ்விரு நாட்களில் - உலகின் நான்கு புறங்களில் இருந்தும் வந்து சேர்ந்த மாபெரும் ஓவியங்களை அவர்கள் கண்டு வியந்து விவாதிக்கும் பொழுதுகள் அற்புதமானவை.அவ்வோயியங்களுக்கு மத்தியில் நாமே நடப்பதாய்,மிதப்பதாய் ஒரு மாயை.வசீகரனின் கொலையாளி- நாரை, ஆலிவ்,வண்ணத்துப்பூச்சி இவர்களுள் ஒருவன் தான் என தெளிவாகி தேடல் பயணம் தொடரும் வேளையிலும் கொலைகாரன் தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு நம்மோடு உரையாடுகிறான்.நாவலோடு நாம் இணக்கம் கொள்வதற்கு இவ்வகை கதை சொல்லலும் ஒரு காரணி.

பிற தேச ஓவியங்களை நகல் எடுத்தல்,மததுவேஷ் ஓவியங்களை வரைதல் உள்ளிட்ட விஷயங்களே திரும்ப திரும்ப விவாதிக்கப்படுவது சிறிது அயர்ச்சியே.சாத்தானின் வாயிலாக மதவெறியர்களின் மற்றொரு பக்கத்தை சுட்டிக் காட்டுவது ஆசிரியரின் சார்பின்மையின் அடையாளம்.நூற்றாண்டுகள் கடந்து வந்த ஓவியக்கலையின் மகத்துவத்தை,ஓவியங்களை குறித்த விரிவான பார்வையை முன்வைக்கும் அதே வேளையில் ஒரு இலக்கிய வாசகனாய் இந்நாவல் குறித்து யோசித்தால்..ஜெமோவின் இவ்வரிகளே நினைவுக்கு வருகின்றன.

"என் பெயர் சிவப்பு’-ஐ நாம் துருக்கியை அறிந்துகொள்ள, ஐரோப்பியப் பண்பாடு கீழைப்பண்பாட்டுடன் கலந்த ஒரு தருணத்தை அறிந்துகொள்ள, கீழைக்கலைமனம் மேலைக்கலையை சந்திக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள வாசிக்கலாம்.ஆனால் பேரிலக்கியங்களை நாம் நம்மைப்பற்றி அறிந்துகொள்ளவே வாசிக்கிறோம்.."
- ஜெயமோகன்

சில எதிர்பார்ப்புகள் பொய்த்திருந்தாலும் நோபல் பரிசு வென்ற இம்மாபெரும் எழுத்தாளனின் பிற படைப்புகளை தேடி வாசிக்கும் ஆவலை தந்து விடுகின்றது 'என் பெயர் சிகப்பு'.ஓரான் பாமுக்கின் வர்ணனனையில் இஸ்தான்புல் நகரின் அழகை வாசிக்கும் விருப்பத்தை வித்திட்டுள்ளது இந்நாவல்.

வெளியீடு - காலச்சுவடு
தமிழில் - ஜி.குப்புசாமி